Wednesday, November 09, 2005

நெஞ்சில் எட்டி உதைத்த காப்கா...

ஒரு வார தீபாவளி விடுமுறையை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.மதுரை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்று இரண்டு இந்திய எழுத்தாளர்கள்,இரண்டு வெளிநாட்டு எழுத்தாளர்கள் என்ற கணக்கின்படி நான்கு புத்தகங்கள் வாங்கினேன்.பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்,காப்காவின் விசாரணை மற்றும் ஆல்பெர் காம்யுவின் அந்நியன் ஆகியவையே அந்த புத்தகங்கள்.

புரிந்ததோ இல்லையோ நான்கு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிட்டேன். முதலில் வெளிநாட்டு நாவல்களை பற்றி சில வார்த்தைகள். ப்ரன்ஸ் காப்காவின் விசாரணை என்ற நாவல் க்ரியாவின் வெளியீடு. சற்றே பெரிய அந்த நாவலை எப்படி அப்படி அச்சு கோர்க்க முடிந்தது அந்த பதிப்பகத்தால் என்று என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. பக்கங்களை குறைக்கிறோம் என்ற பெயரில் வாக்கியங்களை மிகவும் நெருக்கி படிக்க முடியாதபடி செய்திருந்தார்கள். அதனால் தான் எனக்கு நாவல் புரியவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

நாவலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. ப்ரன்ஸ் காப்காவும் அந்த நாவலின் கதாநாயகனான "யோசப் க"வும் என் நடு நெஞ்சில் எட்டி எட்டி உதைக்கின்றனர். உள்ளே நுழையாதே என்கின்றனர். உதையையும் வாங்கிக்கொண்டு படித்து முடித்தேன். முதன்முதல் என் நெஞ்சில் எட்டி உதைத்த சுந்தர ராமசாமி ,ஜெயமோகன் போன்றோரை நினைத்தேன். எப்படியும் இன்னும் சிறிது காலம் கழித்து படித்தால் புரிந்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை பரணில் போட்டுவிட்டேன்.

இரண்டாவது புத்தகம் ஆல்பெர் காம்யுவி்ன் அந்நியன்.(ஞாபகம் இருக்கிறதா காம்யுவை? ஜே.ஜே சில குறிப்புகளில் ஆல்பெர் காம்யு பற்றி எழுதி இருப்பார் சு.ரா.)
காப்கா போல் அல்லாது காம்யு என்னை அரவணைத்து ஏற்றுக்கொண்டார். என் அப்படி என்று யோசித்து பார்த்தேன். என்னுள்ளும் அந்த அந்நியனின் சில கூறுகள் இருப்பதினால் தான் எனக்கு சற்றேனும் இந்த கதை புரிந்தும் பிடித்தும் உள்ளது என்று தோன்றுகிறது.இந்த கதையையும் திரும்ப படிக்கத்தகுந்த கதைதான்(புரிதலுக்கு அல்ல,சுவைத்தலுக்கு)

மூன்றாவதாக புலிநகக்கொன்றை. இந்த நாவலை பற்றி ஒரு அருமையான நாவல் என்று சொன்னால் அது சாதாரணமான வார்த்தையாகிவிடும். இந்த நாவலில் எனக்கு என்ன பிடித்தது என்பதை கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை பகைத்துக்கொள்வதாக ஆகிவிடும். ஆனால் நேர்மையான இலக்கியம் என்பதற்கு உதாரணமாக இந்த நாவலை கூறலாம்.இது நான் நாவலை படித்தவரை, புரிந்துக்கொண்டவரை, உள்வாஙகிக்கொண்டவரை என்னுடைய கருத்து.

முக்கியமாக நான் கூறவந்தது சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவல். சற்றே பெரிய சிறுகதை என்று கூறலாம். மிகவும் நன்றாக எழுதியுள்ளார். ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒரு கதையின் மூலம் நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.

சற்றே காப்பிய தன்மை கொண்ட இந்த கதை முன்முடிவு கொண்டது. ஆனால் நடை அத்தனை குறைகளையும் போக்கி இதை ஒரு அருமையான கதையாக தூக்கி நிறுத்தி உள்ளது.இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

மனிதனுக்கு இது விளையாட்டாக இருந்தாலும் காளைக்கு இது விளையாட்டு அல்ல என்று கூறும் கதாசிரியர் மாடு பிடிக்கும் நுட்பங்களையும் அழகாக பதிவு செய்துள்ளார்.இந்த நாவலை ஒரு நல்ல தரமான சினிமா டைரக்டர் சினிமாவாக எடுக்கலாம் என்பது என் கருத்து. ஜமீன்தார் பாத்திரத்திற்கு நாசரை சிபாரிசு செய்கிறேன்.


நான் பார்த்த ஜல்லிக்கட்டை பற்றி என்னுடைய வங்கி பதிவு-2 எழுதலாம் என்றுள்ளேன்.

3 comments:

Maravandu - Ganesh said...

அன்புள்ள முத்து

நல்ல பதிவு நன்றி
இன்னும் விரிவாக எழுதுங்கள் :-)


என்றும் அன்பகலா
மரவண்டு

Anonymous said...

Yea... Write with more details...

Muthu said...

நன்றி மரவண்டு மற்றும் ஜாஜா

யாரோ என் பதிவிற்கு - போட்டிருக்காங்க...அவ்வளவு பொருட்படுத்தக்கூடிய சக்தியா நான்? நன்றி.