Monday, October 17, 2005

எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி

ஒரு எழுத்தாளனின் கடமை என்ன? ஒரு எழுத்தாளன் தன் வாழும் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை என்ன? வெறுமே இலக்கியம் படைத்துவிட்டால் மட்டும் போதுமா? நாம் ஒரு கொள்கையை விரும்பி ஏற்கிறோம். அது சரியானது என்று நம்புகிறோம். அது நம் படைப்பில் வெளிப்படலாம். வெளிபடாமலும் போகலாம். ஒழுக்கமானது,உயர்வானது என்று தம் படைப்புகளில் தூக்கிபிடிக்கப்படும் பல விசயங்களை சொந்த வாழ்க்கையில் பின்பற்றாத பல இலக்கிய வாதிகளை நாம் நிறைய பார்த்துவருகிறோம்.

நாம் சரி என்று நமக்கு பட்ட ஒரு கொள்கையை ஏற்கிறோம். பின்னால் அதில் உள்ள குறைபாடு நமக்கு தெரிய வருகிறது.நம்மில் எத்தனை பேர் நம்முடைய ஜுட்ஜுமெண்ட் தவறென்று ஒத்துக்கொள்கிறோம்? நம்முடைய நிலையை காத்துக்கொள்ள நாம் நினைத்தது சரி என்று நிறுவ எத்தனை குட்டிகரணம் அடிக்கிறோம்? இந்த சிறுமைகளை மீறி வாழ்ந்தவர்களையே நாம் உயர்ந்தவர்கள் என்கிறோம்.

சுந்தர ராமசாமி.தமிழ் இலக்கிய உலகின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்ந்தவர்.உடல்நலக்குறைவு காரணமாக 15.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார். மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் எதிர்பாராத மரணம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்காலம் இலக்கிய உலகில் சமரசங்களற்று,உயர்ந்த தரத்தை மட்டுமே தம் மதீப்பீடுகளாக முன்வைத்து,என் போன்ற எத்தனையோ இளைஞர்களை தமிழ் இலக்கியத்தின் பால் திருப்பிய பேராசான்.நான் எப்படி இலக்கிய உலகிற்குள் சுந்தர ராமசாமியினால் இழுத்து வரப்பட்டேன் என்பதை என்னுடைய முந்தைய கட்டுரையில் கூறி உள்ளேன்.முதன்முதலாக அவரின் கட்டுரைகளை படிக்க் நேர்ந்தப்போது நான் அடைந்த அதிர்ச்சிகளுக்கு அளவே இல்லை.இவை என் உரைகள் என்ற அந்த அவரின் கட்டுரை தொகுப்பு மிகவும் ஆழமானது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

எளிமையான விளக்கங்கள்,எள்ளல் தேய்ந்த நடை, சமரசங்களற்ற உயர்ந்த மதிப்பீடுகள் ஆகியவை அவரின் படைப்பு திறனின் சிறப்புகளின் சில கூறுகள்.

"இல்லாத அற ஒழுக்கங்களைப் படைப்புகளில் திணித்தால் அது வாழ்க்கையில் அமலாகிவிடுமா? நாவல் என்பது உட்டோப்பியா அல்ல.எவ்வாறு வாழ்க்கை இருக்கவேண்டும் என்று கனவு காண்பது அல்ல நாவல். எவ்வாறு வாழ்க்கை இருக்கிறது என்ற பரிசீலனை நாவலாசிரியனை சார்ந்தது"..

"எழுத்தாளன் என்ற முறையில் நான் தூக்கி சுமக்க வேண்டிய சித்தாந்தங்கள் என்று எதுவும் இல்லை. காலத்தின் பக்கம் நின்று சாட்சியம் சொல்வது என் வேலை."

"இன்றைய திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.ஒன்றுக்கும் பிரயோஜுனமில்லாத ஒரு கதாநாயகன்,ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக்கூடிய ஒரு கதாநாயகன்,அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ,டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம்.அவன் அந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள்.அந்த கரகோஷத்திற்கு அர்த்தம் 'அவன் அறிவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது' என்பதுதான்.இவை நாம மன ரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்"

எவ்வளவு ஆழமாக அதே சமயம் எளிமையான கருத்துக்கள். சுந்தர ராமசாமி,ஒரு படைப்பாளியின் நோக்கம் அவன் சார்ந்த சமூகத்தை சிந்திக்க வைப்பது தான் என்றால் உங்கள் வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதற்கு என்னை போன்ற எண்ணற்ற இளைஞர்களே சாட்சி.

இதை படிக்கும் சிலராவது அவரை படிக்க முனைந்தால் இந்த கட்டுரையின் நோக்கம் நிறைவேறிவிடும்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

1 comment:

Anonymous said...

SuRa vin Ninaivukalai Azhzgaka solli Avarukku Anchali seluththiyullikal Avaraip pontru neengalum Ilakkiya Ulagil Sadikka Vaazththukkal!