Monday, October 10, 2005

கள், சாராயம், சிகரெட் மற்றும் நவீன தமிழ் இலக்கியம்

இப்போது எங்கு பார்த்தாலும் தமிழ் இலக்கியம் பற்றியே பேச்சு. நவீன தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெற்றிருக்கும் இந்த பொன்னான தருணத்தில் எனக்கும் இலக்கியம் படைக்கும் ஆசை வந்ததில் வியப்பில்லை. ஆனால் எதை எழுதுவது? மிகுந்த யோசனைக்குப்பின் தமிழ் இலக்கியத்துடனான என் உறவு எப்படி ஏற்பட்டது என்பதையே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன்.இங்கு இரண்டு கேள்விகள் வருகின்றன. இது எப்படி இலக்கியம் ஆகும் என்பது முதல் கேள்வி. இதனால் என்ன பலன் என்பது இரண்டாவது கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை என் சார்பாக என்னுடைய சக (முன்னோடி) இலக்கிய வாதிகள் ஏற்கனவே கூறிவிட்டனர். எழுத்தாளன் வீட்டு பால் கணக்கு கூட இலக்கியமே என்பதே அந்த பதில். மேலும் இலக்கிய விமரிசனம் மட்டுமே கூறி இலக்கிய விருதுகளே வாங்கலாம் என்ற அளவு வளைந்துகொடுத்து போகும் தன்மை இலக்கியத்தில் உண்டு என்பதை இந்த சிறு காலகட்டத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆகவே தமிழ் இலக்கிய உலகம் என்னுடைய சிறு கட்டுரையை கண்டிப்பாக உள்வாங்கிக்கொள்ளும எனலாம்.
இரண்டாவது கேள்விக்கான பதில் என்னவென்றால் பொதுவாக தமிழ் சூழலில் ஒரு இலக்கிய எழுத்தாளன் சக இலக்கிய எழுத்தாளனுக்காகவே இலக்கியம் படைத்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து உண்டு. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் பலபுதிய வாசகர்களை தமிழ் இலக்கியத்தின்பால் திருப்ப வேண்டும் அல்லவா? நான் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டேன் என்று இலக்கியவாதிகள் தெரிந்துக் கொண்டார்களேயானால் அதே உத்தியை பயன்படுத்தி பல புதிய வாசகர்களையும் ஈர்த்து சக படைப்பாளிக்காக மட்டுமே எழுதி வரும் அவல நிலையிலிருந்து நாம்(?) அனைவரும் மீளலாம் என்பதே என் குறிக்கோள்.

அதுவும் வேண்டாமா? சரி. ஆபீசீலோ அல்லது வீட்டிலோ பொழுது போகாமல் இண்டர்நெட்டில் புகுந்து தமிழை பார்த்து வியந்து திண்ணை போன்ற வலைதளங்களில் விழுந்து இலக்கிய உலகை அணைக்க புறப்படும் இளைய தலைமுறைக்கு ஒரு ஒரு எளிய அறிமுகமாக கூட எடுத்துக் கொள்ளலாம்.

நானும் சிறிய வயதில் (சுமார் பதினைந்து வயது) பாட புத்தகத்தை தவிர வேறு புத்தகம் என்றால் அது பாக்கெட் நாவல் தான் என்றிருந்தேன். முதன்முதலில் கோவி.மணிசேகரன் என்று நினைக்கிறேன். மாத நாவல்கள (க்ரைம் வகையறா) பற்றி கடுமையாக ஏதோ கருத்துகள் கூறிவிட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியது என் அபிமான எழுத்தாளர்களிடம் இருந்து. நாம் ரசித்து படித்து கொண்டிருப்பதை குப்பை என்று ஒருவர் கூறினார் என்றால் ஏன் அவ்வாறு கூறுகிறார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்தது.
நூலகம் சென்று கோவி.மணிசேகரன் புத்தகம் ஒன்றை எடுத்து படித்தேன். முதல் இலக்கிய நூல் அல்லவா?. மூளை குழம்பியதுதான் மிச்சம். இலக்கியம் புரியவில்லை. சில நாட்களில் அதே இலக்கியவாதி தனக்கு ஏதோ விருது கொடுத்ததற்காக எம.ஜீ.ஆரை புகழ்ந்து பேசியதை ஒரு பத்திரிக்கையில் படித்தேன். இலக்கியத்தின் ஒரு வகை எனக்கு இலேசாக புரிய ஆரம்பித்தது.

இலக்கியத்துடனான அடுத்த உரசல் சுமார் பதினெட்டு அல்லது இருபது வயதில் கல்லூரியில் ஏற்பட்டது.மாத நாவல்கள் போர் அடிக்க தொடங்கி இருந்த காலம். என் அடிமனதில் மறைந்திருந்த இலக்கிய வெறியை ஏதோ வெகுஐன பத்திரிக்கையில் வந்த செய்தி தூண்டிவிட்டது. இலக்கியவாதிகள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க அடித்துக்கொள்வார்கள் என்பதே அந்த செய்தி. தனது கொள்கைகளின் மேல் என்னவொரு பற்று இருந்தால் இலக்கியத்திற்காக பல்லையும் இழக்க துணிவார்கள் என்று எண்ணி வியந்து போனேன். என்ன தான் வெகுஜன இதழ்கள் இலக்கியத்தின் வாசனை தன் மேல் அடிக்காமல் பார்த்துக்கொண்டாலும் அவர்களையும் மீறி சில செய்திகளை வெளியிட்டு விடுகின்றனர்.நு}லகம் சென்று இலக்கிய நூல்கள் என்று விசாரித்ததில் ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தனின் சில கதைகளை படிக்க நேர்ந்தது. மிகையாக புனையப்பட்ட எக்ஸ்ட்ரா ஆர்டினரி காரக்டர்களையே படித்து வந்த எனக்கு யதார்த்தமான கதாபாத்திரங்கள் அறிமுகமாயின். ஏற்கனவே என் தந்தையின் பாதிப்பில் பகுத்தறிவுவாத கருத்துக்களில் சற்று ஆர்வம கொண்டிருந்தேன். (நமது சமகால இலக்கியவாதிகளின் பாணியில் சொல்ல போனால் தட்டையான மேம்போக்கான கருத்துக்கள்) ஜெயகாந்தனின் சில கதைகள் மிகவும் நன்றாகவே இருந்தது. சிறு வயதிலேயே சன்னியாசி ஆக்கப்பட்ட ஒரு சிறுவனை பற்றிய கதையும் (கழுத்தில் விழுந்த மாலை) ஒரு பிராமண பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையும்(நம்ப மாட்டேளே) என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு இலக்கியவாதி(?) ஆக வேண்டும் என்ற கனவு அப்போதே தோன்றிவிட்டது என்று நினைக்கிறேன். நம் மனதில் தோன்றும் ஒரு கருத்து அல்லது உணர்வு வேறு எந்த வடிவிலாவது வேறு ஒருவர் கருத்தாகவோ உணர்வாகவோ வெளிப்படும்போது நாமும் எழுதலாம் என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

கல்லூரியில் ஏற்பட்ட அந்த ஆர்வம் வளரவில்லை. வாழ்க்கையில் முதலில் 'செட்டில்" ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். மேலும் நமது தமிழாசிரியர்கள் பலரும் காமெடியன்களாகவே இருப்பதும் தான் காரணம் என்று நினைக்கிறேன். தமது பொறுப்பை அவர்கள் தட்டி கழக்க முடியாது.பரவலான தளத்தில் நவீன தமிழ் இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று நினைத்தால் நமது தமிழாசிரியர்களை கம்பனில் இருந்து இளங்கோவில் இருந்து பிரித்து நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது முக்கியம். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில பாடல்களை மனப்பாடமாக கூறுவதையே தன் சாதனையாக பல வருடங்களாக நினைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்கள் இவர்கள். பழம்பெருமை மட்டுமே பேசி நாம் திரிவதற்கு இவர்கள் தான் பொறுப்பு.

இலக்கிய ஆர்வம் அப்போது அவ்வபோது கையில் கிடைக்கும் நூல்களை படிப்பது என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் மாத நாவல் போன்றவை படிக்கும் பழக்கம் முற்றாக தொலைந்து போனது. வாழ்க்கையில் செட்டில் ஆனபின்னால் (முட்டி மோதி ஒரு கிளார்க் உத்தியோகமாவது வாங்குவது என்பதுதான் நமது வாழ்வில் செட்டில் ஆவது என்பது)

நூலகத்தில் கிடைத்த ஒரு புத்தகத்தின் (சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு) மூலம் சுந்தர ராமசாமியை படித்தேன். அடிமனதில் உறங்கிக்கொண்டிருந்த இலக்கிய ஆசையை மீண்டும் தூண்டியவர் அவரே என்று கூறலாம். முதலில் சுந்தர ராமசாமியிடம் என்னை கவர்ந்ததே அவர் ஜம்பது வருடங்களாக எழுதியும் மூன்றே நாவல்கள் தான் எழுதியுள்ளார் என்பதே. அடுத்ததாக அவரது கதைகளின் தலைப்பு. முதன்முதலில் ஒரு புளியமரத்தின் கதை என்ற தலைப்பை பார்த்தவுடன் என் மனதில் ஓடியது பள்ளி பாடத்தில் தென்னைமரத்தை பற்றி நாங்கள் எழுதும் கட்டுரைதான். தென்னை மரத்தின் உபயோகம்.தென்னை மரத்தின் எந்த பாகமும் வீணாவதில்லை என்றெல்லாம் இருக்கும். ஒரு புளிய மரத்தை பற்றி ஒரு நாவல் எழுத என்ன இருக்கிறது என்றே நினைத்தேன். அடுத்து ஜெ.ஜெ. சில குறிப்புகள். அது ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அல்ல என்று நான் நம்பியதற்கு ஒரே காரணம் நாவல் வெளிவந்த வருடம்தான்.

இந்த இரண்டு நூல்களும் என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.அப்போதிலிருந்து (சுமார் இரண்டு வருடங்கள்) முதல் என் ஆதர்ச எழுத்தாளர் அவரே எனலாம். என்னவென்று விளக்கி சொல்ல முடியாததொரு அனுபவத்தை கொடுத்த நாவல் ஒரு புளியமரத்தின் கதை. ஒருவகையான இலக்கிய போதைக்கு ஆளாகி போனேன். ஜெ.ஜெ. சில குறிப்புகள நாவலை எத்தனை முறை படித்தேன் என்று என்னால் கூற முடியாது.


அவரின அனைத்து நூல்களையும் தேடி படித்தேன். அவருடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல அவரது கட்டுரைகள். அடிக்கடி நண்பர்கள் வட்டாரத்திலும் வீட்டிலும் அவரது கட்டுரையில் இருந்தோ கதையில் இருந்தோ சில வாக்கியங்களை திருப்பி சொல்ல ஆரம்பித்தேன். பணிஇடமாற்றம் காரணமாக மும்பாய் செல்ல நேர்ந்த நான் அப்போதுதான் படித்த சுந்தர ராமசாமியின் காகங்கள் கதையை படித்து விட்டு என் உணர்வை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று என்று தெரியாமல் என் மனைவியை அமர வைத்து படித்து காண்பித்தேன்.

வரிவரியாக நான் ரசித்து படிப்பதை பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த அவள் கடைசியாக "நீயும் காக்காய் பின்னால் போக வேண்டியதுதானே, இனிமேல் அந்த தாடிக்காரன் பற்றி என்னிடம் பேசினால் நடப்பதே வேறு", என்று எச்சரித்தாள்.

உத்தியோக நிமித்தமாக வெளி மாநிலங்களிலேயே இருக்க நேரும் நான் நூலக வசதி இல்லாமல் அவ்வபோது இருநூறு முன்னூறு என்று செலவு செய்து குண்டு குண்டு புத்தகங்கள் வாங்குவதை அவள் எதிர்த்தாள். இலக்கியவாதிக்கு முதல் எதிர்ப்பு வீட்டில் இருந்துதான் வரும் என்று எனக்கு முன்பே என் முன்னோடிகள் எச்சரித்து வைத்திருந்தபடியால் நான் அதை பொருட்படுத்தவில்லை.

ஒரு தரமான இலக்கிய வாசகன் கண்டிப்பாக தமிழக சிறுபத்திரிக்கை இயக்கத்தை புறக்கணிக்க இயலாது ஆனபடியால் சில சிறுபத்திரிக்கைகளும் வாங்கிப்படிக்க தொடங்கினேன். முக்கியமாக சிறுபத்திரிக்கைகளில் இருப்பது என்ன? அவற்றில் விவாதிக்கப்படும் விஷயம்தான் என்ன? என்று பார்த்தோம் என்றால் கணிசமான பங்கை கம்யுனிஸம் என்ற சிந்தாந்தமே ஆக்ரமித்து கொண்டு இருக்கிறது. நமக்கு தெரிந்த கம்யுனிஸம் எல்லாம் ஒரு டஜன் கம்யுனிஸ்ட் கட்சிகள் தான். ஏற்கனவே இந்தியாவில் உள்ள கம்யுனிஸ்ட்களுக்கும் கம்யுனிஸத்துக்கும் உள்ள உறவு மைசூருக்கும் மைசூர் போண்டாவுக்கும் உள்ள உறவுதான்(நன்றி திரு.சோ) என்று கேள்விப்பட்டுள்ளேன்.


மார்க்சிஸம் தெரியாமல் சிறு பத்திரிக்கைகள் படிக்க இயலாது ஆகையால் மார்க்சிஸம் பற்றி அறிந்துக்கொள்ளும் பொருட்டு மார்க்சிய மெய்ஞானம் என்ற நூலை வாங்கினேன்.

எனது புத்தக அலமாரியில் இந்த புத்தகத்தை பார்த்த என் மனைவி சில பக்கங்களை புரட்டி பார்த்து விட்டு பயந்து போனாள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்டும் தொடர்களில் வரும் சில கதைகளை சுட்டி காட்டி என்னிடம் விளக்கம் கேட்க ஆரம்பித்தாள்.( அந்த கதைகளில் உள்ளது என்னவென்றால் கதாநாயகன் தன் வீட்டு பரணில் உள்ள சில ஓலைசுவடிகளை படித்து அதனால் பல பிரச்சினைகளிலும் சிக்கி கொள்ளும் கதை). புத்தக கடையில் வாங்கப்படும் இது போன்ற புத்தகங்களுக்கும் ஓலைசுவடிகளுக்கும விததியாசம் உண்டு என்று அவளை சமாதானம் செய்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன்.

இலக்கிய உலகில் பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் கடவுளை நம்புவதுதான் உலகில் உள்ள எல்லா சிக்கல்களும் தீரும் வழி என்று கருத்து கொண்ட ஒரு குழுவும் அதை மறுத்து பகுத்தறிவு அல்லது மார்க்சியம் தான் சிறந்த வழி என்று ஒரு குழுவும் தான் நிரந்தரமான குழுக்கள்.

இதுபோக இலக்கிய உலகில்; பேசப்படுகிற இன்னொரு விஷயம் கவிதை. நம் தமிழ் சமுதாயத்தில் பெரும் கவிஞராக உலா வரும் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் கவிஞர்களே அல்ல என்ற சிறுபத்திரிக்கைளின் கருத்து எனக்கு அதிர்ச்சி தந்தது. அந்த முடிவுக்கு அவர்கள் வந்த விதமும் சரியே என்று புரிந்ததில் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். புதுக்கவிதை என்று ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் சீரழியும் அனைத்தையும் சிறுபத்திரிக்கைகள் பீச்சாங்கையால் ஒதுக்குகின்றன. சரி.கவிதைகளைப் பற்றியும் அவைகளை அணுகும் தன்மையும் அறியும்பொருட்டு மேலும் சில புத்தகங்களை வாங்கும்போது என் மனைவி பொங்கி எழுந்தாள். கேபிள் டிவிக்கு மாதம் முன்னூறு ரூபாய் (அப்போது மும்பயில் இருந்தோம்) தருகிறோமே. புத்தகத்திற்கு செலவு பண்ணுவது தப்பா? என்ற கேள்வி எல்லாம் செல்லுபடியாகவில்லை. கேபிளை இணைப்பை துண்டித்துவிடு என்று கூறிவிட்டாள்.பிறகு ஒருவழியாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி நான் மாதம் எவ்வளவு ரூபாய்களுக்கு புத்தகம் வாங்குகிறேனோ அவ்வளவு ரூபாய்களை அவளுக்கு தந்து விட வேண்டியது. இதனால் நான் வாங்கும் புத்தகங்களின் விலை இரு மடங்காக கடுமையாக உயர்ந்தாலும் வீட்டில் அமைதி நிலவியது. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்த போது என் மனைவி என்னுடன் நான் வழக்கமாக மதுரையில் புத்தகம் வாங்கும் கடைக்கு வரும் அளவிற்கு சகஜ நிலை திரும்பியது. தமிழ்நாட்டிற்கே வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை தான் வருகிற என்னை கடைக்காரர் அடையாளம் கண்டுக்கொண்டு சிரித்ததும் நான் கேட்காமலே நான் வாங்கிய நூல்களுக்கு 10 பர்சென்ட் தள்ளுபடி அளித்ததும் எனக்கு மகிழ்ச்சி அளித்த தருணங்கள்.

2 comments:

Anonymous said...

Dear saba,
All your stories are very good. Keep going. All the best. Young world needs you.

yours
Ganesh Murugan

Anonymous said...

Ilakkiya Ulagail Nuzaintha Umathu Anubavam Sirappaaka Irunthathu!