Monday, January 16, 2006

நட்பை மதிப்பவன் நான் - சரத்குமார்

இந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி,தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஆகிய கூத்துக்களை நானும் ஒரு காலத்தில் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்த்து வந்தவன் தான்.இதை ஒத்துக்கொள்வதில் வெட்கம் ஒன்றும் இல்லை. ஆனால் வயது ஏற ஏற நம் சினிமா அறிஞர் பெருமக்களின் அனுபவங்களையும் அவர்கள் ஒருவரை ஒருவர் பரவச வார்த்தைகளால் போற்றி பேசி புளகாங்கிதம் அடைவதையும் பார்ப்பது நரக வேதனையாயிற்று.

நேற்றோ முந்தாநாளோ "சுப்ரீம் ஸ்டார்" எம்.பி சரத்குமார் தன் இளமை காலத்தையும் கல்லூரி வாழ்க்கையும் நினைவு கூர்ந்து கொண்டிருந்ததை அகஸ்மாத்தாக பார்க்க நேர்ந்தது. தான் பழைய நட்பை எவ்வாறெல்லாம் மறவாது இருக்கிறேன் என்பதை தன்னுடைய இளமைகாலத்தில் தனக்கு சிகை அலங்காரம் செய்த தன் நண்பனை வைத்து சுவையாக சொன்னார் சரத்குமார்.

சரத் லயோலாவில் கணக்கு பாடத்தில் டிகிரி படித்தாராம். அங்கு தனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியரையும் நமக்கு அறிமுகப்படுத்தினார் சுப்ரீம்ஸ்டார். அட்டகாசமாக தன் நண்பர்கள் புடைசூட சரத் அமர்நதிருக்கிறார். சைடில் சேர் போட்டு வெட்கத்தோடு அமர்நதிருக்கிறார் அந்த ஆசிரியர். அவருக்கு பொங்கல் வாழ்த்து சொல்கிறார் சுப்ரீம்ஸ்டார். சேரை விட்டு எழவில்லை. ஆனால் ஆசிரியர் சேரை விட்டு எழுந்து நின்று கைகுலுக்கி அந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்கிறார்.எனக்கு அந்த ஆசிரியரை நினைத்து பாவமாக இருந்தது.ஒரு பக்கம் கோபமாகவும் இருந்தது. சரத்குமாராவது மரியாதைக்கு எழுந்து நின்றிருக்கலாம். சரி .சரத்குமார் பழைய நண்பர்களிடம் பந்தா இல்லாமல் பழகுவார். ஆனால் தனது பழைய ஆசிரியர்களை மதிப்பேன் என்று கூறினாரா? என்று நினைத்து என் மனதை தேற்றிக்கொண்டேன்.தொ'ல்'லைக்காட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சேனல் மாற்றினேன்.


அதற்கு முதல்நாள் இயக்குனர் சூர்யா வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி? என்று தமிழ்கூறு நல்லுலகிற்கு கிளாஸ் எடுத்ததாக கேள்விப்பட்டேன். தான் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் தான் தூங்குவதாகவும் மற்ற நேரங்களில்
வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்றும் தன் தொழிலை பற்றியுமே சிந்தித்து கொண்டிருப்பதாகவும் கூறிய இயக்குனர் சூர்யா எல்லா தமிழனும் அவ்வாறு தன்னை போல் உழைத்தால் முன்னேறலாம் என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்.

எப்படி நயன்தாராவை விதவிதமாக உரித்து காட்டலாம், எப்படி எப்படி எல்லாம் கேட்கவே காது கூசும் இரட்டை அர்த்த வசனங்களை படத்தில் சேர்க்கலாம்,ப்ளு பிலிமை ஒத்த படங்களை சென்சார் அதிகாரிகளை உதைத்தாவது எப்படி ரிலீஸ் செய்யலாம் என்று சூர்யா தமிழன் வாழ்வு முன்னேற கடுமையாக உழைக்கிறார்.

இந்த மாதிரியான பொறுப்புணர்வு இல்லாமல் நாம் நாளும் கிழமையுமாக குடும்பத்தோடு டிவி முன் அமர்ந்து இவரை ரசிக்கிறோம். ஆறரை கோடி தமிழர்களில் ஒருவர் அல்லவா இவர்? சூர்யா தவறாமல் வழிபடுகிற மேரி மாதா தான் நம்மை காப்பாற்றவேண்டும்.

8 comments:

ஜோ/Joe said...

முத்து,
உண்மை..உண்மை..இதுங்க தொல்லை தாங்க முடியல்ல!

இலவசக்கொத்தனார் said...

சீரியல் சோகங்களுக்கு பதில் இந்த காமெடிகள் எவ்வளவோ பெட்டர். ஆமாம் இதையல்லாம் போய் ஏன் சார் சீரியஸாய் பாக்கறீங்க.

டிபிஆர்.ஜோசப் said...

இதையல்லாம் போய் ஏன் முத்து சீரியஸாய் பாக்கறீங்க?

மூளையையும் மனசையும் கழட்டி வச்சிட்டு பாக்க வேண்டியவை.. தமிழ் சினிமாவும் (நகைச்சுவை தவிர்த்து) தமிழ் தொலைக்காட்சியும்..

Muthu said...

நன்றி ஜோசப் சார், ஜோ, மற்றும் இலவசகொத்தனார்,

நம்பளாலே கால் சேற்றில் படாமல் நடக்கமுடியும் என்று நம்பிக்கை உள்ளது...ஆனால்.....

என்ன சார் சொல்றது...மனசு தாங்காம கொட்டிட்டேன்...(அதுவும் இயக்குநர் சூர்யா வந்து பேசுற வார்த்தைகள் எல்லாமே கொடுமை சார்)

கொழுவி said...

நேற்றுத்தான் பாக்கியராஜின் "பாரிஜாதம்" படத்தொடக்கவிழாவின் சில காட்சிகள் பார்த்தேன். ஒலிப்பதிவு தெளிவில்லை. அதில் விவேக்கின் பேச்சிலிருந்து நான் விளங்கிக்கொண்டது:

சினிமா உலகத்தில் மிகமுக்கியமானது.
மனித வாழ்வைப் புரட்டிப்போட்டது சினிமாதான்.
சினிமா வந்துதான் மனிதனுக்குக் காதல் வந்தது.
சினிமா வந்துதான் மனிதனுக்குக் காமம் வந்தது.
சினிமா வந்துதான் மனிதனுக்கு ரசனை வந்தது.
சினிமா வந்துதான்........

இன்னும் சிலவற்றைச் சொன்னார்.

அவர் எந்த நோக்கத்தில் எதற்காகச் சொன்னார் என்பது சரியாகத் தெரியவில்லை. முழுப்பேச்சையும் கேட்டிருந்தால் ஓரளவு புரிந்திருக்கலாம்.

இந்நிகழ்ச்சியை நேரிற் பார்த்தவர்கள். அல்லது தெளிவாகப் பார்த்தவர்கள் யாராவது நான் விளங்கிக்கொண்டதைத் திருத்தலாம்.

Muthu said...

நன்றி கொழுவி,

இத்துடன் இந்த மாத உயிர்மையில் நாஞ்சில் நாடன் எழுதிய புண்ணுக்கு மை அழகா? என்ற கட்டுரையையும் சேர்த்து படியுங்கள்......

Santhosh said...

முத்து நல்லா எழுதி இருக்கிங்க. நிஜமாவே அன்னிக்கி நிகழ்ச்சிகளை பாத்து கடுப்பாயிடிச்சி, பொங்கலுக்கு நாட்டு மக்களுக்கு என்ன செல்ல விரும்பறிங்கன்னு விஜய் ஆதிராஜ் திரிஷா கிட்ட வழியிறார் டேய் காந்தி கிட்ட போட்டி எடுக்கிற பாரு சேதி கேக்குறாராம் சேதி ஆளும் மண்டையும்.

Muthu said...

சரி தான் சந்தோஷ்,

நீங்க திரிஷா வின் மெஸேஜு கேட்டீங்களா...நான் மிஸ் பண்ணிட்டனே...இதுக்கெல்லாம் முடிவு காலம் வருமா?