Thursday, July 16, 2009

ஒரு தமிழின துரோகியின் வாக்குமூலம் - 1

சுகுணா திவாகர் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.இதே பதிவு சில நாட்களுக்கு முன்பு இடப்பட்டிருந்தால் ( போர் முடிந்த சமயத்தில்) கற்றறிந்த பிரபல பதிவர்கள் உள்பட பலரிடமும் பல மொக்கை பின்னூட்டங்களை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி இருப்பார்.

ஈழத்தமிழர் போராட்டம் இந்த காலக்கட்டத்தில் இப்படி கடுமையான பின்னடைவை சந்தித்ததற்கு மிக முக்கியமான ஒரு தரப்பை நான் விமர்சனத்துக்கு ஆட்படுத்தவில்லை என்று சில பதிவுகளில் சொல்லி இருந்தேன். இந்த பதிவில் அழுத்தமாக இருந்த வரிகளை கவனிக்கவும்.


புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.


நம் எல்லார் மீதும் தவறு உள்ளது. இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி முதலானவர்கள் விடுதலைப்புலிகளை காலம் காலமாக விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் அஜெண்டா வேறு. அதை தவிர்த்து,ஒரு கால அளவிற்குள் இந்த கருத்தை கொண்டு வரவேண்டும் என்றால் கடந்த பத்து ஆண்டு அளவில் புலிகளின் மீதான விமர்சனங்களை நாம் நியாயமான முறையில் எதிர்க் கொள்ளவில்லை. துரோகிகள் என்று ஒரே வார்ததையில் அவர்கள் வாயை அடைத்தோம்.

அப்போது எனக்கு சுமார் பத்து வயதிற்குள் இருக்கும். நான் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களுக்கு என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்பு சமயத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டேன். அப்பா சில சமயம் பள்ளியில் இருந்து வரும்போது சில வழவழ தாள்களை கொண்டு வருவார். அதில் விடுதலைப்புலிகளின் படம், போர்க்காட்சிகள் இருக்கும். என் தந்தையிடம் தான் முதலில் அரசியல் கற்றேனாகையால் அவர் கூறியபடி என் மனதில் படிந்தது பிரபாகரன் ஒரு வீரன். சிங்கள வெறியர்களை எதிர்த்து தமிழர்களுக்காக போராடுபவன் என்பதே. புலிகளுக்கு பண உதவி செய்வது என்பது அப்போது சாதாரண விஷயம்.

அப்போது செல்வாவை பற்றியோ, அமிர்தலிங்கம் பற்றியோ எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.தினத்தந்தி இலங்கை போராட்டத்தை பற்றி தினமும் செய்திகளை தரும். பல வருடங்கள் நான் தினத்தந்தி படித்து வந்தேன். பிறகு ஆறாம் வகுப்பிற்கு பிறகு ராஜீவ்காந்தி ஈழப்போராட்டத்தை அதகளப்படுத்தியது, பிரபாகரனை மிரட்டி கையெழுத்து வாங்கியதை தொடர்ந்து துன்பியல் சம்பவம் நடந்ததுவரை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். புலிகளுக்கு ஏனைய அனைத்து தமிழர்களை போலவே முழு ஆதரவை கொடுத்தே வந்தேன். நடுவில் சில நேரம் நான் படித்த துக்ளக் என் மனதை மாற்றவில்லை. "சகோதர யுத்தம்" சமாச்சாரங்கள் எல்லாம் அப்போது எனக்கு பெரிதாக தெரியவில்லை.இன்றும் "துன்பியல் சம்பவம்" புலிகளின் நோக்கத்திற்கு எதிரான புத்திசாலித்தனமற்ற செயலாக மட்டுமே பார்க்க முடிகிறது.மற்றபடி ராஜுவ் காந்தியின் பக்குவமற்ற அரசியலே இதற்கு காரணம் என்பதுதான் என் பார்வை.

ஆனால் பிற்காலங்களில் புலிகளின் அரசியல் வெளிப்படை தன்மையற்றது என்று கருத்துக்கு நான் வந்தது 2000 ஆண்டுக்கு வெகுபின்னரே. இந்த பதிவு எழுதப்பட்ட சமயங்களில் இந்த குழப்பம் உச்சத்தில் இருந்தது.

நார்வே முன்னிலான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது, யாரால் பேச்சு வார்ததை முறிந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் எங்குமோ தெளிவாக கூறப்படவில்லை.பச்சையாக சொல்லப்போனால் தன் தேவை தனிஈழமா, இல்லையா என்பதைக்கூட புலிகளால் மிகத்தெளிவாக கூறவில்லை என்றே எனக்கு தோன்றியது. தமிழக தமிழர்களில் பலபேருக்கு இந்த குழப்பம் இருக்கும் என்றே நம்புகிறேன்.


மகிந்த வென்றபிறகு என் சந்தேகம் உறுதிப்பட்டது.கருணா பிரிந்த பாதிப்பு, முஸ்லீம்களை விரட்டியது போன்ற சம்பவங்கள் எனக்கு தெரியவந்தது மிகப்பின்னரே.அதற்குள் பதிவுலகம் என்னை ஆக்ரமித்து இருந்தது. நண்பர்களிடம் விவாதிப்பேன். ஒரு நண்பர் புலிகள் தனிஈழததை அடைந்துவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு இன்று தேவை அடுத்த நாடுகளின் அங்கீகாரம் மட்டுமே என்றார். இந்த விஷயததை இவ்வளவு சுலபமாக பார்க்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக விளக்கிக்கொண்டது என் சந்தேகத்தை போக்கியது.நண்பர்கள் மீண்டும் கூறினார்கள்.இது ஒன்றுமே இல்லை. இப்போது நடக்கும் சண்டையின் மூலம் இலங்கை அரசாங்கம் இனவெறி அரசாங்கம் என்பது உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் நோக்கம் என்றனர்.


கடைசி ஒரு வாரத்தில் பொங்கி எழுந்து மேற்குலகை போராட்டங்களால் உலுக்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது லாபி திறமைகளையும் போராட்ட நோக்கங்களையும், புலிகள் ஐரோப்பிய யுனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட போதோ காட்டியிருந்திருக்க வேண்டும். நம்மை விட புலிகளின் மேல் ஒரு சாகச பக்தியை இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் புலிகள் தோற்பார்கள் என்பதை இவர்களால் இன்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதற்கு இன்றும் சில நண்பர்களின் இடுகைகளே சாட்சி.


" புலிகள் சுட்டு ராணுவ வீரர் சாவு, இலங்கை ராணுவம் அதிர்ச்சி"

"அடுத்த பொய், பிரபாகரன் மகன் மரணம் என்று இலங்கை புதுக்கதை"

கடைசி கட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் எனக்கு தெரிந்த சுடும் நிஜங்கள் - அடுத்த பதவில் தொடரும்

4 comments:

ரவி said...

வருத்தத்துடன் தொடர்ந்து படிக்கிறேன். நீங்கள் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியது போல, கிடைத்த வாய்ப்புகளை லெவரேஜ் செய்யாமல் போனதன் விளைவை பார்த்தீர்களா ?

Adriean said...

புலம்பெயர்ந்த தமிழர்களில் புலி ஆதரவாளர்கள் புலிகளின் நீண்டகால பிரசாரத்தால் அனேகமாக மன நோயாளியாகவே மாறியிருந்தனர். இப்போ இவர்களை மகிழ்விக்க செய்திகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது. இதையும் படித்து பாருங்கள்.
http://tamilnetcanada.com/index.php?option=com_content&view=article&id=75%3A2009-06-26-00-25-44&catid=34%3A2009-06-15-11-13-30&Itemid=122

அதே மாதிரி புலிகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புலி ஆதரவாளர்கள் பலர் முற்றாக விலகியும் உள்ளனர்.

Muthu said...

சந்திரன்,

இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவாக கூறமுடியாது. கண்மூடித்தனமான ஆதரவு ( விமர்சனமற்ற) முக்கிய காரணம்

Kaargi Pages said...

ம.க.இ.கவின் சமீபத்திய வெளியீடு ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்கள் - “ இன்று தமிழமக்களை அரசியலற்ற வெறும் அனுதாபம் கொண்டவர்களாக மாற்றிவிட்டிருக்கிறது தமிழினவாதிகள் செய்த அரசியல்” ( வார்த்தைகள் வேறுவிதமாக இருக்கலாம் ஆனால் சாரம் இது தான் )

எத்தனை சத்தியமான வார்த்தைகள்? மேலும் நாமெல்லாரும் ( குறிப்பாக தமிழகத் தமிழர்கள் ) கடுமையான ரசிக மனோபாவத்திற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். அது ஈழமாகட்டும் வேறு எந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளாகட்டும்..

போர் உச்சத்தில் இருந்த போது புதினம் செய்திகளைப் படித்து வந்த நன்பன் ஒருவன் இப்படிச் சொன்னான் - “ஹ... சூப்பர்டா மச்சி.. இன்னிக்கு அவிங்காளுங்க 100 பேர நம்மாளுக்க போட்டுத்தள்ளி இருக்காங்க” இதற்கும், “ சச்சின் இன்னிக்கு சென்ச்சுரி அடிச்சிருக்கான்” இதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?

அதனால் தான் மூன்று நாள் எழவு கொண்டாடிவிட்டு வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். இப்படி தமிழர்களை அரசியல் மொக்கைகள் ஆக்கியது யார்? எல்லோருமே தான். எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது.

பதிவர் நன்பர் ஒருவரோடு பிரபாகரன் மரண செய்தி வந்த நாளில் சேட் செய்து கொண்டிருந்தேன், அவர் சொல்கிறார் - 'அவரெல்லாம் சாகவே மாட்டாரு.. வேணா பாரு அவரு திரும்பி வந்து எல்லோரையும் பீஸ் பீஸாக்கப் போறாரு” - பிரபாகரன் என்ன ராம்போவா?

ஒரு போராளி. நல்ல முறையிலோ தவறான முறையிலோ இன ஒடுக்குதலை எதிர்த்து மூன்று தசாப்தங்களாக போராடியவன்.. அவன் கடைபிடித்த நடைமுறைகளில் விமர்சனம் இருந்தாலும் அவன் நோக்கத்திலோ தியாகத்திலோ எந்த கேள்வியும் இல்லை.. இன்றைக்கு அவன் மரணச் செய்தி எப்பேர்பட்ட எழுச்சியை, கொந்தளிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்? அந்தச் செய்தியை மறைத்து அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமல் செய்தது யார்?

பிரபாகரன் இல்லாவிட்டால் வைகோவிற்கும் நெடுமாறனுக்கும் அரசியலே இல்லை..

சொல்ல நிறைய இருக்கிறது... ஆனால் இன்னமும் கூட ‘எமோசனல் இடியட்'களாய் இருக்கும் பதிவர்களை மேலும் மேலும் குத்தி விட மனதில்லை.. சில நாட்கள் போகட்டும்