Monday, February 27, 2006

சலுகைகள் ஏன் தேவை?

இந்த கட்டுரையின் முதல் பாகம் இங்கே.நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் பழனிசாமி ஒரு தாழ்த்தப்பட்டவர். அவருக்கு இப்போது வயது 40 இருக்கலாம .அவர் வங்கியில் பியூனாக சேர்வதற்கு முன் செய்த வேலைகளை எல்லாம் இங்கே எழுத முடியாது. கூலி வேலைகளுக்கு போயிருக்கிறார் .மூட்டை தூக்கியிருக்கிறார். ஓட்டலில் வேலை செய்திருக்கிறார். இதன் பிண்ணனியில் பார்த்தால் அவர் இன்று ஒரு வங்கியில் கிளார்க் (கேஷியர்) ஆகியிருப்பதின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ளமுடியும்.

அவருடைய வீடு என்பது ஒரு சிறுகுடிசைதான்.அதில் அவர், அவருடைய மனைவி, மூன்று மகன்கள் அனைவரும் வாழ்கின்றனர்.வாயில்லா பூச்சியான அவர் சில பியூன்கள் கேட்பதுபோல் வங்கியின் வாடிக்கையாளர்களிடம் இனாம் கேட்கமாட்டார்.ஆனால் தன் சொந்த செலவில் (ஆமாங்க..சொந்த செலவில்) வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார்.

அவரின் மூன்று குழந்தைகளுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தர அவரால் இன்று முடியும் . அவர் முன்னேறியதும் இல்லாமல் ஒரு தலைமுறையே முன்னேற வழிவகை அமைத்தது இடஒதுக்கீ்ட்டு கொள்கை மற்றும் அரசாங்க சலுகைகள்தான். சலுகைகளை எதிர்த்து நானும் பேசியிருக்கிறேன்.வாதம் செய்திருக்கிறேன்.( என் துக்ளக் நாட்களில்).ஆனால் அதை விட்டு கீழே இறங்கி மக்களை பார்த்தால்தான் தெரியும் நமது சமுதாய அமைப்பின் கோர முகம்.இது போல் எத்தனை பழனிசாமிகள் இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்.ஒவ்வொரு சேரிகளிலும் இன்றும் இது போன்று பல்லாயிரம் பழனிசாமிகளை பார்க்கமுடியும்.வாய்ப்பும் வழி காட்ட ஆட்களும் கிடைத்தால் அவர்களும் ஒரு நாகரீகமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.


பத்தாம் வகுப்பிலேயே இப்படி தடுமாறியவர் எப்படி அலுவலக வேலைகளை செய்வார் என்பது அறிவுஜீவிகளின் அடுத்த கேள்வி. எல்லோருக்கும் தெரியும். நாம் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்பது.


நான் கல்லூரி காலத்தில் பார்த்திருக்கிறேன். பொள்ளாச்சி அருகில் ஏ.நாகூர் என்ற ஊரில் ஒரு பள்ளியில் படித்துவிட்டு சில மாணவர்கள் வருவார்கள். மதிப்பெண் எல்லாம் ப்ளஸ் டு வில் ஆயிரத்திற்கு மேல்தான்.ஆனால் படிக்கும் முறையை கண்கொண்டு பார்க்கமுடியாது.(இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாது).


வங்கியில் இன்றைய நிலையில் எல்லா வேலையும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதுதான்(டேட்டா என்ட்ரி) ஒரே வேலை. தேவையான கட்டுபாடுகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. கவுண்ட்டரில் அமரும் ஒரு நபரிடம் இன்று முக்கியமாக எதிர்ப்பார்க்கப்டுவது சிரித்த முகத்துடன் மரியாதையாக, வரும் வாடிக்கையாளரிடம் பேசவேண்டிய முறை.அது பழனிசாமியிடம் நிறையவே உள்ளது.அது போதும் என்று நான் நினைக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக பழக்கம் என்று ஒன்று உள்ளது. ஒரு மூன்று மாத பழக்கத்தில் பழனிசாமியால் எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்ளமுடியும் என்றே நம்புகிறேன்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில இருந்து நிறைய பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் வங்கிதுறையில் முன்னேறி வருவது எனக்கு சந்தோஷத்தை தருகிறது.இது எதனால் வந்த விழிப்புணர்ச்சி என்று எனக்கு தெரியாது.ஆனால் இதற்கு பெரியாரும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

மிக சமீபமாக வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் சமாச்சாரம் ஒரு முக்கிய காரணம்.1990 களில் தான் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இடஒதுக்கீடு அமலாகி இருப்பது என்பது எனக்கெல்லாம் ஒரு அச்சர்யகரமான அதிர்ச்சியாகவே உள்ளது. சுதந்திரம் பெற்ற நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு தான் இது நடந்துள்ளது என்று பார்க்கும்போது நமது அரசியல்வாதிகளின் கமிட்மெண்ட் லெவல் கேள்விக்குறியதாகிறது.

வி.பி.சிங் நிஜமாகவே ஒரு வரலாற்று நாயகர் என்றால் மிகையில்லை.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.நான் அப்போது பள்ளி மாணவன்.ராஜீவ்காந்தி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தார் சிங். முதலில் நிதி அமைச்சகமா அல்லது பாதுகாப்பா என்ற ஞாபகம் இல்லை.ஆனால் முதலில் ஒரு ஊழலை கண்டுபிடித்ததால் துறை மாற்றப்பட்டு அங்கும் ஒரு ஊழலை வெளிகொணர்ந்து புனித பிம்பம் ராஜீவை தோலுரித்தார்.


சில நாட்களுக்கு முன் இங்கே வலைப்பதிவில் ஒரு நண்பர் சர்வ சாதாரணமாக வி.பி.சிங் தான் போர்பர்ஸ் விஷயத்தில் கையூட்டு பெற்ற குற்றவாளி என்ற அளவிற்கு ஒரு கருத்தை போட்டார்.அதிர்ச்சி அடைந்தேன்.சுதந்திர இந்தியாவில் மீடியாவின் பங்கு என்ன என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.தங்களுக்கு பிடிக்காத ஆட்களை பற்றிய பிம்பத்தை நன்றாக கட்டமைக்கின்றன இந்திய மீடியாக்கள்.


நான் மேற்சொன்ன பதிவில் சொல்லியிருந்தப்படி மண்டல் கமிஷனை கைகழுவிவிட்டிருந்தால் வி.பி.சிங் பதவியில் தொங்கிக் கொண்டிருந்திருக்கமுடியும்.அவர் அதை செய்ய நினைக்கவில்லை என்பதிலிருந்து வி.பி.சிங் அவர்களுக்கான வரலாற்று இடம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என் கொள்ளலாம்.


யுகம் யுகமாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற அரசாங்கமும் கைகொடுக்காவிட்டால் யார் வருவார்கள்?ஆனால் இன்னொருபுறம் அரசாங்கத்தின் இன்னொரு கூத்தை பாருங்கள்.

வரும் மார்ச் ஒன்பதாம் நாள் அனைத்திந்திய வங்கி ஊழியர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.. அரசாங்கத்தின் எத்தனையோ கொள்கைகளை வங்கி ஊழியர்கள் எதிர்த்துக்கொண்டு இருந்தாலும் இந்த முறை வேலைநிறுத்தம் செய்வதற்கான காரணம் வேறு.


வங்கிகளில் பணியில் இருக்கும்போது ஒரு ஊழியர் இறந்தால் வாரிசுக்கு வேலை தருவது (Compassionate grounds appointment) என்று ஒரு முறை உண்டு.அவ்வாறு கொடுக்கப்படும் வேலை கிளார்க்காகவோ அல்லது பியூனாகவே அவர்களின் படிப்புக்கு ஏற்றவாறு தரப்படும்.பத்தாவது படித்த யாரும் வங்கி கிளார்க் வேலையை செய்யமுடியும்.யாரும் இந்த முறையில் நேரடியாக யாரையும் ஜெனரல் மானேஜராக சேர்க்கப்படுவதில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.


தனியார் துறையில் இதுவெல்லாம் இல்லையே ஆகையால் அரசும் இதுபோன்ற சலுகைகள் எல்லாம் கொடுக்கக்கூடாது என்று நெகடிவ்வாக திங்க் செய்பவர்கள் இதுபோன்ற விஷயங்களை தனியார் துறைகளுக்கும் கொண்டுவருவது எப்படி என்று பாஸிடிவ்வாக திங்க் செய்யலாம்.


ஒருகுடும்பத்தில் சம்பாதித்துக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவன் திடீரென்று இறந்துவிட்டால் அந்த குடும்பத்தை சப்போர்ட் செய்யவேண்டி அமைக்கப்பட்ட நல்ல திட்டம் அது. ஆண்டுதோறும் வங்கிகளில் புதிதாக ஆட்கள் நியமிக்க தேவை இருந்துக்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய சதவீதத்தை இப்படி எடுத்துக்கொண்டால் ஒன்றும் குடிமுழுகிபோய்விடாது என்பது என் எண்ணம்.


ஆனால் அரசாங்கம் இந்த முறையையும் கைவிட சொல்லி வங்கிகளை வலியுறுத்தி வருகிறது.இதை எதிர்த்துத்தான் இந்த வேலைநிறுத்தம்.இதற்கு சிந்திக்கும் பொதுமக்களின் ஆதரவை வேண்டுகின்றனர் ஊழியர்கள். ஏற்கனவே ஏகப்பட்ட ஏ.டி.எம் கள் உள்ளதால் பணத்தேவைக்கு எந்த பிரச்சினையும் இராது.(இதற்காக அரசுத்துறை வங்கிகளில் இருந்து அக்கவுண்ட்டை குளோஸ் செய்து ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகளுக்கு செல்பவர்கள் பணம் வசூலிக்க உருட்டுக்கட்டை சகிதம் ஆட்கள் வருவார்கள் என்பதை மனதில் இறுத்தி கொள்வது அவசியம்.)


ஆகவே வேலைநிறுத்த நாளன்று நீங்கள் வீதியில் நடக்கும்போது வங்கி ஊழியர்கள் யாராவது ஜிந்தாபாத் போட்டுக்கொண்டிருந்தால் அவர்களை திட்டாமல் உங்கள் ஆதரவை அவர்களுக்கு தெரிவி்த்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.தொடர்புடைய பதிவாக இந்திய அரசுத்துறை வங்கிகளை பற்றிய என் பழைய பதிவையும் படிக்கலாம்.

Sunday, February 26, 2006

பழனிசாமி முன்னேறியது எப்படி?

தங்கமணியின் பதிவில் வந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையையும் அதன் பின்னூட்டங்களையும் படித்த பிறகு இந்த பதிவை எழுதுகிறேன்.இந்த பதிவை அந்த கட்டுரையுடன் எப்படி தொடர்பு படுத்த முடியும் என்பதை படிப்பவர் பார்வைக்கே விடுகிறேன்.

விஷயத்திற்கு வருவோம்.யார் இந்த பழனிசாமி என்ற கேள்வி உங்களுக்கு வருவது நியாயம்தான்.இவர் எங்கள் வங்கியில் பியூனாக இருந்தார். இவரைப்பற்றி கூறுவதற்கு முன் வங்கியில் ஊழியர்கள் கிரேடு எப்படி அமைக்கப்படுகிறது என்பது பற்றி சில தகவல்கள்.

கீழ் அடுக்கு பியூன்.இவர்கள் யூனிபார்ம் அணிந்துக்கொண்டு ஃபைல் சுமப்பது, ரூபாய் நோட்டுக்களை கட்டுவது மற்ற பிற வேலைகளை செய்வார்கள் .

நடு அடுக்கு கிளார்க் எனப்படும் குமாஸ்தாக்கள். கேஷியர் எல்லாம் இதில்தான் வருவார்கள் கிளார்க் என்ற வார்த்தையை சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு கேஷியர் என்றே சொல்லி திரிவோம். நான் கிளார்க்காகத்தான் வங்கியில் சேர்ந்தேன்.

மூன்றாவது மற்றும் அதிகார வர்க்கம் ஆபிஸர்கள்.இதில் ஏழு படி உண்டு. ஏழாவது படிதான் ஜெனரல் மானேஜர் .இதற்கு மேல் மற்ற வங்கிகளுக்கு ஈ.டி(E.D) ஆகவும் பிறகு சி .எம்.டி(C.M.D) ஆகவும் போகலாம். நான் இந்த அதிகார வர்க்கத்தில் இரண்டாவது படியிலும் நம்முடைய டி.பி.ஆர் .ஜோசப் ஆறாவது படியிலும் இருக்கிறோம் என்று சொன்னால் உங்களுக்கு இதைப்பற்றி கொஞ்சம் புரியும்.மற்ற அரசு துறைகள் போல் பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருந்தால் பிரமோஷன் தானாக எல்லாம் வராது. திறமை முக்கியம்.இதனால்தான் டி .பி.ஆரை பார்த்தால் எனக்கு ஒரு பயம் அல்லது மரியாதை என்று வைத்துக்கொள்வோமே .


மீண்டும் விஷயத்திற்கு வருவோம

நம்முடைய பழனிசாமி பத்தாம் வகுப்பில் 98 மதிப்பெண்கள் எடுத்தவர் .ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு பாடத்திலும் எடுப்பதற்கு பதிலாக ஐந்து பாடத்திலும் சேர்த்து எடுத்துவி்ட்டார். பத்தாவது வகுப்பில் ஃபெயில் ஆகி குடும்ப சூழல் காரணமாக கூலி வேலைகளுக்கு சென்றவர்.. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.பொதுவாக அரசாங்க வங்கிகளில் பியூன் வேலைக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களைத்தான் நிறைய சேர்ப்பார்கள். அதிர்ஷ்டவசமாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக எங்கள் வங்கிக்கு வந்தார்.

பொதுவாக வங்கிகளில் பியூனாக எட்டு வருடங்கள் சர்வீஸ் போட்டால் ஒரு பரிட்சை வைப்பார்கள்.அதில் பாஸ் ஆனால் கிளார்க்காக சேர்ப்பது என்று ஒரு திட்டம் உண்டு . ஆனால் எங்கள் வங்கியில் பியூன்கள் பத்தாவது முடித்தால் இந்த பரிட்சை எழுத தேவையில்லை.நேரடியாக கிளார்க் ஆகிவிடலாம். ஆனால் இதில் சீனியாரிட்டி லிஸ்ட் உண்டு.

நான் அந்த கிராமத்து கிளையில் சேர்ந்த சில நாட்களில் இந்த தகவல்களை தெரிந்துக்கொண்டேன்..பழனிசாமியை பத்தாவது பாஸ் பண்ணலாமே என்றேன் . அதெல்லாம் கஷ்டம் சார் என்றார்.

ஒரு கஷ்டமும் இல்லை..நான் உதவி செய்கிறேன் என்றேன் நான்.அன்று ஆரம்பித்தோம் .டெய்லி் கொஞ்சம் படிப்போம்.வருடம் ஒரு பேப்பராக எழுதி எழுதி பாஸ் செய்தோம். கடந்த செப்டம்பர் வருடத்தில் பழனிசாமி பத்தாம் வகுப்பு பாஸ் செய்தார் . அவர் கையில் இப்போது இருப்பது ஐந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் .ஏனென்றால் ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொரு பேப்பர்தான் பாஸ் செய்தார்.இதற்கிடையி்ல் அவருக்கு எட்டு வருட சர்வீ 'ஸ் ஆகிவிட்டதால் அவர் வங்கி நடத்தும் நேரடி தேர்வும் எழுதலாம்.

இந்த ஆண்டு இந்த தேர்வை எழுத மங்களூர் வந்தார். என் வீ்ட்டில் தங்க வைத்தேன். கடந்த வருடம் வங்கி நடத்திய கேள்வித்தாளை வாங்கி வைத்து என் வீட்டில் மூன்று நாள் அவரை டார்ச்சர் செய்தேன் . நான் மாதிரி கேள்வித்தாள் தயார் செய்வேன்.அவர் அதை எழுதுவார் . நான் திருத்தி கொடுப்பேன். சில கேள்விகள் உதாரணத்திற்கு கொடுத்துள்ளேன் .

123654 785* 123=

466.12 - 24.8 =

254879 +23445

மற்றும் வங்கி துவங்கிய வருடம?

டெபாஸி்ட் வட்டி விகிதம?

லோன் வட்டி விகிதம?

இதுப்போலத்தான் கேள்விகள

நமக்கு சுலபம்.ஆனால் அவர்களுக்கு படித்து புரிந்துக்கொள்வதே கடினம் .


ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும்வகையில் பழனிசாமி பரிட்சையில் பாஸ் ஆனார். இண்டர்வ்யூவில் அவர் வைத்திருந்த பத்தாம் வகுப்பிற்கான ஐந்து மதிப்பெண் சான்றிதழ்களை பார்த்து எங்கள் ஏ .ஜீ.எம் அதிர்ச்சி அடைந்ததை அவர் சொல்வதை கேட்டால் இன்றும் எனக்கு சிரிப்பு வரும் .

கிளார்க்காக தேர்வு பெற்ற அவர் இப்போது வேறொரு கிளைக்கு மாற்றப்பட்டு உள்ளார்..அடுத்த வாரம் பணியில் சேர உள்ளார். பியூனாக இருந்த அதே கிளையில் பொதுவாக பிரமோஷன் தர மாட்டார்கள். ஆப்வியஸ் ரிசன்ஸ்தான்.

இதனால் தமிழ்நாட்டில் சில நண்பர்கள் நான் தலைமை அலுவலகத்தில் இருந்ததால் அவருக்கு "ஏற்பாடு" செய்துவிட்டேன் என்றார்களாம். உண்மையை சொன்னால் நம்ப மாட்டார்கள் . சரி எனக்கு தலைமையகத்தில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்று எல்லாரும் நினைத்துக்கொள்ளட்டும் என்று நானும் கண்டுகொள்ளவில்லை.

இதை கட்டுரையின் முக்கியமான இரண்டாம் பாகம் நாளை தொடரும்.

Friday, February 24, 2006

என்னத்த சொல்லி என்னத்த பண்ண?

மூத்த வலைப்பதிவாளர்கள் எல்லாம் சங்கிலி பதிவில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டு இருக்கும்போது இளையோனான நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? என்னை இதில் சிக்க வைத்தவர் டோண்டு ராகவன்.அவருக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.

Four jobs I have:

1.வங்கி பணியாளர் (ஐந்து வருடங்கள் மால்குடி மாதிரியான டிபிகல கிராமத்தில்)

2.கணிணி பொறியாளர் (மும்பய் மற்றும் மங்களூரில்)

3.எழுத்தாளர் ( இது எதிர்காலத்தில் நடக்கலாம்)

4.அரசியல்வாதி (இதுவும் எதிர்காலத்தில் நடக்கலாம்)


Four movies I would watch over and over again:

1. அவ்வை சண்முகி மாதிரியான காமெடி படங்கள்.

2.அன்பே சிவத்தை பற்றி திரும்பவும் பேசினால் அடி விழலாம்.

3.ஒரு ஆங்கிலப்படம் பெயர் தெரியவில்லை.ஒரு முறை ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன். ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஓடிப்போய் வாழ ஆசைப்படுகிற ஒருவரின் அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்.படம்னா அது படம்.

4.இதுவும் ஆங்கிலப்படம்தான். BEDAZZLED.காமெடிப்படம்.

Four Songs i would hear again and again

1."தென்றல் வந்த தீண்டும்போது என்ன வண்ணமோ மனசில......"

காதலை இதைவிட அழகாக எந்த பாட்டும் சொன்னதில்லை என்பது என் கருத்து

2."கொக்கர கொக்கரக்கோ கோழி கொக்கரக்கோ......"

மனதை சந்தோஷப்படுத்தும் ஃபாஸ்ட் பீட் பாடல்கள் எனக்கு பிடிக்கும்.அந்த வரிசையில் கில்லியில் இந்த பாடல்.தினமும் காலை ஓருமுறை கேட்டால் உற்சாகம் மனதில் அள்ளும்.

3."தென்பாண்டி சீமையிலே"

இளையராஜா (மனுசனாய்யா அந்த ஆள்) குரலில் இந்த சோக சித்திர பாட்டை கேட்டால் தான் புரியும் அந்த அனுபவம்.

4."ஆசையை காத்தில தூது விட்டு "

இதன் காரணம் நான் சொல்லணுமா என்ன?

Four places I have lived (for years):


1.ஆத்தூர்,சேலம்(பிறந்தது முதல் பள்ளிப்படிப்பு முடிய)

2.கோயமுத்தூர்(கல்லூரி படிப்பு (இளங்கலை மற்றும் முதுகலை)

3.மும்பய்(பிரமோஷன் ஆபிஸராக சுமார் இரண்டு வருடம்)

4.மங்களூர்(பிரமோஷன் மேனேஜராக கடந்த ஒரு வருடமாக)

Four TV shows I love to watch:

1.என்.டி.டி.வி அரசியல் சமூக விவாதங்கள்

2.போகோ சேனல்

3.ஜெயா நியூஸ் மற்றும் சன் நியூஸ் ( அரசியல் காமெடி செய்திகளுக்காக)

4.விளையாட்டு போட்டிகள்(குறிப்பாக டென்னிஸ், பார்முலா ஒன் ரேஸ் மற்றும் கிரிக்கெட்)

Four places I have been on vacation:

1.திருச்செங்கோடு (பால்ய ஞாபகங்கள்)

2.ஊட்டி, கொடைக்கானல் (கொடைக்கானல் சூப்பரபு)

3.சிம்லா, ஹரித்துவார், ரிஷிகேஷ்

4.அடுத்த வருடம் சிங்கப்பூர் அல்லது மலேசியா

Four of my favourite foods:

1.மீன் வறுவல் , முட்டையை எப்படி சமைத்தாலும்

2.சிக்கன் பிரியாணி

3.பழைய மீன் குழம்பு

4.பஜ்ஜீ அயிட்டங்கள்

பிடிக்காது என்பதே உனக்கு சாப்பாட்டில் கிடையாதா என்று வீட்டில் அடிக்கடி கேட்பார்கள் என்பது உபரி தகவல்.

Four places I'd rather be now:

1.வங்கிக்கு விடுமுறை போட்டுவிட்டு திவ்யா தமிழினியுடன் விளையாடிக்கொண்டு இருந்திருக்கலாம்.

2.வெறுந்தரையில் தலையணை போட்டு அரை மயக்கத்தில் படுத்திருக்கலாம்.

3.சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை படித்துக்கொண்டிருக்கலாம்.

4.மனைவியுடன் வம்பிழுத்து சண்டை போட்டுகொண்டிருக்கலாம்.

Four sites I visit daily

1.தமிழ்மணம்

2.ஜிமெயில்

3.என் வங்கியின் வலைத்தளம்

4.அது மட்டும் ரகசியம்

bloggers I am tagging:

சந்திப்பு செல்வபெருமாள்

சமுதாய நோக்குடன் தொடர்ந்து எழுதி வருகிறார்.பி.ஜே.பியை கண்ணை மூடிக்கொண்டு தாக்குவதை சற்று குறைத்தல் நலம்.

செல்வன்

இவர் அருமையாக எழுதுகிறார். சீரியஸான விஷயங்கள் முதல் காமெடி வரை சூப்பர். இவருடைய வீர பாண்டிய கவுண்டமணி அருமையான கற்பனை.

பூங்குழலி

சிறிய வயதில் கவிதை எல்லாம் எழுதுகிறார். பலருக்கு பல கேள்விகள் சூடாக எழுப்புவதை வழக்கமாக கொண்டவர்.

பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி.

Thursday, February 23, 2006

மூட்டைக்குள் கணேசன்....

போயஸ் கார்டன் வெளிப்புற கேட் அருகில் திண்டிவனம் ராமமூர்த்தி , விஜயகாந்த், பார்வர்டு பிளாக் சந்தானம், நடிகர் கார்த்திக், ஏதோ ஒரு முஸ்லீம் லீக் தலைவர், பொன். குமார் மற்றும் யார் என்றே தெரியாத சிலர் அமர்ந்திருக்கின்றனர்.

கதவு திறக்கப்படுகிறது.சசிகலா தென்படுகிறார். ஓரிருவர் அவர் காலில் விழ முற்படுகின்றனர்.இதை பார்த்து விஜயகாந்த் சிரிக்கிறார்.

திண்டிவனம் : தம்பி விஜி, ரொம்ப சிரிக்காதீங்க..அதான் சொன்னேன் உங்களுக்கு தமிழக அரசியலில் அனுபவம் இல்லை என்று....

விஜயகாந்த் : யார் சொன்னது, நான் அயர்ன் பாக்ஸ், மூணு சக்கர வண்டி எல்லாம் நிறைய பேருக்கு.........

ஆரம்பிச்சுட்டார்யா என்று சிலர் அலுத்துகொள்கின்றனர். பிறகு எல்லோரும் உள்ளே சென்று அமர்கின்றனர்.


காளிமுத்து உள்அறையில் இருந்து கையில் ஒரு பெரிய கோணி மூட்டையுடன் வெளியே வருகிறார்.உள்ளேயிருந்து ஜெ. குரல் கேட்சிறது.

"ஆள் இல்லை என்று மட்டும் வந்திராதீங்க..இலங்கைக்கே போனாலும் பிடிச்சுட்டு வந்துரணும்"

"சரிங்கம்மா " என்று கூறிவி்ட்டு எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டு சிரிப்புடன் வெளியேறுகிறார்.

எல்லோரும் உள்ளே வாங்க என்று சசிகலா கூற எல்லோரும் உள்ளே ஓடுகிறார்கள்.

கருணாநிதிக்கிட்டே பேசற மாதிரி பேசி வாங்கி கட்டிகிடாதீங்க என்று எச்சரித்துவிட்டு போகிறார் சசிகலா.ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார் . பக்கத்து நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வம், ஜெயகுமார் ஆகியோர். பொன்னையனை காணோம்.

"வாங்க, ஒண்ணும் பயப்படாதீங்க,அவங்கவங்களுக்கு வேண்டிய தொகுதிகளை கேளுங்க" என்கிறார் ஜெயலலிதா.

திண்டிவனம்: அம்மா ...அரசியல் எதிர்காலத்தையே ரிஸ்க் எடுத்து வந்திருக்கேன்.. பார்த்து பண்ணுங்கம்மா...குறைஞ்சது 40 சீட். மற்றும் துணை முதல்வர் பதவி....


ஜெ: முதல்லே உங்க புதுக்கட்சியின் பெயரை சரியாக சொல்லுங்க பார்க்கலாம்

திண்டிவனம்: இந்திரா நேரு காந்தி திராவிட முற்போக்கு....(சற்று குழம்பி) அன்னை சோனியா....

ஜெ: முதல்ல கட்சி பேரை சரியா சொல்லுங்க..அப்புறம் சீ்ட் பத்தி பேசலாம்....விஜி நீங்க சொல்லுங்க

விஜயகாந்த்:(ஓடி போய் சுவரில் கால் வைத்து எகிறி பின்னங்காலால் டி. ஆர்.பாலுவை நினைத்துக்கொண்டு நாற்காலியை உதைக்கிறார்) அம்மா தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி. அதில் ஆண் வாக்காளர் 2 கோடியே 30 லட்சம்,பெண் வாக்காளர்கள் 2 கோடியே.........

ஜெ: (டென்சனாகி) விஜீ...

விஜயகாந்த்: சாரிம்மா... எனக்கு 50 சீட் போதும்மா..அடுத்த தேர்தல்ல நான் முதல்வர் ஆகணும்...

ஜெ முகம் மாறுகிறது.

சந்தானம்: அம்மா எங்களுக்கு வழக்கம் போல் ஒரு சீட்.எனக்கு மட்டும் போதும்.

கார்த்திக: ஏய்..ஊய்.. என்ன நெனைச்சிடடிருக்கே நீ

ஓ.பன்னீர்: அமைதி..அமைதி...

பொன் குமார், முஸ்லீம் லீக் தலைவர் ஆகியோர் எதுவும் கேட்கவில்லை. அம்மாவாக பார்த்து ஏதாவது தந்தால் வாங்கி கொள்வோம் என்கின்றனர்.

கதவு திறந்து சசிகலா எட்டி பார்க்கிறார்

சசி:சோ வந்திருக்கார் உள்ளே விடட்டுமா?

டிரேட் மார்க் புன்னகையுடன் சோ வருகிறார்.

ஜெ: என்ன மிஸ்டர் ராமசாமி ..நடுநிலைமையா எல்லாரும் எனக்கு ஓட்டு போடணும்.தீய சக்தியாம் கருணாநிதியை ஒதுக்கணும்னு தலையங்கம் எழுதிட்டீங்களா?

சோ: நேரடியா இல்லை. தமிழ்நாட்டை கருணாநிதி பிரபாகரனுக்கு 400 கோடிக்கு விலை பேசிட்டாரு..அதனால் மக்கள் வேறு வழி இல்லாம அ.தி.மு.க விற்கு ஓட்டு போடுங்க அப்படிங்கற மாதிரி எழுதறேன்..

அப்போது கதவு திறந்து காளிமுத்து வருகிறார். கையில் உள்ள மூட்டை பெரிதாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் ஓடிப்போய் உதவி செய் ய மூட்டையை இறக்குகிறார்கள்.ஜெ முகத்தில் சந்தோஷம்.

மூட்டை பிரிக்கப்படுகிறது.எல்லோரும் வைகோவை எதிர்பார்த்திருக்க யாரும் எதிர்பாராவண்ணம் இல.கணேசன் மூட்டைக்குள் இருந்து அசட்டு சிரிப்புடன் வெளிப்படுகிறார்.

காளி: அடக்கொடுமையே ..இந்த ஆளு எப்படிய்யா இதுல வந்தாரு?

சோ: நான்தான் சொன்னேன்.காளிகாம்பாள் படத்துல கோவில் உண்டியல்ல விழுந்த ராம்கி திவ்யா உண்ணி குழந்தை எப்படி கடவுளுக்கு சொந்தமோ, எப்படி உண்டியல்ல விழுந்த விவேக் கடவுளின் குழந்தை ஆனாரோ அது மாதிரி வைகோவுக்கு விரிச்ச வலையில் இவர் விழுந்துட்டாரு..இவரை உங்கள் கூட்டணியில் சேர்க்க நான் தான் இவரை இந்த மூட்டைல விழ ஐடியா கொடுத்தேன்..இவரை நீங்க சேர்த்துட்டுத்தான் ஆகணும்...

எல்லோரும் அமைதியாகின்றனர்.

ஜெ:(டென்சனாக) சரி எல்லோரும் கிளம்புங்க..வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போயிட்டே இருங்க.. இரவு ஜெயா டிவில யாருக்கு எவ்ளோ சீட்டுன்னு வரும்..பார்த்துக்குங்க...

சசிகலா வந்து அனைவரையும் வெளியேற்றுகிறார்

Tuesday, February 21, 2006

கலைஞருக்கு சில டிப்ஸ்

கருத்து சொல்கிறேன் என்று டைமிங் சென்சாக காமெடி பேசுவது, தமிழை வைத்து விளையாடுவது ஆகிய சங்க கால ட்ரிக் எல்லாம் இப்போது செல்லுபடியாகாது என்பதை கலைஞர் உணர வேண்டும்.இதையெல்லாம் கிண்டல் செய்து சிரிக்க தமிழன் கற்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டது. முரசொலியை கட்சிக்காரர்கள் கூட வாங்குவதில்லை என்பதை இங்கு இணைத்து பார்க்கவேண்டும்.


கூட்டணி மாறுவது, கொள்கை மாறுவது ஆகிய விஷயங்களுக்கு எல்லாம் மிகவும கஷ்டப்பட்டு விளக்கம், வியாக்கியானம் சொல்லுவதை எல்லாம் விட்டுவிடவேண்டும். ராமதாஸ் பாணி, ஜெயலலிதா பாணி எல்லாம் மிகவும் அட்வான்ஸாக போயிருக்கும் இந்த சூழ்நிலையில் இன்னும் 1970 ல் என்ன நடந்தது என்ற இவர் கொடுக்கும் விளக்கத்தை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?


ராமதாஸ் கூட்டணி மாறும்போது ஏதாவது காரணங்களை சொல்ல கஷ்டபடுகிறாரா என்று கவனியுங்கள்.சீட் அதிகம் கொடுக்கும் கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்று நேரடியாக கூறுவார்

.ஜெயலலிதா ஒரு ஸ்டேண்டர்ட் வசனத்தை வைத்துள்ளார்.

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை..நிரந்தர பகைவனும் இல்லை"

என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்ப்பார்.ஆனால் கலைஞர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து என்று அளக்க ஆரம்பிக்கும்போது மக்கள் டென்சன் ஆகின்றனர்.

அல்டிமேட்டாக பதவி தான் குறி என்னும்போது ஏன் இந்த பில்ட்அப் என்று மக்கள் நினைப்பதில் நியாயம் உண்டு. அதனால்தான் ஜெயலலிதாவின் அதிரடி பாணியை மக்கள் ரசிக்கிறார்கள்.உண்மையிலேயே கலைஞரிடம் ஏதாவது கொள்கை இருந்து இந்த வீர வசனங்களை பேசினால் மக்கள் கேட்பார்கள். ஆனால் இவர் கோபால்சாமியை வெளியேற்றி ஸ்டாலினையும் தயாநிதியையும் சன்டிவியையும் வளர்க்க போராடும் போராட்டத்தை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்?


ஜெயலலிதா கோபம் வந்தால் மதமாற்ற தடைசட்டம் போடுவார். கரசேவையை சப்போர்ட் செய்வார். இதற்காக சிறுபான்மை மக்கள் கோபித்துகொள்வார்கள். தேர்தல் வந்தால் ஜெயலலிதா சர்ச்சில் சோறு போடுவார். மசூதியில் கூழ் சாப்பிடுவார். அவ்வளவுதான் சிறுபான்மையினரும் மகிழ்ந்துவிடுவார்கள். ஓட்டும் கண்ணை மூடிக்கொண்டு குத்துவார்கள்.இது ஒரு உதாரணம்தான்.இது போலத்தான் மக்கள்.ஜெயலலிதாவும் இதற்கெல்லாம் பெரிய விளக்கம் கொடுப்பதில்லை.மக்களும் எந்த விளக்கமும் கேட்பதில்லை.ஆனால் இதுவே கலைஞரை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது பேசி கெட்ட பெயர் வாங்கி கொள்வார்.


ஜெயலலிதா சென்னை வந்த மகிந்த ராஜுபக்சே வை சந்திக்கவில்லை. ஈழ தமிழர்க்கு ஆதரவு காட்டும்விதமாக என்று நாமே நினைத்து கொள்ள வேண்டியதுதான்.அவர் ஏதும் சொல்லவில்லை.ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கையாவது, தமிழராவது என்பார். மக்களும் ஏதும் கேட்க மாட்டார்கள்.இதுவே கலைஞராக இருந்தால் ஏதாவது அறிக்கை விட்டு சொதப்புவார்.

அறிவுஜீவிகள் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். அதையெல்லாம் கண்டுக்கொண்டு இருந்தால் காரியம் ஆகாது என்பதை அவருக்கு யார் சொல்லுவது?


சன்டிவியில் தினமும் மக்களுக்கு இவர் ஆயிரம் ,ஐநூறு கொடுப்பது போன்று போட்டோ போட்டு விளம்பரம் செய்யவேண்டும்.கிழவிகளை கட்டிப்பிடித்து எம்.ஜீ.ஆர் கொடுக்கும் போஸ் கிராமத்து ஏழை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள இம்பேக்ட்டை பற்றி அவர் யோசிக்கவேண்டும்.அப்படி எல்லோருக்கும் எம்.ஜீ.ஆர் அள்ளி அள்ளி கொடுத்தாரா அல்லது அப்படித்தான் கொடுக்கமுடியுமா என்றெல்லாம் நம் மக்கள் சிந்திப்பதில்லை.கிழவிகளை கட்டிபிடித்து சினிமாத்தனமாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதா கொடுக்கும் போஸ்கள் ஏற்படுத்தும் இமேஜ் மிகப்பெரிது.ஆயிரம் படித்த நமக்கே ரஜினி பாட்சாவில் முதன்முதலாக ஒரு வில்லனை அடிக்கும்போது சிலிர்க்கிறது. அப்படி இருக்கும்போது கிராம கடைக்கோடியில் இருக்கும் ஒரு படிக்காத அப்பாவி இந்த மாதிரியான சினிமாத்தனமான செய்கையால் எந்தளவு இம்ப்ரஸ் ஆவான் என்பதை கலைஞர் உணரவேண்டும்.


அரசு ஊழியர்களை ஜெயலலிதா படுத்தியதை எல்லோரும் அறிவோம். ஆனால் தேர்தல் சமயத்தில் கொஞ்சம் சலுகைகளை அள்ளி கொடுத்தாலே அவர்கள் திருப்திப்பட்டுகொள்வார்கள். இதுவே கலைஞர் ஆட்சி ஆகட்டும். ஸ்ட்ரைக என்ன? ஆர்ப்பாட்டம் என்ன? தூள் பறக்கும். நண்டு, குஞ்சு எல்லாம் கலைஞரை கேள்வி கேட்கும்.இதுப்பற்றி சுந்தர ராமசாமி அருமையாக எழுதியுள்ளார்.

" கலைஞர் ஆட்சியில் தனித்தமிழ்நாடு தலைவர்கள், தமிழ்வழிகல்வி தலைவர்கள் , அரசு ஊழியர் சங்க தலைவர்கள் எல்லோரும் கலாட்டா செய்தார்கள். கலைஞரும் ஜனநாயக உணர்வோடு அனைவரையும் அரவணைத்து சென்றார்..பிறகு கலைஞர் ஆட்சி போய் எங்கள் புரட்சிதலைவி ஆட்சி மலர்ந்தது.அன்றிரவே தலைவர்கள் தங்கள் புரட்சி குழந்தைகளை தொட்டிலில் போட்டு தாலாட்ட ஆரம்பித்தனர்.அவர்கள் பேச்சின் மூலம் இரத்த கொதிப்பு ஏறியிருக்கும் குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் தூங்கிவிடுமா என்றுதான் நாம் நினைப்போம்.ஆனால் அவை உடனே தூஙகி தங்கள் இரட்சகர்கள் மீது தாங்கள் கொண்ட பேரன்பை நிரூபித்தன.அதன்பின் அவை இன்றுவரை பாலுக்காக கூட எழுந்திருக்கவில்லை"
இதனுள்ளே அடங்கியிருக்கும் செய்தியினை கலைஞர் உணர வேண்டும்.

இது ஓட்டுப்பெட்டி அரசியலில் தி.மு.க வும் கலைஞரும் எப்படி சர்வைவ் ஆவது என்ற நோக்கத்தை வைத்து மட்டும் எழுதப்பட்டது.இந்த பதிவு சற்று அளவுகடந்து கலைஞரை விமர்சித்திருந்தாலும் ஜனநாயக யுகத்தில் இந்த கருத்துக்களை கலைஞர் சீர்தூக்கி பார்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது.கொள்கை என்று கலைஞர் நினைத்துக்கொண்டிருக்கும் சில விஷயங்கள் அவரின் மற்ற சில தவறுகளால் கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.


(தொடரும்)

Monday, February 20, 2006

திராவிடனா ராகுல் திராவிட்?

ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆனால் முழுக்க முழுக்க கர்நாடகாவை சேர்ந்த சில சாதனையாளர்களைப்பற்றி எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கொண்டு தமிழ் தொண்டாற்றி(?) வரும் நான், பெங்களூர்ல் இருந்து தமிழ் தொண்டாற்றி வரும் கோ.ராகவன், இளவஞ்சி ஆகியோருடன் சேர்ந்து சில கன்னடர்களை பற்றி எழுதலாம் என்று உள்ளேன்.பின்னால் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, நடிகர் பிரகாஷ் ராய் ஆகியோரை பற்றியும் பதிவுகள் வரும்.

முதலில் நமது கிரிக்கெட் அணியின் கேப்டன் திராவிட் பற்றி எழுதி நான் ஆரம்பித்து வைக்கலாம் என்று உள்ளேன்.நேற்று நடந்த நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்லிப்பில் ஒரு அருமையான டைவிங் கேட்ச் செய்ததை நண்பர்கள் பார்த்திருப்பீர்கள். இந்த கேட்ச் பாகிஸ்தானுக்கும் ஆஸ்ரேலியாவுக்கும் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் மார்க் வாஹ் ஸ்லிப்பில் பிடித்த மிகச்சிறந்த கேட்சிற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல.

முப்பத்தி மூன்று வயதான ராகுல் திராவிட் கேப்டன் ஆனது இதுவே லேட் என்கிறார்கள். எப்போது கங்குலி பிட்னெஸ் இழந்து ஜீம்பாப்வே, கென்யா ஆகிய அணிகளை டார்கெட் செய்து சதம் அடிக்க தொடங்கினாரோ அன்றே அவரை அணியில் இருந்து தூக்கியிருக்கவேண்டும்.ராகுல் கேப்டன் ஆகியிருக்க வேண்டும்.அது நடக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் கங்கூலிக்கு அணியில் இடம் கொடுப்பதற்காகவே விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல் திராவிட். அதில் அவருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்தும் அந்த பொறுப்பை திறம்பட நிறைவேற்றினார்.

கங்கூலி பிரச்சினையால் ஓபனிங் பேட்ஸ்மெனாக களம் இறங்கவும் நேர்ந்தது ராகுல் திராவிட்டுக்கு இந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது. அதையும் ஓரளவு நன்றாகவே செய்தார்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள்கூட பாராட்டும் அளவிற்கு பர்ஃபெக்ட் ஜென்டில்மேனாக திகழும் ராகுல் நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராம்.பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ராகுல் பேசும் பக்குவமான பேச்சு இந்திய கிரிக்கெட் ஒரு புத்திசாலியின் பொறுப்பில் இப்போது உள்ளது என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறது.

சேப்பல் உடன் சேர்ந்துக்கொண்டு ஓட முடியாதவர் ( வி.வி.எஸ்.லட்சமண்), ஓட பிடிக்காதவர் (சவுரவ் கங்கூலி), பந்தை ஃபீல்டிங் செய்து எறிய முடியாதவர் ( கும்ளே) ஆகிய ஆட்களை தூக்கி எறிந்துவிட்டு அணியில் இளமை துள்ளும் பையன்களை போட்டு அழகாக வழிநடத்தி செல்கிறார்.

திராவிட்டுக்கு கோபம் கூட வரும் என்பது சில சமயம் ப்ரூவ் ஆகி உள்ளது. ஒரு முறை டெனால்டு செய்த கலாட்டாவில் டென்சனான திராவிட் வாயால் மட்டுமில்லாமல் பேட்டாலும் பேசினார்.(சிக்ஸர் அடித்துத்தான்).

டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க மட்டை போட்டுக்கொண்டிருந்தபோது தடாலடியாக டிக்ளேர் செய்தது, கங்கூலி சமாச்சாரத்தைப்பற்றி கேட்கும் பத்திரிக்கையாளர்களை சமாளிப்பது போன்ற செய்கைகளின் மூலம் தேவைப்படும் நேரம் அவசியமான கடுமையும் கூடவே ராஜதந்திரமும் காட்டமுடியும் என்று நிரூபித்துள்ளார் ராகுல்.


சமீபத்தில் அழகான ஆண்குழந்தைக்கு தந்தையான ராகுல் அடுத்த உலககோப்பை வரை அணியின் தலைவராக இருப்பார் என்று தெரிகிறது.ஃபார்ம் போய்விட்டால் கங்கூலி போல் அடம் பிடிக்காமல் வெளியே சென்றுவிடும் பக்குவம் உள்ளவர் என்று நம்பலாம்.

இப்படிப்பட்ட ராகுல் திராவிட் நமது தமிழகத்தை சேர்ந்தவர் என்பது சிறப்புசெய்தி. இவரது முன்னோர்கள் நமது கும்பகோணத்தை சேர்ந்த அய்யர் குடும்பம் என்று அவரே கூறியதாக விகடனில் படித்துள்ளேன்.

நண்பர்கள் கோ.ராகவன் அல்லது இளவஞ்சி யாராவது இன்போசிஸ் நாராயணமூர்த்தியை பற்றி எழுத வேண்டுகிறேன். அவரின் சாதனைகள், அவரின் சமூக சிந்தனைகள், சேவைகள், சுதா மூர்த்தியின் பங்களிப்பு அகியவை பற்றி எழுதலாம். ஒரு தமிழன் ஏன் இன்போசிஸ் மாதிரியான நிறுவனத்தை நிறுவ முடியவில்லை என்பதை பற்றியும் ஆராயலாம்.

Sunday, February 19, 2006

கம்யூனிஸ்ட் கமலஹாசனும் வலதுசாரி நண்பர்களும்

கமலை ரசிக்கிறார்களா அல்லது படத்தை ரசிக்கிறார்களா என்ற குழப்பம் எனக்கு எப்போதும் உண்டு. ஏற்கனவே ஞாயிற்றுகிழமை என்றும் பார்க்காமல் அன்பே சிவம் படம் பற்றி இதுவரை தருமி, பினாத்தல் சுரேஷ், டோண்டு ராகவன், ஐகாரஸ் பிரகாஷ், அருணா, வசந்தன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
இவர்கள் அனைவரின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதை விட தனியாக ஒரு பதிவு போட்டுவிடலாம் என்று எண்ணி போட்டதே இப்பதிவு.


நான் தமிழ்சினிமாவில் சரக்கு உள்ளவர்களாக மதிப்பது மிகச்சிலரைத்தான். நடிகர் கமலஹாசன், நடிகர் நாசர்,இயக்குநர் பாலா,இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

சனிக்கிழமை ஆபிஸில் இரவு எட்டுமணி வரை ஹெல்ப் டெஸ்க்கில் ஓட்டும் நான் சிறப்பு அனுமதி பெற்று ஐந்து மணிக்கு வீட்டுக்கு விரைந்தேன். இத்தனைக்கும் இந்த படத்தை நான் பார்ப்பது இரண்டாவது முறை.

கமலின் ரசிகர்களில் இருவகை உண்டு. கமலையே ரசிப்பவர்கள் மற்றும் அவர் படங்களை ரசிப்பவர்கள்.கமல் படம் என்றாலே நன்றாகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில் அவரின் அனைத்து படங்களையும் புரிகிறதோ இல்லையோ புகழ்ந்து வைப்பது ஒரு டெக்னிக்.

அவரின் குணா எனக்கு பிடிபடவில்லை.அவரின் ஹேராம் மற்றும் கடவுள் பாதி மிருகம் பாதி (படம் பெயர் நினைவில்லை) படம் எனக்கு பிடிக்கவில்லை.அந்த சமயத்தில் என்னுடைய முதிர்ச்சி லெவல் குறைவாக இருந்திருக்கலாம்.குருதிபுனல்,மகாநதி எனக்கு பிடித்திருந்தது.

வழக்கமான படங்களில் இருந்து இது எப்படி மாறி இருக்கிறது என்று பினாத்தலார் பல பாயிண்ட்டுக்களை அடுக்கியிருந்தார்.அருமையான அனைத்து வசனங்களையும் அவரே சுட்டிக்காட்டி விட்டார்.அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கமலை காதலித்து பிரிந்த கிரண் மீண்டும் மாதவனை காதலிப்பது.. இரண்டாவது காதல் வாழ்க்கையில் உண்டு..அது மிக இயற்கையானது என்று காட்டியிருப்பது...

சிறுவன் இறந்தப்பின் அந்த பிணத்தை அவன் வீட்டிற்கு கொண்டு வரும்போது அவன் பெற்றோர் காலில் விழுந்து நன்றி சொல்லி கதறி அழும் காட்சி......(இது நிஜ வாழ்வில் என் நண்பன் ஒருவன் விபத்தில் இறந்தபோது நான் அனுபவித்த நிஜம்.மனதை உலுக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது)


காசோலையை மாதவன் தொழிற்சங்க அலுவலகத்தில் தரும்போது அவருக்கு நன்றி சொல்லும் சில வயதானவர்கள்......

இதுப்போன்று பல காட்சிகள்.மேலும் கமல் ஏற்றிருப்பது ஏற்றிருப்பது கம்யூனிஸ்ட் பாத்திரம்.

கடவுள் என்பது என்ன?

ஏன் நல்லவர்கள் இந்த உலகத்தில் பாதிக்கப்படுகிறார்கள்?

ஏன் கொடியவர்கள் என்று நாம் நினைக்கிற ஆட்கள் கடவுளால் தண்டிக்கப்படாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள்?

இதுப்போன்ற பல விஷயங்களில் யதார்த்தமான (குறைந்தபட்சம் நான் சரி என்று நினைக்கிற கருத்துக்களை) அணுகுமுறையை காட்டியுள்ளார்.


கமல் மற்றும் மாதவன் நடிப்பு அருமை.கூடவே நாசர்.இந்த ஆள் நடிப்பை பார்க்கும்போதெல்லாம் நான் நினைப்பது இதுதான்.இந்த மனுஷன் சில காட்சிகளில் கமலையே தூக்கி சாப்பிடறான்யா.(மாயத்தேவர் கதாபாத்திரத்தை நினைத்துப்பாருங்கள்)

கடைசியில் வழக்கம்போல் நம்முடைய குடைசல் குண்டக்க மண்டக்க கேள்விகள்.வலதுசாரி நண்பர்களும் இந்த இடதுசாரி படத்தை ரசிப்பது எதனால்?

Friday, February 17, 2006

நாடி ஜோதிடம் - மாயமா? மோசடியா?

நாடி ஜோதிடம் என்ற ஒரு சமாச்சாரம் நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகிறது. நான் முதல்முதலில் நாடி ஜோதிடம் பார்க்க சென்ற கதையை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுமுறையில் பவானி கூடுதுறையில் ஒரு புகழ்பெற்ற நாடி ஜோதிடம் இருப்பதாகவும் அவன் நம் வாழ்க்கையை புட்டு புட்டு வைப்பதாகவும் என் நண்பன் கூறினான்.
எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த சமாச்சாரத்தின் மேல் ஒரு கவர்ச்சி உண்டு.

எப்படி ஒரு ரேகையை வைத்து நம்முடைய சுவடியை எடுப்பது?

அப்படி என்றால் அத்தனை சுவடிகள் அந்த காலத்திலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளதா?

ஃபாரின் காரர்களுக்கும் ரேகை கொடுத்தால் சுவடி கிடைக்குமா?

என்றெல்லாம் பல கேள்விகள் என் மனதில்.சரி.என்னதான் என்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்து கிளம்பினேன்.கோவிலுக்கு சென்றுவிட்டு (சுத்தபத்தமாய் இருக்க வேண்டுமாம்) கோவிலுக்கு அருகிலேயே உள்ள அந்த வீட்டை அடைந்தோம்.ஒரு ஆள் என்னுடைய விரல் ரேகையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

அரைமணி நேரம் கழித்து வந்த அந்த ஆள் கையில் சில சுவடிகளை வைத்து இருந்தான்.என்னுடைய ரேகையுடன் பொருந்தி உள்ள சுவடிகளை கொண்டு வந்துள்ளதாக கூறிய அவன்

"சார், நான் இப்ப சில கேள்விகள் கேட்பேன்..அதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க, உங்க சுவடியை எடுத்துறலாம்" , என்றான்

" ம்..கேளுங்க"

"நீங்க பிறந்தது 1974 சரியா"

"இல்லை"

உடனே அடுத்த சுவடியை புரட்டிக்கொண்டே அவன் கேட்ட கேள்வி.
"உங்க பெயர் எழு எழுத்தா? எட்டு எழுத்தா?

ஏழு என்றேன் நான்.

"நீங்கள பிறந்த தேதி கூட்டுத்தொகை மூன்று சரியா?"

"இல்லை"

உடனே அடுத்த சுவடியை எடுத்துவிட்டான்.மீண்டும் கேள்விகள்.

"உங்கள் பெயர் க,ச,த, வரிசையில் வருமா?"
"வரும்"

"உங்கள் பிறந்த தேதி கூட்டுத்தொகை ஏழு அல்லது எட்டு சரியா?

"ஏழு" என்றேன் நான்.

"உங்கள் கூடபிறந்தவர் மூன்று பேர் சரியா"

"இல்லை"

உடனே அந்த சுவடியை வைத்துவி்ட்டு அடுத்த சுவடியை எடுத்தான்.

மீண்டும் கேள்விகள்.கேள்விகள்.

இவ்வாறு எல்லா தகவல்களையும் என் வாயிலிருந்தே பிடுங்கினான் அவன்.நடுநடுவே உள்ளே சென்று புதிய ஓலைச்சுவடிகளை எடுத்து வருவது போல ஒரு பில்ட் அப் வேறு.எனக்கு புரிந்துவிட்டது அவன் டெக்னிக்.

நன்றாக கவனியுங்கள்.உங்கள் பிறந்த நாள் .நட்சத்திரம் போன்ற சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டால் உங்கள் ஜாதகத்தை யாரும் எழுதிவிட முடியும்.

மற்றபடி உங்கள் குடும்ப விஷயங்களை எல்லாம் அவன் கூறுவது உட்டாலக்கடி வேலைதான். நம் வாயில் இருந்தே தகவல்களை பிடுங்கி நமக்கே கேஸட்டில் பதித்து கொடுப்பான்.

அகஸ்தியர் நாடி ஜோதிடம் என்ற பெயரில் உலகம் முழுவதும் இந்த குழு கலக்கிக் கொண்டு உள்ளது. ஒரு ஆளுக்கு 150 ரூபாய் பொதுகாண்டம்.பிறகு தனித்தனி காண்டத்திற்கு தலா 150 ரூபாய்.இது அப்போதைய விலை.நான் பொதுகாண்டத்திற்கு பிறகு துணியவில்லை.

நடந்த விஷயங்களை புட்டு புட்டு வைக்கும் இவர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் தவறுகிறார்கள் என்பதில் இருந்தே நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும்.

இப்படி எல்லாம் இல்லாமல் வெறும் ரேகை மட்டும் வைத்து கேள்விகள் இல்லாமல் நாடி ஜோதிடம் சொல்பவர்கள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.

Thursday, February 16, 2006

தோழர்களுக்கு ஆப்படிக்கப்படுமா?

பல சர்ச்சைகள் சமீப காலமாக நமது தமிழ்மணத்தில்,அதாவது ஆபாச பின்னூட்டங்கள் மற்றும் கடிதங்கள் அனுப்புவது, தமிழ் மணத்தில் வைரஸ் நுழைந்திருப்பதாக கூறப்பட்டது, இவருக்கு கேள்வி,அவருக்கு வினா, அதோ அங்கே இருப்பவருக்கு சவால் என்றெல்லாம் பல கலாட்டாக்கள்.நடுவில் சில நாட்களாக பாலச்சந்தர் கணேசனை வேறு காணோம்.:))))

ஆகவே எனதருமை நண்பர்களே,தலைப்பை பார்த்து இதுவும் அதில் ஒன்று என்று இங்கு வந்திருந்தால் ஏமாந்து விடுவீர்கள்.இது அது அல்ல. தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் கிழக்கே மேற்கு வங்காளம் என்ற மாநிலம் உள்ளது.அங்கே பல நூற்றாண்டுகளாக(?) ஒரே கட்சி ஆட்சி செய்து வருகிறது.சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்று.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி இப்போது அங்கே அசைத்து பார்க்கப்படும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.அதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
எந்த ஆண்டும் இல்லாத அளவு சுமார் பத்து லட்சம் தவறான மற்றும் போலி வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.தோழர்கள் கள்ள ஓட்டு நிறைய ஓட்டு போடுவார்கள் என்பது எதிர்கட்சிகளின் புகார்.எதிர்கட்சிகளின் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலை தோழர்களுக்கு
அக்னி பரி்ட்சை எனலாம். ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி இதை எதிர்த்து முணுமுணுத்து இருக்கிறது என்கிறார்கள்.பங்களாதேஷ் அகதிகளின் பெயர்கள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் எதிர்கட்சிகளின் நிலைமையும் சொல்லிக்கொள்கிறபடி இல்லை.
மம்தா பானர்ஜீ பல ஆண்டுகளாக போராடினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மெர்குரியல் டெம்ப்பர் கொண்ட பானர்ஜீ ஸ்டைல் நகரங்களில் ஓரளவு செல்லுபடியாகிறது.கிராமபகுதிகளில் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பும் அவருக்கு இல்லை என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க தற்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா
(செல்லமாக புத்து) நன்றாக ஆட்சி செய்வதாக பரவலான அபிப்பிரயாயம் உள்ளது. வெளிநாட்டு முதலீடு போன்ற சமாசாரங்களில் அவர் சில சமரசங்களை செய்து படித்த நடுத்தர மக்களை கவர்ந்து வருகிறார். கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட்டுகள் செய்த நிலசீர்திருத்தங்கள்,
பொதுவாக விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது,லஞ்ச ஊழல் ஏதும் செய்யாமல் இருப்பது ஆகியவை அவர்களுக்கு பாஸிடிவ் விஷயங்கள்.


பார்ப்போம்.

நமக்குத்தான் எல்லாம் வேடிக்கையாச்சே.

Friday, February 10, 2006

தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?

தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான்.

.எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.

"முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான்.

"ஏன்? ஒண்ணுதான்" என்றேன்.

"போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்"

"எதுக்கு?"

"ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவிற்கு அதில எழுதனும்"

"ம்"

"அப்புறம் பின்னூட்டம் இடுறதுக்கு தனி அக்கவுண்ட்"

"எதுக்கு, அதே பேர்ல பின்னூட்டம் இடலாமே"

"சேச்சே,சில நேரம் தரம் தாழ்ந்து எழுத வேண்டி இருக்கும்..அதுக்கு அதே பேரை யூஸ் பண்ணா உன் இமேஜ் என்னாவது? "

"ஓ"

"ஆமா,ஆனா இந்த பேரை யூஸ் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.சில பேரு ஐ.பி. செக் வைப்பான்.அதுக்காக முடிஞ்ச அளவு உங்கள் பதிவுலேயே நீங்களே பின்னூட்டம் இட்டு யாரையாவது கிண்டல் பண்ணலாம்."

"சரி மூன்றாவது அக்கவுண்ட் எதுக்கு"

"ஆழமாகவும் அகலமாகவும் எழுதி போரடிச்சா விஜய் சாரும் நானும், நயன்தாரா என் தங்கம் என்றெல்லாம் எழுதலாம்.பர்சனாலிட்டி கிலாஷ் பிரச்சினையை தவிர்க்கலாம்"

"சரி நாலாவது அக்கவுண்ட்"

"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"

"அட... இதுவெல்லாம் எழுதறவங்களுக்கு...எங்களை மாதிரி ஆட்களுக்கு என்ன ஐடியா?"

"குறும்பும் பண்ணணும்.ஆனா எல்லார்க்கும் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கணுமா?"

"..."

"சென்சிட்டிவ்வான பிரச்சினைகளில் எனக்கு கருத்தே இல்லைனு நம்ப பதிவுல போட்டுட்டு யாராவது குறும்பா கருத்து சொல்லக்கூடியவங்க பதிவுல போய் சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன் என்றெல்லாம் புகழ வேண்டும்.உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள"

",,,,,"

"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"

தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்.

Monday, February 06, 2006

வேலைநிறுத்தம் கொலைகுற்றமா?

எங்காவது ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் நமது மீடியாக்களும் (அனைத்து ஆங்கில மீடியா மற்றும் பிராந்திய வலதுசாரிகளும்) வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் கொலைகாரர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்க ஆரம்பித்து விடுகிறது.


சமீபத்தில் விமானநிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளை எதிர்த்து விமானநிலைய ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தமும் இவ்விதமான சித்தரிப்புக்கு ஆளானது.


இந்த விவகாரத்தில் இனிமேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு முத்தரப்பு குழு அமைத்து பரிசீலிப்பதாகவும், இப்போதுள்ள ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதாகவும் அரசு உறுதி கூறியுள்ளது. இந்த சாதாரண உறுதிமொழியை அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்காக வேலைநிறுத்தம் தேவைப்பட்டிருக்கிறது என்றால் அரசாங்கத்தின் நிலையை என்ன என்று சொல்வது?


அரசு துறைநிறுவனங்கள் என்றாலே அவர்களால் எதுவும் சாதிக்கமுடியாதா? ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தால் விமானநிலையங்களை நவீனப்படுத்த முடியாதா?இதை தனியாரிடம் விட்டால்தான் செயய்முடியுமா?ஸ்டேட் பேங்க், ஓ.என்.ஜி.சி போன்றவையும் அரசு நிறுவனங்கள்தானே. அவைகளால் சாதிக்க முடியும்போது மற்ற நிறுவனங்களால் முடியாதா? நியாயத்தை கேட்கும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கம் நசுக்குவது என்பது சர்வாதிகார நிலைமைக்கு நாட்டை கொண்டுப்போய்விடும்.


வேலைநிறுத்தம் செய்வது குற்றம் என்றால் அவர்களை அந்த நிலைமைக்கு கொண்டு விடுவது அரசாங்கத்தின் அலட்சியம்தானே?நாற்பதோ ஐம்பதோ சதவீத வருமானத்தை அரசாங்கத்திற்கு தனியார் கம்பெனிகள் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதால் இதை வரவேற்கிறார்களாம். ஏன் நிலவுக்கு ராக்கெட் விடும் இந்தியாவால் செய்யமுடியாத நவீனப்படுத்துதலை யார் வந்து செய்யவேண்டும்? ஏன் முழு நூறு சதவீத வருமானத்தையும் நாமே எடுத்துக்கொள்ளக்கூடாது? இந்தியாவில் வான்வழி போக்குவரத்து வரும் காலங்களில் அபரிமிதமாக வளர வாய்ப்பு உள்ளது என்பதையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும்.


ஸ்ட்ரைக் பண்றாங்க என்று குற்றம் சாட்டுபவர்கள் ஊழியர்கள் தங்கள் நிலையை எப்படி அரசாங்கத்திற்கு வேறுவகையில் உணர்த்துவது, தெரியப்படுத்துவது என்று கூறமுடியுமா? தற்கொலை பண்ணிக்கொண்டு சாவுங்கடா,மக்கள் தொகையாவது குறையும் என்பது தான் நிலைப்பாடா?எத்தனையோ சாலை பணியாளர்கள் தற்கொலை செய்துக்கொண்டதை எண்ணிப் பாருங்கள்.படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் அவர்களுக்கு பேச மீடியாக்கள் முன்வரவில்லை.நமது மீடியாக்கள் முதலாளிகளின் செல்லபிள்ளைகள் ஆகி பல காலம் ஆகிறது.


தனிமார்மயம், முன்னேற்றம் என்ற பேச்செல்லாம் பேச நன்றாகத்தான் உள்ளது.ஏழைகளின் வயிற்றில் அடிக்காமலும் இதையெல்லாம் நிறைவேற்றலாம். மக்கள் தொகை அதிகம் இல்லாத ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை ஈயடிச்சான் காப்பி அடிப்பதும் அதை ஆதரித்து எழுதுவதும் நியாயமா?


இந்தியாவில் உள்ள மென்பொருளாளர்களின் எண்ணிக்கை உலகில் உள்ள மொத்த மென்பொருளாளர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. சந்தோஷம்.ஆனால் அந்த அளவிற்கு மென்பொருள் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து உள்ளதா என்று கேட்டால் அதற்கு பதில் நேரடியாக இருக்காது. இருக்கட்டும்.ஏற்றுமதி அதிகரித்தால் சந்தோஷம்தான்.ஆனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் உலகில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மென்பொருளாளர் மட்டும் என்றில்லை. பொதுவாக இந்த தொழில்மயப்போக்கு ஏழை பணக்காரர் வித்தியாசத்தை அதிகப்படுத்தி வருகிறது.இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து இந்த சிறிய அளவிலான மக்களை சந்தோஷப்படுத்தத்தான் அரசாங்கம் முயல்கிறது என்பதுதான்.மீடியாக்கள் தொழிலதிபர்களின் குரலில் பேசுகின்றன்.


வாய்கிழிய தொழிலாளர்களை எதி்ர்த்து தனியார்மயத்தையும் வெளிநாட்டு முதலீட்டையும் ஆதரிக்கும் மீடியாக்கள் பத்திரிக்கை துறையில் வெளிநாட்டு முதலீடு என்ற விஷயத்தில் தங்கள் நிலை என்ன என்பதை சொல்வார்களா?வாய் கிழிய கத்துவார்கள்.அய்யோ தேசப்பாதுகாப்பு என்னாவது என்றெல்லாம் வாய்ஸ் தூள் பறக்கும்.அப்படியானால் தொலைதொடர்பு துறையில் அன்னியர்களை அனுமதித்தால் அங்கு தேசபாதுகாப்பு பல்லிளிக்குமா? விமானநிலையத்தின் பொறுப்பை தனியார் ஏற்றுக்கொண்டால் அங்கு தேசப்பாதுகாப்பு என்னாகும்?



சீனாவை பார் என்பவர்களுக்காக ஒரு விவரம்.ஏழை, பணக்காரன் வித்தியாசம் பெருத்துக்கொண்டே போனால் சமுதாயத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதை சீன அரசாங்கம் உணர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 74000 முறை இதன் காரணமாக சீனாவின் கிராமப்புறங்களில் குற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன்.சீனாவை விடவும் ஊழல்வாதிகள் நிறைந்த இந்தியாவில், சாதி கொடுமைகள் நிறைந்த இந்தியாவில் இதை போன்ற ஒரு சமுதாய கொந்தளிப்பு ஏற்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

எத்தனையோ சாலை பணியாளர்கள் தற்கொலை செய்துக்கொண்டதை எண்ணிப் பாருங்கள்.படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் அவர்களுக்கு பேச மீடியாக்கள் முன்வரவில்லை.நமது மீடியாக்கள் முதலாளிகளின் செல்ல பிள்ளைகள் ஆகி பல காலம் ஆகிறது.


அரசுத்துறை வங்கிகளுக்கு அட்டானாமி பாக்கேஜ் என்று ஒன்றை அரசாங்கம் அறிவித்தது.ஊழியர்களை பணியில் அமர்த்துவது, அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் முதலானவைகளை அந்தந்த வங்கிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பது உள்பட பல விஷயங்கள் இந்த பாக்கேஜீல் அடங்கும். சில வங்கிகள் இதை நடைமுறைப்படுத்த முற்பட்டப்போது மீண்டும் அரசாங்கத்திடம் இருந்து ஒரு உத்தரவு இதையெல்லாம் நிறுத்தி வைக்கச்சொல்லி.

.ஐ.சி.ஐ முதலான தனியார் வங்கிகள் பொதுமக்களை உதைத்து கடன்களை வசூல் செய்து வருகின்றன்.ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறை வங்கிகள் தங்களின் வரையறைக்குள் செயல்பட்டு லாபம் ஈட்டி வருகின்றன் என்பதையும் கவனிக்கவேண்டும்.

சர்வீஸ் டேக்ஸ் கட்டு, இன்கம்டாக்ஸ் கட்டு , தலைநிமிர்ந்து நட என்பதெல்லாம் அரசாங்கம் அனைத்து டிவியிலும் போட்டு மக்களை சிலிர்க்க வைக்கிறது. சரிதான்.ஆனால் அரசியல்வாதிகளின் சொத்து விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது அரசாங்கம்?நம்முடைய அரசியல்வாதிகள் சிங்கிள் பீடியும் கட் சாயாவும் குடித்துக்கொண்டா மக்கள் தொண்டாற்றி வருகின்றனர்?ஒரு பக்கம் நம் நாட்டின் பணத்தை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக ஓடுகிறார் குவாட்ரோச்சி.அவர்களை பாதுகாக்கும் ஆட்கள் நமது மீடியாவுக்கு தியாகிகள். இதெல்லாம் ஒரு பிழைப்பா?

Saturday, February 04, 2006

பெருமாள் முருகனின் கூளமாதாரி -2

இந்த பதிவின் முதல் பாகம் மேட்டு காட்டு காட்டான்கள் என்ற பெயரில் இங்கே. தமிழ் சினிமாவில் கவுண்டர் பாஷை என்றும் கவுண்டர் வாழ்க்கை என்றும் காட்டப்படுவது பெரும்பாலும் கோயமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் கவுண்டர்களுடையது.இந்த மக்களுக்கும் நாமக்கல, திருச்செங்கோடு மக்களுக்கும் சிறிது வித்தியாசம் உண்டு என்று முந்தைய பதிவில் கூறியிருந்தேன். பாஷையிலும் வித்தியாசம் உண்டு. நாமக்கல், திருச்செங்கோடு மக்கள் அவர்களைவிட கொஞ்சம் பாமரத்தனமாக இருப்பார்கள்.

பெருமாள் முருகனின் இந்த நாவலில் அதுவும் குறிப்பாக திருச்செங்கோட்டு மலையை முக்கிய மையமாக வைத்துள்ளார்.இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் சாதி சார்ந்தது. இங்கு பெரும்பாலும் நிலத்தை வைத்திருப்பவர்கள் கவுண்டர்கள்.நாடார்கள் கள் இறக்கி வாழ்பவர்கள். சக்கிலியர் விவசாயக்கூலிகளாக வாழ்ந்து வருபவர்கள்.இந்த கதையின் நாயகன் கூளையன் ஒரு சக்கிலி சிறுவனாக இருக்கிறான்.இளம் வயதில் கவுண்டர் வீட்டு பண்ணையத்திற்கு வருஷம் இவ்வளவு என்று கூலி பேசப்பட்டு வேலை செய்கிறான்.சாதிக்கொடுமைகள் சம்பந்தப்பட்ட இடங்களை யதார்த்தமாகவும் நேர்மையாகவும் கையாள்கிறார் ஆசிரியர்.


எனக்கும் இதில் சில அனுபவங்கள் உண்டு. எட்டு ஒன்பது வயதிருக்கலாம். நான் ஒருமுறை ஊருக்கு சென்றிருந்தப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் என்னை முதலாளி என்று அழைத்ததோடு அவரை விட வயதில் சிறிய என்னுடைய மாமா டேய் கந்தா என்றெல்லாம் அழைத்ததற்கு எதுவுமே சொல்லவில்லை.இத்தனைக்கும் அந்த நபர் உள்ளூர் அரசு பள்ளியில் ஆசிரியர்.டவுனில் வளர்ந்த நான் வியந்து போனேன்.ஆனால் அப்போதே அங்கு வந்திருந்த என் தந்தை என்னையும் மாமாவையும் திட்டியதோடு இல்லாமல் வாத்தியார் கந்தனையும் சின்ன பையன்கள் மனதில் தவறான எண்ணத்தை வளர்ப்பதாக கடிந்துகொண்டார்.என் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது நிலைமையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று நினைக்கிறேன்.

எங்கள் காட்டுக்கு பக்கத்து காட்டு உரிமையாளரை பணக்கார சக்கிலி என்று அழைப்பார்கள்.கடும் உழைப்பின் மூலமாக நில உரிமையாளர் ஆகிவிட்டார் அவர்.ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன்.ஆனால் ஒற்றுமையுணர்வும் நிலவுகிறது.


நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி இந்நாவலில் கதையோட்டம் என்று குறிப்பாக ஒன்றும் இல்லையென்றாலும் கதை முடிவில் உள்ள அந்த எதிர்பாராத திருப்பத்தின் மூலம் கதைக்கு ஒரு கனமான முடிவையும் கதையை படிப்பவர் நெஞ்சில் கதை நாயகனின் பாதிப்பையும ஏற்றிவிடுகிறார் பெருமாள்முருகன்.கண்டிப்பாக கதையை படித்த இரண்டு நாட்களுக்கு கூளையன் நம் நெஞ்சில் உட்கார்ந்துகொண்டு இருப்பான்.
கதையின் நாயகன் தாழ்த்தப்பட்ட குல சிறுவனாக இருப்பினும் கதையின் ஊடாக இழையோடி இருப்பது கவுண்டர்கள் வாழ்க்கைதான் என்று எனக்கு தோன்றுகிறது.இது கதைக்கு பலமா பலவீனமா என்று சொல்லமுடியவில்லை.வீட்டுக்கு வந்த கூளையன் திரும்பவும் கவுண்டர் பண்ணையத்திற்கு போக பயந்து தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போகும் சம்பவத்தில் சாதிகளை தாண்டிய ஒரு அனுபவத்தை நமக்கு காட்டுகிறார் பெருமாள்முருகன்.



நிறைய தகவல்களை , தேவையற்ற தகவல்களை அள்ளி தெளிப்பதாக சுந்தர ராமசாமி இவர் கதைகளின் மேல் ஒரு விமரிசனத்தை வைத்தார்.ஆனால் அந்த மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் அதை நான் மறுப்பேன்.நான் ஏற்கனவே கூறியுள்ளபடி இது ஒரு ஆவணப்படுத்துதல்.தேவையற்ற விவரணைகள் என்று எடுக்கப்படுகிற ஒவ்வொரு வரியும் இந்த நாவலை எதிர்மறையாக பாதிக்கும்.இவர் கதைகளை இதன்ஊடாகத்தான் ரசிக்கமுடியும்.அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டிய ஒரு எழுத்தாளராக என் அலமாரியில் சுந்தர ராமசாமியின் அருகில் அமர்கிறார் பெருமாள்முருகன்.

Friday, February 03, 2006

ரஜினி ராம்கிக்கு பிரமோஷன்

நமது வலைப்பதிவுகளுக்கும் தமிழ் எளக்கிய உலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இந்த மாத உயிர்மை இதழில் நம்முடைய இனிய நண்பர் ரஜினி ராம்கி எழுதிய ஒரு பதிவு முழுமையாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. நண்பருக்கு வாழ்த்துக்கள்.

ஒரு முழுமையாக கட்டுரையின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கே சோறு போடும் சிறு பத்திரிக்கை வட்டத்தில் அழுத்தமாக கால் பதித்துள்ள நமது ராம்கி இனிமேல் எப்படி நடந்து(?) கொள்ள வேண்டும் என்ற எளிய ஆலோசனைகள்.

1. இலக்கியவாதி ஆனப்பின் அதிக கருத்துக்கள். சக வலைப்பதிவர்கள் எல்லாம் உங்கள் கருத்து என்ன என்று கெஞ்சி கேட்டால் சில வார்த்தைகள் பீடிகையுடன் சொல்லலாம்.

2. கருத்து சொல்கிறேன் என்று சொல்லக்கூடாது.கருத்துக்களை பதிவு செய்கிறேன் என்று போடவேண்டும்.

3. பின்நவீனத்துவம், விளிம்புநிலை, இந்திய மரபு, மேற்கத்திய மரபு, எக்ஸிஸ்டென்ஷியலிசம் போன்ற வார்த்தைகளை நிறைய உபயோகப்படுத்தவேண்டும்.

4. பல பிரஞ்சு, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் பெயர்களை தெரிந்துக்கொண்டு அவ்வப்போது உபயோகப்படுத்துதல் நலம்.

5.ஹேர்ஸ்டைலை அவ்வபோது மாற்றிக்கொள்ளவும்.பல கூட்டங்களுக்கும் போகிறீர்கள்.வருகிறீர்கள். ஒரு பாதுகாப்புக்குத்தான்.எதுக்கு வம்பு? துப்பட்டாவால் யாராவது அடித்தால்?

just for fun

Thursday, February 02, 2006

மேட்டு காட்டு கிராமத்தான்கள் - 1

சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பெருமாள் முருகனின் கூள மாதாரி என்ற நூலை வாங்கியிருந்தேன்.தற்கால தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் பெருமாள் முருகன்.ஏற்கனவே சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையில் இவரை பற்றி குறிப்பிட்டு அவரின் ஏறுவெயில் என்ற நாவலை பரிந்துரை செய்திருந்தார்.சுந்தர ராமசாமியின் கருத்துகளிலும்,ரசனைகளில் நான் அடிக்கடி என் கருத்துகளையும் ரசனைகளையும் பொறுத்தி பார்ப்பதுண்டு.அவ்வடிப்படையில் பெருமாள்முருகனை படித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
புத்தக கண்காட்சியில் கூளமாதாரி என்ற புத்தகத்தை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.

திருச்செங்கோடு நாமக்கல் பகுதி மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை இதை விடவும் அழகாக யாரும் இதுவரை ஆவணப்படுத்தியது இல்லை. இனிமேலும் யாரும் செய்துவிட முடியாது என்றும் தைரியமாக கூறலாம் என்ற அளவிற்கு எழுதியுள்ளார்.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த பகுதி மக்களின்வாழ்க்கை முறை, இந்த பகுதி கலாச்சாரம், இந்த மக்களின் பண்பு பெரிதாக வெளிப்படுத்தப்படாமல் மறைந்துகொண்டு வருகிறதோ என்று. மண்ணின் மைந்தர்களான இந்த தலைமுறையை சேர்ந்த என்னை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாழ்வை விட்டு விலகி கொண்டிருக்கிறோம். படிப்பு என்பது பெரும்பாலும் இந்த தலைமுறையில் பரவலாகி இருக்கிறது.விவசாயம் செய்ய ஆளில்லாமல் போய்விடும் என்ற பயம் தோன்றும் அளவிற்கு.

தலித் இனத்தை சேர்ந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனின் பார்வையில் கதையை நகர்த்தி உள்ள பெருமாள்முருகன் இந்த புத்தகத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் பெரும்பான்மையான கவுண்டர் இனத்தை தவிர நாடார் மற்றும் தலித் மக்களும் நிறைய வசிக்கும் இந்த நிலப்பரப்பின் வாழ்க்கையை அப்படியே கண்முன்னே கொண்டு வருவதில் மிக்பபெரிய வெற்றி பெற்றுள்ளார்.இதை படிக்கும்போது பல இடங்களில் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.இவ்வாறு ஒரு வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரே கதையில் அடக்குவது என்பது வார்த்தையில் விளக்கமுடியாதது.


கெட்ட வார்த்தைகளையும் அதிர்ச்சி தரும் வார்த்தை பிரயோகங்களையும் செயற்கையான முறையில் கதைகளில் உபயோகப்படுத்தப்படுவதை பார்த்து
பழகிய எனக்கு, தலித்தாக இல்லாதிருந்தாலும் தன்னை தலித்தாக உணருபவர் என்று கூறப்படும் இந்த எழுத்தாளர் அந்த மண்ணில் சாதாரணமாக புழங்கும் தாயோலி,தேவிடியா,பொச்சு, முதலிய வார்த்தைகளை பல இடங்களில் உபயோகப்படுத்தி இருந்தாலும் எந்த ஆபாச அதிர்ச்சிகளையும் நமக்கு தருவதில்லை.


இந்த மண்ணை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த கதை எந்தவிதமான உணர்வுகளை தரும் என்று என்னால் தெளிவாக கூறமுடியவில்லை.எங்கிருந்தாலும் மனித அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான் என்பதாக புரிந்துகொண்டோமானால் இதை ஒரு மிகச்சிறந்த நாவல் என்று எளிதாக கூறிவிடலாம்.

முன்பு பத்து பனிரெண்டு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் திருச்செங்கோட்டில் குமாரமங்கலம் பக்கத்தில் உள்ள எங்கள் தாத்தா பாட்டியுடன் சென்று மாத கணக்கில் இருப்பேன்.

தினமும் காலை எழுந்து ஆடு ஓட்டிக்கொண்டு (மேய்த்துக்கொண்டு) கிலோமீட்டர் கணக்கில் சென்ற அனுபவங்கள்...

பண்ணையத்தில்(வேலைக்கு) இருந்த தூங்கப்பிள்ளை என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று எலிக்கறி சாப்பிட்டது......

மாலை நேரங்களில் பனைமரம் பனைமரமாக தேடிச்சென்று பனம்பழம் பொறுக்கி வந்து நெருப்பில் சுட்டு தின்னது.....


சுழன்று சுழன்று மழை பெய்யும் நேரத்தில் ஆட்டு படலை கயிறு போட்டு இழுத்து கட்டியது.....


இன்னும் எவ்வளவோ என் நெஞ்சில் நின்ற நினைவுகளை அழகாக கிளறிக்கொண்டு வந்துள்ளார்.


கூளமாதாரியில் செல்வனும் கூளையனும் இரவு நேரம் ஆட்டு படலை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் படம் பார்க்க கொட்டாய்க்கு போவது..திரும்பி வந்தபோது ஆடு காணாமல் போயிருப்பது............
முனியப்பன் சாமி கூளையனுக்கு காட்சி அளித்தது...

செல்வனும் கூளையனும் சண்டை போட்டுக்கொள்வது.........

கூளையன் பனங்கிழங்குகளை சாயபு தாத்தாவிடம் விற்று பணத்தை கவுண்டரிடம் தருவது.அவர் அவனையே சட்டை வாங்கிக்கொள்ள சொல்வது..


போன்ற அத்தியாயங்களில் பெருமாள்முருகனின் சித்தரிப்பு அருமை..


கவுண்டர் இன மக்கள் சேலம், தர்மபுரி, நாமக்கல் , திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து ஈரோடு மற்றும் கோவை வரை வாழ்கிறார்கள்.ஆனால் காவிரி ஆறு பிரிக்கும் ஈரோட்டுக்கு மறுபுறம் இருக்கும் மக்களுக்கும் மேட்டு காட்டில் உழைக்கும் இவர்களுக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும்.

(தொடரும்)