Monday, October 30, 2006

கிரிக்கெட்டில் ஆப்பு

மக்களே, நான் இந்த மேட்ச் கழுதையெல்லாம் முழுசா உட்கார்ந்து பாக்கறதில்லை. நானெல்லாம் எப்பவும் இந்த பாவத்துக்கு ஆளாகவே மாட்டேன்.வேற வழியில்லாம சில நேரம் ஹிஹி...


மொகாலியில் மேட்ச்.சாதாரணமாகவே அது வேகபந்துக்கு சாதகமான பிட்ச். இந்த தொடரின் பெரும்பாலான ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்ற போதே எனக்கு தெரிந்துவிட்டது நமக்கு ஆப்பு தான் என்று.


ஆசிய அணிகள் எதுவும் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது தற்செயலா? இல்லை.மற்ற அணிகள் ஆடுகளத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள சிறிது அவகாசமே எடுத்துக்கொள்கின்றன.நம் ஆட்களுக்கு அதெல்லாம் இல்லை. எப்பவாவது ஜெயசூர்யா பவுலிங் பிட்ச்சில் ரன் எடுத்திருக்கிறாரா? நம் ஆட்களுக்கு மட்டையாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டும்.குறிப்பாக பந்து முட்டிக்கு மேல் எழும்பக்கூடாது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கவே கூடாது.


இந்த டிவி,மீடியா,முன்னாள் வீரர்களின் கூத்து சகிக்க முடியாத அளவு வளர்ந்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க எவனாவது சட்டம் போடக்கூடாதா?


நேத்து பாருங்க மெக்ராத் எப்பவும் போல் நூல் பிடித்தது போல் பந்து வீச ஆரம்பிச்சாரு.. சச்சின் தடுமாறினாலும் நம்ப காமெண்ட்ரி ஆளுங்களை பார்க்கணுமே.இதோ வெளுக்க போறாரு.வெட்ட போறாரு. கிழிக்க போறாருன்னு ஓரே கூச்சல்.கடைசியில் மெக்ராத் தான் சிரிச்சாரு. அதே ஸ்டைலில் இன்னும் எத்தனை முறை சச்சின் கீப்பர் கேட்ச் தருவாரோ?


சேவாக்குக்கு ரெண்டு பால் பீட் ஆகி கீப்பர் கிட்டே .போகுது. அடுத்த பால்ல தடுமாறி ஒரு காமா சோமா ஷாட் அடிச்சி பவுண்டரி கிடைக்குது.சரியான பிளேஸ்மெண்ட் இல்லை. ஆனா உடனே ஒரு ஆள் சொல்றாரு."அதுதாங்க சேவாக்.கவலையே படமாட்டாரு" இந்த பில்ட் அப் தேவையா? எக்ஸ்டரா கவர்ல ஆள் இருந்திருந்தா அப்பவே டவுசர் கிழிஞ்சிருக்கும்.

எப்பவுமே காயப்பட்டு இருக்கிற அகர்கர், டீமை விட்டு தூக்கற நிலைமை வந்தா மட்டும் ஒன்றிரண்டு அரை சதம் அடிச்சி இடத்தை தக்க வைக்கற யுவராஜ் இவங்க இல்லாட்டி டீமே இல்லையா?டிவி போட்டா எல்லா சேனலிலும் இதுதான் பேச்சு.


விளம்பரம் எல்லாம் ஊ ஆ இந்தியான்னு ஓரே கூச்சல். நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு.


மொத்தத்துல பவுலிங்கில் பதானும் பேட்டிங்கில் திராவிட்டும் ஜொலிக்க வில்லை என்றால் நம்ம மேட்டர் காலி. என்னது உலக கோப்பையா? ஹிஹி...என்னங்க குறும்பு பண்றீங்க? அது வெஸ்ட் இண்டிஸ்ல நடக்க போகுதுங்க..... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.......:))

Friday, October 27, 2006

நெருப்பு நரியில் உங்கள் பதிவு

என்னுடைய பதிவுகளை நெருப்பு நரி உலாவியை உபயோகப்படுத்தி படிக்க முடியவில்லை என்று ஒரு நண்பர் கூறினார்.நேற்று அகஸ்மாத்தாக ஒரு புகழ்பெற்ற பதிவரிடம் பேச நேர்ந்தது.


பிளாக்கரில் வலையேற்றிய பின் அதை right align,left align,justify full ஆகிய ஆப்சன்களை உபயோகப்படுத்தினால் நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியாது என்றார் அவர்.சோதித்து பார்த்ததில் அது உண்மை என்று அறிந்தேன்.


எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.தனிபதிவாக இட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.

மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

சில பேர்(மொக்கையன்) கேட்டது போல் மதுரை வலைப்பதிவாளர் சந்திப்பில் கவிதைகள் எதுவும் படிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.லிவிங் ஸ்மைலின் காட்டமான கேள்விகள் ஜுவியில் வந்ததைப்பற்றி விசாரித்தேன். அதைப்பற்றி இங்கு உஷா பதிவில் ஒரு விவாதமே நடந்தது எனக்கு அப்போது தெரியாது.அந்த ஜுவி கட்டுரை பொது மக்களிடையே எந்த விதமாக பாதிப்பை ஏற்படுத்தியது? எதிர்வினைகள் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றார். பத்திரிக்கைகள் இதை வெறுமனே ஒரு வியாபார விஷயமாகத்தான் பார்க்கின்றன என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றியது.

அப்சல் விஷயத்தை பற்றி பேசும்போது பேராசிரியர் தருமியின் நண்பர் பேராசிரியர் சைலேஸ்(முனைவர்) ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார். தேசதுரோகிகளை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசப்பட்ட போது எனக்கே உடல் நடுங்கியது.சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக அட்வகேட் பிரபுவும் கவிஞர் சுகுணா திவாகரும் சில கேள்விகளை வைத்தப்போது முனைவர் சைலேஸ் தடுமாறினார்.

பேராசிரியர் தருமியும் அப்சல் தூக்கு விஷயத்தில் ஒரு தீவிரமான நிலைப்பாடு வைத்துள்ளார்.அவர் பதிவுடனோ வி த பீப்பிள் பதிவுடனோ அல்லது பினாத்தலாரின் பதிவுடனோ எனக்கு முரண்பட ஒன்றுமில்லை.ஒரு பிரச்சினையை பாதியில் இருந்து அவர்கள் அணுகுவதாக எனக்கு படுகிறது. ஆகவே அந்த விவாதத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. அரசியல் நோக்கில் இதை அணுகுவதில் உள்ள சிக்கல்களைப்பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவு இங்கே.

அப்சல் பற்றிய விவாதங்கள் வலைப்பதிவில் மிக நன்றாக நடந்தன என்று தான் எனக்கு தோன்றுகிறது.முதலில் தேசபக்தி ஆறாக ஓடியது.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சினையில் மற்ற பரிமாணங்களும் விவாதத்திற்கு வந்துள்ளது நல்ல முன்னேற்றமாகவே படுகிறது.இஸ்லாமிய எதிர்ப்பு கண்மூடித்தனமாக நம் மனதில் நிறைந்துள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.இது பி.ஜே.பி ஆட்சியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட விஷம பிரச்சாரமா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேல் உள்ள கோபத்தினால் வந்ததா என்று தெரியவில்லை.இதன் இரண்டின் கூட்டு கலவை தான் இது என்று நினைக்கிறேன்.அதே போல் காஷ்மீர் பிரச்சினையை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பலர் இருப்பதை உணர முடிகிறது.வெகுஜன மீடியா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும்.

சரி மீட்டிங்குக்கு வருவோம்.அட்வகேட் பிரபு ராஜதுரையும் ராமும் பல காலமாகவே தமிழ் இணையத்தில் பங்கு பெற்று வருகிறவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ராம் சீரியஸாக எதுவும் எழுதுவதில்லை என்றார். சே குவாராவை பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவர் சில வார்த்தைகள் பேசினார்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி கருத்தாக்கங்களை பற்றி பொதுவில் பேச தயங்கும் பலரும் தனிப்பட்ட முறையில் பேசும் போது அதைப்பற்றி பேசுவதும் தெரிந்து வைத்திருப்பதும்தான்.

அட்வகேட் பிரபு அதிகம் வலையுலகில் எழுதுவது இல்லை என்றாலும் தொடர்ந்து வலையுலகை படித்து வருவது அவர் பேச்சில் இருந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.மரத்தடி காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ் இணையத்தில் இயங்கி வரும் சிலரில் அவர் முக்கியமானவர் என்று தோன்றியது.மரத்தடி காலம் என்று தருமி சிலாகித்தது கொஞ்சம் ஓவரானது என்பது என் கருத்து.அப்போதும் பிரச்சினைகள் இருந்தன என்பதுதான் என் புரிதல்.பங்கு பெற்றோர் எண்ணிக்கை, பேசப்பட்ட விஷயங்களை பொறுத்து கூடக்குறைய இருக்கலாமே தவிர கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்தன.

வலைப்பதிவுகளினால் சமூகத்திற்கு பயன் என்ன என்ற தருமியின் கேள்வி முக்கியமானது. இது ஒரு சுதந்திரமான வெளி. எந்த விதமான தடங்கலும் இன்றி உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் தான் இங்கு முக்கியம். யார்,எதை எழுதவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இங்கு நொறுக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.


(தொடரும்)

Thursday, October 26, 2006

MADURAI MEET VIDEO 2

மதுரை சந்திப்பின் வீடியோ இங்கே

http://kuttapusky.blogspot.com/2006/10/photobucket-video-and-image-hosting.html


கருத்துக்களை அங்கேயே எழுதவும். பீட்டா குளறுபடியால் அந்த பதிவு தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகவில்லை.

Wednesday, October 25, 2006

திமுகவை வீழ்த்த கேப்டனுக்கு யோசனை

விஜயகாந்த் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிவிட்டதாக சில விமர்சனங்கள் பார்த்தேன்.தன்னை பார்த்து குடிகாரர்,குடித்துவிட்டு உளறுபவர் என்று ஒருவர் விமர்சித்தால் அதை மறுத்து இவர் எனக்கு ஊற்றி தந்தாரா என்று கேட்க அவருக்கு உரிமை உள்ளது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.பேச்சுக்கு பேச்சு சில நேரம் தேவைதான். குடிகாரன் என்று திட்டுவதை எல்லாம் கேட்டுக்கிட்டு இளிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?

கள்ளுக்கடை விவகாரத்தில் விஜயகாந்தை ஆதரிப்பது என் தார்மீக கடமை.(பழைய பதிவை பார்க்கவும்)

இப்போதைக்கு நான் முதலிலேயே கூறியது போல் விஜயகாந்த் வளர்ச்சி அதிமுக வாக்குவங்கிக்கு தான் ஆப்பு விழுந்துள்ளது. ஏனெனில் கவர்ச்சி அரசியல் கவர்ச்சி அரசியலைத்தான் பாதிக்கமுடியும். ஒரு புனித பிம்பம் இன்னொரு புனித பிம்பத்தைத்தான் அமுக்க முடியும்.ரொம்ப சுலபமாக கணக்கு இது.ஆயினும் நான் எதிர்ப்பார்த்த அளவு (விரும்பினேனா என்று சொல்ல முடியாது) வெற்றி விஜயகாந்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். சட்டமன்ற தேர்தலை வைத்து பார்க்கும்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் இன்னும் கொஞ்சம் ஓட்டு வாங்குவார் என்று நினைத்தேன்.

சினிமா நெருங்காத பல மக்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தெரியும்.திமுகவும் பிடிக்காமல் அதிமுகவும் பிடிக்காமல் உள்ளவர்கள் என்று ஏதோ பலகோடி இருப்பதாக நினைப்பதும் அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பதும் கனவுதான். எனக்கு தெரிந்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை.அப்படி இருந்திருந்தால் காங்கிரஸ் இன்னேரம் வென்றிருக்க வேண்டும்.வளர்ந்திருக்க வேண்டும்.எப்போதும் ஒரு இருபது சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை.ஏதாவது சட்ட திருத்தம் வந்து, தொழில்நுட்பம் வளர்ந்து நூறு சதவீத ஓட்டுப்பதிவு வரும்போது அதை பார்க்கலாம்.

ஜோ கூறிய கலைஞர் எதிர்ப்பு ஓட்டு வங்கி என்று ஒன்று உள்ளது. எம்.ஜீ.ஆரின் கவர்ச்சி அரசியலினால் வளர்க்கப்பட்ட இந்த வாக்குவங்கியின் இருப்பே கலைஞரின் வாக்கு வங்கி என்று ஒன்று இருப்பதை காட்டுகிறது.அதை அசைத்து திமுக ஓட்டு வங்கியை அசைக்க விஜயகாந்திற்கு ஒரு வழி சொல்லுகிறேன். சுலபமான வழி. புனித பிம்பங்களை விட்டு விலகினால் போதும்.வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளை மட்டும் நம்பாமல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள படித்த, இன உணர்வுள்ள இளைஞர்களை நிறைய கட்சிக்கு கொண்டு வந்து களப்பணியாற்ற வைக்க வேண்டும்.(இது கொஞ்சம் ஓவரான எதிர்ப்பார்ப்பு தான் என்று தெரிகிறது.என்ன செய்ய?)

இடஒதுக்கீடு, இலங்கை பிரச்சினை, மொழி உணர்வு ஆகியவற்றில் தன்னுடைய கருத்து என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக எடுத்து வைத்து உள்கட்சி ஜனநாயகத்தை வளர்ப்பது, கட்சி அதிகாரத்தில மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்றெல்லாம் செய்தால் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி கூட விஜயகாந்தை ஆதரிக்கலாம்.யார் கண்டது?

இந்தியை எல்லாரும் படிக்கணும்னு வாந்தி எடுத்தாராம் ஒரு முறை.இது மூலம் அவருக்கு எத்தனை ஓட்டு கூடுதலாக கிடைத்தது என்று பார்க்கவேண்டும் அவர். இன்று இந்தியை நம்பினால் தான் வாழமுடியும் என்ற தேவை நம் நாட்டில் சுத்தமாக ஒழிந்தே விட்டது. விஜயகாந்த் இங்கு திருந்தவேண்டும்.

ஊருக்கு ஊர் ஊழல் ஒழிப்பு இயக்கம் என்று ஒன்றினை ஏன் விஜயகாந்த் ஆரம்பிக்கக் கூடாது? தனது கட்சியினரை வைத்து தாலூக்கா ஆபிஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ் முதற் கொண்டு எல்லா இடங்களிலும் ஊழலை ஒழிகக நடவடிக்கை எடுக்கலாமே?பெட்டிசன்போடுவது,உண்ணாவிரதம் இருப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பது போல் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும்.

விருத்தாசலத்தை ஒரு மாதிரி தொகுதியாக ஆக்கிக்காட்ட வேண்டும்.இது சுலபமாக வேலைதான்.

அதிமுகவிலும் திமுகவிலும் சம்பாதிக்க முடியாதவர்கள் இன்று தேமுதிகவில் சேருகிறார்கள் என்ற அவபெயரை நீக்கவேண்டும்.

//தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). ஆனால் ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். //

செய்வாரா விஜயகாந்த்?

மதுரை சந்திப்பு - 1

இந்த பதிவை பார்த்திருப்பீர்கள்.மதுரையில் வலைப்பதிவாளர் சந்திப்பு என்ற எண்ணத்தை செயலாக்க உதவிய பேராசிரியர் தருமி அவர்களுக்கு நன்றி கூறி இந்த சந்திப்பை பற்றிய என் கட்டுரையை தருகிறேன்.

முன்கூட்டி திட்டமிடப்படாத சில பயணங்களால் இந்த சந்திப்பில் நான் கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது.(அதைக்கூட கிசுகிசுவா எழுதினாங்களாமே? ஏண்டாப்பா அம்பிகளா இது நியாயமா?)கலந்துக் கொண்டவர்கள் லிஸ்ட் தருமி கொடுத்துள்ளார்.பத்து நாட்களாக பேருந்து,மற்றும் ரயிலிலேயே வாழ்ந்துவந்த நான் சரியான நேரத்தில் மதுரையில் இருப்பது போல் பார்த்து கலந்துக்கொண்டேன்.

வலைப்பதிவில் புதியதாக அறிமுகமாகி சிறப்பாக எழுதிவரும் ராஜ்வனஜ் கோவையிலிருந்து இதற்காகவே வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷத்தை கொடுத்தது.அவர் அதிகம் பேசவில்லை.எழுத்துதான் என் ஆயுதம் என்று மென்மையாக கூறுகிறார் மனிதர்.

மதுரை மாப்பிள்ளைகள்(ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்) லிஸ்ட்டில் கடைசியாக சேர்ந்திருக்கும் மகேஷ் என்னை தூரத்தில் பார்த்தே அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்.எனக்கு அவர் என்று ஊகிக்க முடியாததால் மையமாக தலையாட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். அவராக தன் பெயரை சொல்லுவார் என்று ஐந்து நிமிடம் காத்திருந்தும், பேசியும் மனிதர் வாயை திறக்காததால் நானே கேட்க வேண்டியதாயிற்று(எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கறதுன்னு வடிவேலு சொல்லுறது ஞாபகம் வருதா).

மீட்டிங் துவக்கத்திலேயே எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது.நான் பாதியில் கிளம்பி விடுவேன் என்றார் மகேஷ்.என்னங்க அப்படி ஒரு வேலை? மீட்டிங் முடிஞ்சு பார்க்கக்கூடாதா என்றேன்.இல்லை ரொம்ப நேரம் பிடிக்கும் என்றார்.போகவில்லை என்றால் ஆட்கள் இங்கேயே வந்துவிடுவார்கள் என்று சீரியஸாக கூறினார்.அப்போது தான் எனக்கு மென்பொருள் தொழிலின் மகத்துவமும் முக்கியத்துவமும் புரிய மெளனமானேன்.

கடைசியாக அவர் கூறிய ஆட்கள் வந்தார்கள்.மாமா ஓடி வாங்க படத்தை போட்டிருவான் என்றார் ஒருவர்.விசாரித்ததில் தொடர்ந்து இரண்டு ஷோ (வரலாறு மற்றும் தர்மபுரி) பார்க்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.என் பார்வையை புரிந்துக்கொண்ட அவர் அவரை அழைக்க வந்தவர்கள் ஏற்கனவே இரண்டு காட்சியை பார்த்துவிட்டு அடுத்த இரண்டு காட்சிகளையும் பார்க்க காத்திருப்பவர்கள் என்றும் தானெல்லாம் சும்மா என்றும் விளக்கினார்.ஆகா மக்களே,குப்பனுக்கும் பூவாயிக்கும் கண்ணாலம் அதுவும் அஜீத் நல்லாசியுடன் என்று மதுரையில் வீதிக்கு வீதி ஏன் போஸ்டர் அடிக்கிறானுங்கன்னு இப்ப புரியுதா?

ஞானவெட்டியான் அய்யா, அட்வகேட் பிரபு, ராகவன், வித்யா,பேராசிரியர் தருமி,ராம்,வரவணையான்,கவிஞர் சுகுணா திவாகர் என்று வந்திருந்த எல்லாருமே வி.ஐ.பிகள் தான்.

ராகவனின் வருகை தருமி பதிவில் கூறியிருந்தது போல் எங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ் தான்.சீக்கிரமே கிளம்பிவிட்டார்.

(அப்சலை பற்றிய சூடு பறந்த விவாதம் உள்பட மற்றவை அடுத்த பதிவில்)

Wednesday, October 11, 2006

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தீபாவளி சமயத்தில் மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்துள்ளோம். வழக்கமான வலைப்பதிவு சந்திப்புகளின் போது அறிமுகம் மற்றும் அரட்டை என்ற நிகழ்ச்சிகள் தான் இருக்கும்.இதை தாண்டி கவிதை,கட்டுரை என்று அமைத்து இந்த நிகழ்வை ஒரு மறக்கவியலா நிகழ்வாக ஆக்க எண்ணியுள்ளோம்.கண்டிப்பாக கவிதை நான் எழுத போவதில்லை.யாரும் பதட்டப்பட தேவையில்லை.

பேராசிரியர் தருமி, லிவிங் ஸ்மைல் வித்யா, வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, கவிஞர் சுகுணா திவாகர்,நண்பர்கள் வரவணையான்,ராம்,எம்.எஸ்.வி முத்து மற்றும் நான் கண்டிப்பாக கலந்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்.அய்யா ஞானவெட்டியான் அருகில் திண்டுக்கல்லில் இருப்பதால் அவரும் வருவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த மாதம் 20 லிருந்து 24 வரை இருக்கபோகின்ற விடுமுறை காலங்களில் மதுரையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் மற்ற ஊர்களில் இருந்தும் வர இயலும் நண்பர்களும் அன்பர்களும் மதுரை சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.வர விரும்பும் நண்பர்கள் பேராசிரியர் தருமியை தொடர்பு கொள்ளவும்.DHARUMI2@GMAIL.COM.சரியான நாளும் நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

வலையுலகில் முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு சந்திப்பை கேமராவில் பதிவு செய்து வலையேற்ற எண்ணியுள்ளோம்.நன்றி.
bloggers meeting in temple city madurai

Tuesday, October 10, 2006

தெரியாது..தெரியாது..தெரியாது

நண்பர் செல்வனுக்கு என் கேள்விகள் என்ற பதிவில் நண்பரின் எதிர்வினைக்குஎன் பதில்கள்.சுவாரசியமானது.படிக்காமல் இருந்துவிடாதீர்கள். நன்றி.

//தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)//

கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).
அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....

//ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)//

பொறி அங்கேயே வெச்சாச்சு. எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))


//"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....//

காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.

//தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு//

அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)

//.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது,//

//ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. //

//இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது//

//சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.//

தெரியாது.

தெரியாது.

தெரியாது.

தெரியாது.

என்னதான் தெரியும்? :)))
ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?

என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))

//இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?//

அப்படி போடுங்க ...இதுதான் உலகத்தின் புதிய கடவுளின் கருத்துக்களா? பேஷ்,..பேஷ்..

//இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்//

புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு, தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க...
ஹிஹி....

தமிழ் தீவிரவாதியாகிறார் செல்வன்

கேள்வி:ஈழம் பெறுவது உங்களுக்கு உடன்பாடா என்று மட்டும் சொலலுங்கள் செல்வன்.மற்றதை பிறகு பார்ப்போம்.

பதில்: ஈழம் அமைந்து ஈழத்தமிழர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முத்தையா முரளிதரன் தலைமையிலான தமிழீழம் கிரிக்கட் அணியை திராவிட் தலைமையில் உள்ள கிரிக்கட் அணி யாழ்ப்பாணத்தில் மோதி ஜெயிக்க வேண்டும். அதை நான் கண்குளிர பார்க்க வேண்டும்:-)

நண்பர் செல்வனின் பதிலை மேலே பார்க்கிறீர்கள். இப்போது நண்பர் செல்வனுக்கு சில கேள்விகளை கேட்க கடமைப்பட்டவன் ஆகிறேன்.

1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?

2.ஈழ தமிழர்கள் நேற்று முடிவு செய்து இன்று சண்டை ஆரம்பிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?எந்தவிதமான அடக்குமுறைகளை (அரசியல்ரீதியாக,மொழிரீதியாக, பண்பாட்டுரீதியாக)அவர்கள் எதிர்க் கொண்டார்கள் என்பதைப்பற்றி தெரியுமா?விடுதலைப்புலிகள் என்ற சக்தி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சினையில் தமிழர் குரல் எடுபட்டிருக்குமா?இன்னும் தெளிவாக போடுவோம்.ஆயுதம் சார்ந்த வன்முறையினால்தான் தமிழரின் குரல் இந்த அளவாவது எடுபடுகிறது என்பதை கவனித்துள்ளீர்களா?பிரேமதாசாவை கொன்றதாக கூறப்படுகிற இன்னும் பல கொலைகளை செய்த விடுதலைபுலிகளுடன் அரசாங்கம் ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது?இந்திய முதலி்ல் அனைத்து வகையிலும் ஆதரித்ததாக சொல்கிறார்களே? கேள்விப்பட்டுள்ளீர்களா?

3.ஈழம் அமைவது தான் உங்கள் ஆசையாக இருக்கும் பட்சத்தில் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

உடன்போக்கு அரசியலை விட்டு விலகி கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க வேண்டுறேன்.இலங்கை ராணுவம் வென்றால் இலங்கை இறையாண்மை காப்பாற்றப்பட்டது என்று சந்தோஷப்பட்டும் ஈழம் கிடைத்தால் தமிழனுக்கு வெற்றி என்றும் கூறி சந்தோஷப்படுவதும் அறிவார்ந்த நாணயம் ஆகாது என்பது என் தாழ்மையான கருத்து.நன்றி.
LTTE TAMIL EELAM INDIA NATIONALISM

Monday, October 09, 2006

Poetic (in)Justice

Michael Schumacher, Alonso, Formula One Car Racing

நேற்று நடந்த ஐப்பான் கிராண்ட்ப்ரீயி்ல் நடப்பு சாம்பியன் அலான்சோ வெற்றி பெற்றார். ஆக இதன்மூலம் அடுத்து நடக்கவிருக்கும் பந்தயத்தில் ஒரு புள்ளி பெற்றாலே (ஒரு வேளை சுமேக்கர் வென்றாலும்) அலான்சோ சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

என்னை போன்ற சுமேக்கர் ரசிகர்களுக்கு இது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் அலான்சோவையும் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வருட சீசன் ஆரம்பத்தில் அலான்சோ முன்னணியில் இருந்தார். சுமேக்கருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை தான் இருந்தது.

ஆனால் தீடிரென்று சுமேக்கர் தொடர்ந்து சில போட்டிகளில் வென்றார். பார்முலா ஒன் அமைப்பாளர்களே பெராரிக்கு ஆதரவாக சில வேலைகளை செய்வதாக முணுமுணுப்புகள் எழுந்தன.டேம்பனர்(Dampener)என்ற ஒரு பொருளை வண்டியில் இருந்து விலக்கச்சொல்லி ரெனால்ட் கம்பெனிக்கு போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டது விமர்சிக்கப்பட்டது.

அதன்பிறகு நடந்த சில போட்டிகளில் சுமேக்கர் வெற்றிபெற்றார். நேற்றைய போட்டியிலும் சுமேக்கர் இன்சின் புகைவது வரை அவர் போட்டியில் முன்னணியிலேயே இருந்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்சின் அவரை கைவிட்டுவிட்டது. 2000 ம் ஆண்டுக்கு பின் அவர் இன்சின் பெயிலியர் ஆனது இப்போது தான்.பார்முலா ஒன் காரில் எத்தனையோ ஆயிரம் பாகங்கள் இருக்கிறதாம்.அத்தனையும் சரியாக வேலை செய்தால்தான் கார் முழு போட்டியையும் தாங்குமாம்.எப்படியும் மூன்று சதவீதம் பாகங்களில் பிரச்சினை வந்தே தீருமாம்.சுமேக்கருக்கு விதி விளையாடி விட்டது.

யார் கண்டது? அடுத்த போட்டியில்(பிரேசில் கிராண்ட்ப்ரி) மீண்டும் எதிர்பாராரது எதாவது நடக்கலாம்.சுமேக்கர் ரசிகனாக இருந்தாலும் நான் அலான்சோ ஜெயிக்க வேண்டும் என்றே இப்போது விரும்புகிறேன்.

முத்துவின் பம்மல்-commoncivilcode-curfew

ஓகை என்ற நண்பர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் "அப்சலை தூக்கில் போட்டால் தான் நீ தேசபக்தன் என்று நீங்கள் கூறினால் அவனை தூக்கில் போடு என்று சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்", என்று நான் கூறியதை வைத்து "அவர்"(குறித்திருக்கும் ஆளுமையை சொன்னால் நண்பர் வருத்தப்படுவார் என்பதால்) பாணியில் சுற்றி வளைத்து எழுதியிருக்கிறார்.

தேசதுரோகியாக கூடாது என்று முத்து ஆசைப்படுகிறார் என்பதும் ஆனால் அவரது முந்தைய பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு ஆச்சரியாக இருக்கும் என்றும் ஒரு கண்டுபிடிப்பு வேறு.எந்த என்னுடைய முந்தைய பதிவில் தேசதுரோக கருத்துக்கள் இருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ள எனக்கு ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு பல புதிய கேள்விகள் எழுகின்றன.ஜெய்ஹிந்த என்பதை கண்ட இடத்தில் வாந்தி எடுப்பதை எதிர்த்து நான் எழுதியதை மட்டும் வைத்து நண்பர் இதை கூறியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை உங்களை போலவே எனக்கும் இருக்கிறது.நல்லவேளை திராவிட தளத்தில் எழுதுபவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று சொல்லவில்லையே என்று ஆசுவாசப்படுகிறேன்.

அப்சலை தூக்கில் போடுங்கடா என்ற வசனத்தின் பின்னணியில் என் கருத்தை உருவாக்க நீங்கள் கடைபிடிக்கும் வழி முறையின் மீதான என் விமர்சனத்தைத் தான் நான் குறிந்திருந்தேன் என்பது படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.மேற்கண்ட நண்பரின் கட்டுரையும் இதற்கு ஒரு சான்று.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு புறம்.தன்னிடம் வைக்கப்பட்ட வாதங்களை வைத்து நீதிமன்றம் சட்ட விதிகளின்படி ஒரு தீர்ப்பு தருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அப்சலின் பங்கு தூக்கு தண்டனை தரத்தக்கதா என்பதை விவாதிப்பது ஒரு தனிப்போக்கு.நல்லடியார் அந்த புள்ளியை தொட்டிருந்தார்.தடா என்ற சட்டத்தின்படி இந்த வழக்கு நடைபெற்றிருக்கிறது.

சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள் அதைப்பற்றி நிறைய பேசலாம். இதற்கு முன்பு கிலானியை தூக்கில் இட ஒரு விசாரணை நீதிபதி தீர்ப்பு கூறியிருந்தார். அந்த நீதிபதிக்கு ஹேங்கிங் ஜட்ஜ் என்பது பட்ட பெயராம். பிறகு செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் கிலானி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் (பார்க்க :ரோசாவின் பொதுபுத்தியை பற்றிய பதிவு).உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்காகத்தான் அவர் தப்பித்தார் (நம்முடைய சவார்க்கர் காந்தி கேசில் விடுவிக்கப்படடதை போல்) என்றாலும் அந்த சுட்டியில் எப்படி நிரூபிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் இருக்கின்றது. அதையும் படிக்கலாம்
.

இப்போதைய விவாதங்கள் அப்சலுக்காக கேட்கப்பட்டுள்ள மன்னிப்பு பற்றியது.போன பதிவில் நான் கூறிய புள்ளியை சைடுவாக்கில் தொட்டு உஷா எழுதிய அரசியல் குற்றங்கள் என்ற கருத்தாக்கத்தை அதன்பிறகு பார்க்க நேர்ந்தது.உஷா கூறிய வாதம் பாதிவரை சரியானதுதான் என்பதுதான் என் கருத்து.ஆனால் உஷா எழுதிய காரணம் கருத்தை சுருக்கிவிடுகிறது.இந்த பொதுமன்னிப்பு விவகாரத்தில் அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இநத விவகாரத்தில் நீண்ட காலநோக்கில் அது ஏற்படுத்தும் விளைவுகள்.

மேலும் நண்பர் ஓகை ராஜதுரை எழுதிய ஷரியா சரியா என்ற கட்டுரையை மேற்கோள் காட்டி இப்படியாக ஷரியாவை ஆதரிக்கும் ராஜதுரையின் கருத்தை ஆதரிக்கும் முத்துவை பாரீர் என்கிறார்.நண்பர் பிரபு ராஜதுரையின் கட்டுரையையும் படித்தேன்."அடப்பாவிகளாஅவரையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்த்துட்டீங்களாடா" என்று விவேக் போல சொல்லத் தோன்றுகிறது. ( டா விகுதி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது)

ஆனால் ஒரு குழப்பமான போக்காக இன்று வரை பொது சிவில் சட்டம் என்பதில் எனக்கு ஒரு உடன்பாடான போக்குத்தான் இருக்கிறது.ஆம்.பிரபு ராஜதுரையின் கட்டுரைக்கு பிறகும்.ஆனால் சில சந்தேகங்கள் தோன்றிஉள்ளன.குறிப்பாக திருமணம் விவாகரத்து ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் மதத்தைப்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுபரிசீலனை ஏற்பட்டால் வரும் நிலைமைகளை பொறுத்து.அவருடன் பிறகு கேட்டுக்கொள்ளலாம்.

கடைசியாக இன்றும் மங்களூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாட்டுக்கறி விவகாரத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினையில் இதுவரை இரண்டு உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சிமி இதில சம்பந்தப்படட இருப்பதாக பா.ஜ.க வின் தலைவர் துணை முதல்வர் ஒரு அறிக்கை விட பதட்டம் அதிகமாகி உள்ளது.நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட நேரத்தில் வெளியே சென்றேன்.பசசை காய்கறிகள் ஏதும் கிடைக்காததால் சிக்கன்( என்னது பிஃபா. இல்லைங்க இல்லைங்க) வாங்கி சுட்டு சாப்பிட்டேன்.இன்று என்னாகுமோ தெரியவில்லை.இன்று மாலை ஊரடங்கு உத்தரவு விலக்கப்படும் என்கிறார்கள். மெயில்,போன்,பின்னூட்டம்,சேட் ஆகியவற்றில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Saturday, October 07, 2006

அப்சலை தூக்கில போடுங்கடா

அப்சல் மரண தண்டனை பற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தது மிக மிக கவனமாக எழுதப்பட்டது என்பது என் கருத்து. கவனமாக நண்பர்கள் தவிர்த்த ஒரு விஷயத்தை பற்றி நானும் மிக கவனமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் செல்வன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (அல் கொய்தா ) படங்களை போட்டு நம்மை அசிங்கப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது:)).இந்த கட்டுரை ரோசா, பிரபு, செல்வன், குழலி ஆகியோர் போட்ட பதிவுகளுடன் சம்பந்தப்பட்டது. வேறு ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறேன்.

நாகரீக சமுதாயத்தில் ஒரு மனிதனை சமூகமே(அரசாங்கமே) கொல்வது சரியா என்று கேட்பது ஒரு நிலைப்பாடு. இதை பற்றி பேசுபவர்களுக்கு குற்றவாளிகளின் குற்றம் என்பது ஒரு பொருட்டே அல்ல. குற்றத்திற்கு தண்டனை மரணம் என்பதை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். தண்டனை பற்றிய பயமே குற்றத்தை குறைக்கும் என்பது தவறு என்றும் அது சரி என்றால் இன்றைய சமுதாயத்தில் குற்றமே நடைபெறுவதில்லையா? என்பதும் இவர்கள் கேள்விகள்.நாகரீகத்தில் முன்னேறியதாக சொல்லப்படுகிற ஐரோப்பிய சமுதாயத்தை இவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள். உஷா பதிவு உதாரணம்.

இன்னொரு நிலைப்பாடு வஜ்ரா கூறியுள்ளது. பாதிரியார் கொலையில் தாராசிங்குக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆதரித்தவர்கள் இதை எதிர்ப்பது ஏன் என்பது. இதிலும் வெறுமனே அரசியலை மட்டும் கூறி எதிர்க்காமல் மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி எதிர்ப்பதை அவர் கேள்வி கேட்டுள்ளார். இவர்களுக்கு மரண தண்டனை என்பதின் மேல் என்ன நிலைப்பாடு என்பது முக்கியமல்ல. ஒரு சார்பு இருக்கக்கூடாது என்பது தான் இவர்களின் நிலை.இதில் நியாயம் உள்ளது.

மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். மக்களை திருப்திப்படுத்த இது அவசியம் என்றால் எதிர்தரப்பில் நரேந்திர மோடி போன்றவர்களை தூக்கில் போட்டால் பலர் திருப்தியடைவார்கள். இதை செய்யமுடியுமா என்ற வாதத்தை ஒரு இஸ்லாமிய பதிவாளர் எழுதியிருக்கிறார்.இந்த வாதம் எதற்கு வருகிறது என்றால் இது வெறும் கிரிமினல் வழக்கு மட்டும் அல்ல.பொலிடிக்கல் வழக்கும் கூட என்ற எண்ணம் ஒரு சாரார் மத்தியில் நிலவுகிறது.இன்றும் பிரேமதாசாவை கொன்ற விடுதலை புலிகளுடன் இலங்கை அரசாங்கம் எப்படி பேச்சு வார்த்தை நடத்துகிறது என்பது போன்ற கேள்விகளை இங்கு போட்டு பார்க்கலாம். ரொம்பவும் நுட்பமான பகுதிக்கு வருகிறேன்.

இனி ரோசா, செல்வன் மற்றும் குழலி ஆகியோர் பதிவுகளைப் பார்ப்போம்.தீவிரவாதியை தூக்கில் போட வேண்டும் என்று முழக்கங்கள் ஒலிக்கின்றன. நாகரீக சமுதாயத்தில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதிகளை கொல்ல முயற்சிப்பது என்பது கொடிய குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது சரிதான்.நாமும் முழங்குகிறோம்.நியாயமான முழக்கம்தான்.

ஆனால் காஷ்மீர் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்.அங்குள்ள அனைத்து அமைப்புகளும் இதை எதிர்க்கின்றன.இங்கு நானும் மிக ஜாக்கிரதையாக வாக்கியங்களை அமைக்க வேண்டி இருக்கிறது.நாம் இங்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பார்க்கும் பார்வைக்கும் அங்கு வாழும் மக்களின் பார்வைக்கும் இருக்கும் வேறுபாடுகளை நான் கவனிக்க முயற்சிக்கிறேன். காஷ்மீர் மக்களின் பார்வை என்ன என்பதை நாம் சொல்லமுடியுமா? நாம் இதை காதில் கேட்க விரும்பாமல் இருக்கலாம். இது சரியா தவறா, உண்மையா என்று எல்லாம் என்னால் கூற முடியவில்லை. முதன் முதலில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த ஒரு காஷ்மீர் நபரை தூக்கில் போட்டதே அந்த பகுதி மக்களுக்கு இன்னமும் ஆறாத ரணமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்சலை குழலி பகத்சிங்காக ஆக்குகிறார் என்று செல்வன் கூறுகிறார். குழலியினுடைய கருத்து கடுமையாக இருந்தாலும் செல்வனுடையதும் மட்டையடி தான்.

குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை.வெறும் மரண தண்டனை பற்றிய விவாதம் மட்டும் இல்லை இது.உதாரணமாக வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போடுவதை பற்றிய விவாதம் வந்தால் அதை நாம் அரசியல்ரீதியாக அணுக முடியாது.(தமிழ் தீவிரவாதிகளுடன் வீரப்பன் கூட்டணி சேர்ந்து காமெடி செய்த துன்பியல் நிகழ்வுகள் வேறு).

சென்சிட்டிவ்வான புள்ளிகளை தொட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். அப்சல் என்பவனின் பங்கு இந்த குற்றத்தில் என்ன என்பதைப் பற்றி யாரும் எழுதவில்லை. உடந்தையாக இருந்தவன் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கின் நுட்பமாக பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. தெரியவில்லை என்பது ஒரு காரணம். இந்த கட்டுரையின் பேசுபொருளுக்கு அவசியமில்லை என்பது மற்றொரு காரணம்.ரோசாவசந்த் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்களின் வழக்கை மேற்கோள் காட்டியதும் இந்த இடத்தில் யோசிக்கத்தக்கது.

கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்கப்பட்டால் அப்சல் தூக்கில் தொங்க வேண்டியதுதான்.இதுவரை எந்த தூக்கு தண்டனை குற்றவாளியையும் அப்துல் கலாம் சந்தித்ததில்லையாம்.ஆனால் அப்சலின் உறவினர்கள் சந்தித்தாராம்.ஒரு அரசியல் முடிவாக இந்த மரண தண்டனை நிறுத்தப்படலாம் என்ற ஆங்கில மீடியாக்கள் கூறுகின்றன.அந்த அரசியல் முடிவு சரியா தவறா என்று கூறமுடியாது.இந்த விவாதங்களுக்கு முடிவு என்பதே இல்லை.எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் விஷயம்.

உன் கருத்து என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....

அப்சலை தூக்கில் போடுங்கடா

( Although i have not supported or opposed any section, given the sensitiveness of the subject moderation will be strictly enforced)

Thursday, October 05, 2006

மங்களூரில் இந்து முஸ்லீம் கலவரம்

நேற்றுத்தான் ஒரு முழு அடைப்பு நடந்து முடிந்தது இந்த பந்த்தினால் நான் எப்போதும் சாப்பிடும் உணவகம் நேற்றைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் நான் சொந்தமாக சமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆளானேன்.MTRல் மசால் தோசையை கூட பார்சலாக செய்து விற்கிறார்களாம். நண்பர்கள் சொன்னார்கள். அது சரியாக வராது என்பதால் MTR உடனடி கலக்கல்(மிக்ஸ்) தோசை மாவை வாங்கி தோசை முயற்சி செய்திருந்தேன். அதுவும் சரியாக வரவில்லை. சோர்ந்து போயிருந்த நான் இன்று காலையில் முதல் வேலையாக ஓட்டலுக்கு ஓடினேன். இந்து முஸ்லீம் பிரச்சினையினால் இன்றும் பந்த் என்றார்கள்.

"அவுதா" என்றேன்.இப்போது சொல்ப சொல்ப கன்னட வார்த்தைகளை அங்கங்கே பொருத்தமான தருணங்களில் வீச பழகியிருந்தேன். நான் குடியிருக்கும் பகுதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி.அனைவரும் நட்புடன் பழகுவார்கள். பஜ்ரங் தள் செய்த கலாட்டாதான் காரணம் என்றார் ஒரு பெரியவர்.இஸ்லாமிய மக்களும் பயத்தில் தான் இருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது.

சரி அலுவலகத்திற்கு சென்று விடுவோம். கேன்டீன் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்.ஏதோ சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு இணையத்தை திறந்து கலவரத்தைப்பற்றிய செய்தியை தேடினேன்.

நேற்று நடந்த முழு அடைப்பே மராட்டியர் பெருவாரியாக வாழும் பெலகாம் பகுதியை மகராஷ்ட்ராவுடன் சேர்க்கக்கூறி அந்த பகுதி மக்களில் ஒரு பிரிவினர் (இவர்களில் மக்கள் பிரதிநிதிகளும் உண்டு)போராட்டங்கள் நடத்துவது பற்றித்தான். ஆனால் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது கன்னட அமைப்புகள். இந்த அமைப்புகள் இந்த விஷயத்தில் மத்திய அரசின் போக்கை கண்டிக்கின்றனவாம்.இந்திய தேசியத்தில் என்ன பிரச்சினையை கண்டார்கள் இந்த பெலகாம் மக்கள் என்று தெரியவில்லை.எங்கு இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாதானே? சர்வம் இந்தி மயம் தானே என்று அவர்களுக்கு கிளாஸ் எடுக்க நம் வலைப்பூ தேசியவாதிகள் அங்கு இல்லை போலிருக்கிறது.

சரி இன்றைய சமாச்சாரத்தை பார்ப்போம்.மங்களூரில் சிறுபான்மை ஜனதொகையும் அதிகம் தான். நிறைய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய ஊர் இது. ஏற்கனவே cow slaughter எனப்படும் மாட்டுக்கறி சமாச்சாரத்தில் இங்கு பிரச்சினை புகைந்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன்.மிகவும் சுவாரசியமானது மாட்டை வெட்டி கறி போடக்கூடாது என்பதற்காக slaughter house எனப்படும் கறி வெட்டப்படும் இடத்தை நகராட்சி ஏலத்தில் பி.ஜே.பி, பஜ்ரங் தள் ஆட்கள் எடுத்துவிட்டார்களாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டம்..எப்படி? புத்திசாலித்தனமாக அக்கிரமம் செய்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் நாம் படிக்கவேண்டும்.

நாட்டை இந்துமயப்படுத்தும் இவர்கள் போராட்டத்தின் ஒரு அத்தியாயம் தான் நேற்றைய கலவரமும். இப்போது கூறப்பட்டுள்ள செய்தி என்னவெனில் நேற்று இரவு இது போன்ற மாடுகளை வெட்ட போய்க்கொண்டிருந்த ஒரு வேனை பஜ்ரங் தள் ஆட்கள் வழிமறித்தார்களாம்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது.உயிர்சேதம் பற்றி தகவல் இல்லை.

பிரச்சினைக்குரிய அந்த வேன் ஒரு குவாலிஸ் கார்மீதும் ஒரு பெண்மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் அதனால் தான் பிரச்சினை என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.ஆனால் பஜ்ரங்தள் ஆட்கள் பங்கை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

முஸ்லீம்களோ, யாரோ மாட்டுக்கறி சாப்பிடுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. இப்படி எல்லாவற்றையும் புனிதப்படுத்தி புனிதப்படுத்தி எதை சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்? என் அலுவலகத்தில் ஒரு நண்பர் அவர்கள் மாட்டை வெட்டும் முறையை தான் பஜ்ரங் தள் காரர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டினார்.

இதுபோன்ற முட்டாள்தனமான புனிதப்படுத்துதல்கள் கலவரங்களில்தான் வந்து முடிகின்றன.இந்த கலவரங்களிலும் உயிரிழப்பது அப்பாவி மக்கள்தான். இவர்கள் கிளப்பும் புனித வெறியில் மயங்கி உயிரை விடுவது பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்பது கொடுமையான செய்தி. கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் முன்னேறிய வகுப்பினர் இல்லை என்ற செய்தியை இத்துட்ன் சேர்த்து பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட விஷம பிரச்சாரங்களுக்கு நடுவிலும் புனிதங்களை உடைக்க ஒரு சாரார் இருப்பது ஆசுவாசம் தருகிறது. அனைத்து தலைமுறைகளிலும் மக்களை உள்ளடக்கிய இந்த வகையான மக்களுக்கு தமிழகத்தில் பரவலான ஆதரவும் இருப்பது தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டு கால அரசியலின் சாதக விளைவுகளில் ஒன்று.

கடைசியாக, இன்று இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது? இன்றும் MTR தோசை தான். ஆன்லைன்ல சாப்பாடு கிடைக்காதாமே?

Wednesday, October 04, 2006

ஒத்தக்கால் குதிரை கவிதை

சமீபத்தில் மறைந்த மலையாள கவிஞர் அய்யப்ப பணிக்கரின் .ஒத்தக்கால் குதிரை என்ற கவிதையை உயிர்மை இதழில் படிக்க நேர்ந்தது.கவிதைகளில் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாவிடினும் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.நீங்களும் படியுங்களேன்.


குதிரை நடனம்
*****************

நான்கு பெரும் குதிரைகள்

அலங்கரித்து வந்தன

ஒன்று வெள்ளை, ஒன்று சிவப்பு

ஒன்று கருமை, ஒன்றுக்கு தவிட்டு நிறம்

ஒன்றுக்கு நான்கு கால்

இரண்டாவதிற்கு மூன்று கால்

மூன்றாவதிற்கு இரண்டு கால்

நாலாவது ஒற்றைக்கால்

ஒற்றைக்கால் குதிரை சொன்னது

மற்றவர்களிடம்

நடனத்திற்கு நேரமாகிவிட்டது நண்பர்களே

நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோமாக!

நடனம் தொடங்கியது

நான்குகால் குதிரை நடுங்கி விழுந்தது

மூன்றுகால் குதிரை மூர்ச்சையானது

இரண்டுகால் குதிரை நொண்டித் தவித்தது

ஒற்றைக்கால் குதிரை மட்டும்

ஆடிக்கொண்டே இருந்தது

**********

கவிதைகளுக்கு அருஞ்சொற்பொருள் கொடுத்து விளக்கம் கொடுக்கமுடியாது என்று கவிஞர்கள் கூறுவது ஏன் என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது. இந்த கவிதை தரும் சிந்தனைகளை விளக்கமுடியுமா? நம் வலைப்பூ நவீனகவிதை தீவிரவாதி மணிகண்டனை பிடித்து சில கவிதை புத்தகங்களை கேட்டு வாங்கி படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கும் கவிதைகளுக்கும் தொடர்பு விட்டுப்போனது ஏன் என்று யோசித்து பார்க்கிறேன்.கீழே உள்ள கவிதையை படியுங்கள்.சொல்கிறேன்.

காதலி
*******
அன்பே

நீ ராணி

நான் பேமானி

நீ செவப்பு

நானோ உந்தன் செருப்பு


சிறுவயதில் இது போன்ற கவிதைகளை பத்திரி்க்கைகளில் படித்து பேஜாராகியதால் கவிதைகளை படிக்காமல் இருந்திருக்கிறேன் போல.