Thursday, November 10, 2005

உலக தமிழ் இலக்கிய வகையும் வடிவும்

சமீபத்தில் சென்னையில் ஒரு இலக்கிய விழாவை பார்க்க நேரிட்டது. உண்மையில் நான் அங்கு ஒதுங்க நேரிட்டது மழைக்காகத்தான்.(நிஜமாங்க). இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் கருத்தரங்கு அது.

ஒரு தேர்வின் நிமித்தம் சென்னை செல்லவேண்டி இருந்த நான் அப்படியே சென்னையை சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணத்தில், எங்கள் வங்கியி்ல் உள்ள ஒரு சலுகையை பயன்படுத்தி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்திருந்தேன். சிங்கார சென்னையின் மழை என் அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மிக அருகில் இருக்கும் கல்லூரிக்கு ஆட்டோவிற்கு நூறு ரூபாய் கொடுத்து சென்றோம். ( மழை பெய்வதால் சார்ஜ் அதிகமாம்.ஆனால் மீட்டர்படி வாடகை என்பது எங்கள் வரலாற்றிலேயே இல்லை என்கிறார்கள். மும்பய்ல கூட ஆட்டோக்கள் மீட்டர் படி தான் ஒடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மீட்டர் போடும் ஆட்டோகாரர்களை பார்க்க முடிவதில்லை.மீட்டரை இம்ப்ளிமெண்ட் பண்ணவேண்டிய போலீஸ்காரங்க தான் நிறைய ஆட்டோக்களை வைத்திருக்காங்களாமே.இதைப்பற்றி சென்னைவாழ் நண்பர்கள் தனிப்பதிவே போடலாம் )

மழை வலுத்த நேரம் என் மனைவி தேர்வு ஹாலுக்குள் சென்றுவிட கையில் ஒரு வயது மகளுடன் நான் மழைக்கு ஒதுஙகவேண்டி நுழைந்த இடம்தான் அந்த கல்லூரியின் ஆடிட்டோரியம்.அங்குதான் மேற்படி இலக்கிய விழா.அதென்ன தலைப்பு உலக தமிழ் இலக்கிய வகையும் வடிவும் வெறுமனே தமிழ் இலக்கிய வகையும் வடிவும் என்று இருந்தால் பத்தாதா என்று கேட்பவர்களுக்கு பதில் பின்னால் வருகிறது.


பிள்ளைத்தமிழ் பற்றி சில கட்டுரைகள் படிக்கப்பட்டன. சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த தகவல்களையே கருத்தரங்க கட்டுரையாக முன்வைக்கப்பட்டது சலிப்பை ஊட்டியது. ஒரு மாணவர் சைவ சிந்தாந்தத்தை பற்றி அருமையாக உரையாற்றினார்.சைவ சிந்தாந்தத்தை பற்றி எதுவும் தெரியாத என்னை போன்றவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.சம்ஸ்கிருததிலும் பிள்ளைத்தமிழ் இருப்பதாகவும் அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி சில கட்டுரைகள் படிக்கப்பட்டன. சங்க இலக்கியத்தில் எனக்கு புலமை கம்மியாதலால் நவீன இலக்கியத்தை பற்றி எதாவது கட்டுரை வரும் என காத்துக்கொண்டு இருந்தேன்.

கடைசியாக வந்தது ஒரு கட்டுரை. மணிக்கொடி காலத்து பரிசோதனை கதைகள் என்ற தலைப்பில் ஒரு அருமையாக கட்டுரை. கல்வித்துறைக்கே உரிய பாணியில் அமைந்த பிரஸன்டேஷனை தவிர்த்துவிட்டு பார்த்தோமென்றால் ந.பிச்சமூர்த்தி கு.பா.ரா.புதுமைபித்தன் போன்றவர்களின் பரிசோதனை முயற்சிகளை பற்றி அழகாக கூறினார் என்று கூறலாம். புதுமைபித்தனை தவிர வேறு மணிக்கொடி எழுத்தாளர்களை பழக்கம் இல்லாத எனக்கு இந்த கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற மணிக்கொடி எழுத்தாளர்களையும் படிக்க தூண்டியது. மணிக்கொடி எழுத்தாளர்களின் தேர்தெடுத்த சிறுகதைகள் என்று ஏதாவது தொகுப்பு இருந்தால் நண்பர்கள் எனக்கு தெரியபடுத்தலாம்.

பிறகு லேட்டஸ்ட்டாக வந்த நாவல்களின் வடிவங்களை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை படிக்கப்பட்டது. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை,உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை உள்பட 2000 முதல் 2004 வரை வெளிவந்த நாவல்களை எடுத்துக்கொண்டு வடிவம், வட்டார சொற்கள்,அத்தியாயங்கள் அல்லது கதை போக்கு முன் பின் முரணாக இருப்பது போன்ற விஷயங்களை பேசினார். நல்லவேளை பாலகுமாரன், ரமணிசந்திரன் முதலான நாவல்களை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை.சந்தோஷபடவேண்டிய விஷயம்தான். பிறகு பிற்பகல் உணவு இடைவேளை விட்டவுடன் இங்கு தேர்வு முடிவடைந்து விட்டதால் நானும் வெளியேற வேண்டியதாகிவிட்டது.

இத்தனை ஆய்வுக்கட்டுரைகளையும் புலவர்கள் சமர்ப்பிக்கும்போது கரகோஷம் எழுப்பிய ஒரே ஜீவன் என் ஒரு வயது மகள்தான். தன் தாயை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரியாத அவள் தொடர்ந்து மூன்று மணிநேரம் என்னுடன் இருக்க நேர்ந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள்.


என்னை போலவே மற்றவர்களுக்கு தேர்வுக்கு துணையாக வந்து மழைக்கு ஒதுங்கிய சிலர் தான் பார்வையாளர்கள்.கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த பேராசிரியை இது போன்ற பல கருத்தரங்குகளை பார்த்திருக்கவேண்டும். பத்துப்பேரை வைத்துக்கொண்டு மேடையில் பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். போன் ஆண்டு வெறும் தேசிய கருத்தரங்காக நடந்த கருத்தரங்கு இந்த ஆண்டு பன்னாட்டு கருத்தரங்காக முன்னேறியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார் அவர். இதையெல்லாம் எப்படி, யார் தீர்மானிக்கிறார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.சிங்கப்பூரில் இருந்து ஒரு கட்டுரை வந்துள்ளதால் இது பன்னாட்டு கருத்தரங்காக மலர்நதுள்ளதாக அகமகிழ்ந்தார்.
பன்னாட்டு கருத்தரங்கு அடுத்த ஆண்டு இதே அழகில் நீடித்தால் கருத்தரங்கை துறை தலைவர் தனியாக நடத்த வேண்டி வரும் என்றுதான் நினைக்கிறேன்.

பன்னாட்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும்போது சக ஆய்வாளர்கள் மட்டும்தான் பார்வையாளர்கள் என்பது தமிழின் எதிர்காலத்தை நன்றாகவே படம் பிடித்துக்காட்டுகிறது. ஏற்கனவே நான் கூறியிருந்தபடி தமிழ் ,தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் பேசுவதே கேவலம் என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை. இம்மாதிரியான இலக்கிய விழாக்களுக்காவது மாநகரத்தில் உள்ள அனைத்து கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களும் அழைக்கப்பட்டிருக்கலாம்.குறைந்தபட்சம் அந்த கல்லூரி துறை மாணவிகளாவது அனைவரும் வந்திருக்கலாம். எனவே என்னுடைய இந்த பதிவால் இந்த இலக்கிய விழாவானது தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு நூறு பேராவது படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.(comprehensive coverage). விழா நிர்வாகிகள் அடுத்த முறை என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்(?) அல்லது ஆள் அனுப்பி உதைக்கலாம்.



tamil literature

6 comments:

Boston Bala said...

Thanks for this post!

வெளிகண்ட நாதர் said...

தமிழ் கூறும் நல்லுழகம் தமிழ் அகத்திலே அகமின்றி போய்விட்டதோ! கொடுமை

Muthu said...

thank you bala and nathar

Anonymous said...

THANGALATHU KAVALAI KAVANATTHIRKKURIYATHU...

Muthu said...

நன்றி திரு அப்துல்லா இந்த கவலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இல்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

போய்வர முடியாமல் போன குறையைப் போக்கினீர்கள். மிக்க நன்றி!