Monday, November 03, 2008

அவ்ளோதாங்க பிளாக் என்பது......

சொல்றேன் கேளு.

காலை முழிச்சிப்பவே ஏழு மணிக்கு மேல் ஆச்சு. இன்னைக்கு டையத்துக்கு ஆபிஸ் கிளம்பறது கஷ்டம்தான்னு நெனச்சிட்டுகிட்டே கிளம்பினேன். நைட் அடிச்ச எஃபஸ் சரக்கு சரியில்லை. உண்மையிலே சரக்கு சரியில்லையா அல்லது லோக்கல் கிங்பிஷரை பழகுன ஆளுக்கு இது சரியா வராதா என்று தெரியலை. இங்கே லோக்கல் சரக்கு என்னன்னு கேட்டு வாங்கனும் அடுத்த வாரம்.


குளிச்சி,கிழிச்சி, காண்டினன்டல் உணவுமுறைங்கற பேர்ல நான் தங்கற ஓட்டல்ல தினமும் தர்ற சமாசாரத்தை போய் சாப்பிட்டு வந்தேன்.வழக்கம் போல் ஒரு கப் பழரசம், இரண்டு முட்டை ( அதுல ஒண்ணை மதியத்துக்கு எடுத்து வைச்சிட்கிட்டேன்), காஞ்ச பன், அதுக்கு தொட்டுக்க ஜாம், பட்டர், மற்றும் டீ சாப்பிட்டேன். இன்னைக்கு என்னமோ தயிரு வச்சிருந்தான். (மதியத்துக்கு ஆவும்னு அதையும் பேக் பண்ணிட்டேன்!).

முத நாள் ராத்திரி நானே செஞ்சு வந்திருந்த பருப்பு குழம்பு ( அப்படித்தான் நினைக்கிறேன்) சுடவச்சேன். இங்கேயே வாங்கின அரிசியை( வழவழன்னு சரியாவே வரலை. பச்சரியாம், நம்ம ஊரில் நாம சாப்பிடுறது புழுங்கலரிசியாம்.யாருக்கு தெரியும் இதெல்லாம்?) வடிச்சி பேக் பண்ணி எடுத்துட்டு நிமுந்து பார்த்தா மணி எட்டுக்கு மேல ஆயிருந்தது. சாதாரணமா நம்ம ஊரா இருந்தா நான் கிளம்பறதுக்கு ரெண்டு நிமிசம் தான் ஆகும். இங்கன எனக்கு டை கட்டவே கால் மணிநேரம் ஆயிடுச்சு. ஒரு பக்கமா தொங்கிகிட்டு காமெடியாதான் இருந்துச்சு. அப்புறம் கோட்டு, சூட்டு எல்லாம் போட்டுகிட்டு கிளம்ப எட்டே முக்கால் ஆயிடுச்சு.

மெட்ரோ புடிச்சு ஆபிசு போக கால் மணி லேட்டாயிடுச்சு. ஒரு ஆளு கேட்டான். நம்ப ஊருகாரன்தான். இங்க ரொம்ப நாளா இருக்கான். என்ன சார் இனிமே ஒன்பது மணிக்கு முன்னாடி வந்துருங்க சார்ங்கான். டேய் நான் வந்து ரெண்டு வாரத்துல உன்னிய ஒன்பது மணிக்கு முன்னாடி ஒரு நாளும் பார்த்ததே இல்லையெ என்று நினைச்சிகிட்டு மையமா சிரிச்சி வைச்சேன்.

கூட வேலை செய்ற சைனாகாரன் வேலை என்னன்னே சொல்லி குடுக்கவே ரெண்டு வாரத்திற்கு மேலே எடுத்திட்டு இருக்கான். எப்பவுமே ஒண்ணுமே இல்லாத மேட்டர பெரிசா பேசறதே இவனுங்க வேலையா இருக்கு. எது எடுத்தாலும் உடனே ஹரிசாண்டல், வெர்டிகல், லீவரேஜ் அப்படி இப்படிம்பாங்க. கடைசியில் அது ஒண்ணுமே இருக்காது. அப்படித்தான் ஓடுச்சி மதியம் வரைக்கும். நீ ஆணியெ பிடுங்க வேண்டாம். ஏற்கனவே புடுங்கின ஆணிக்கு டாக்குமெண்ட் வெச்சிருப்பயே அதகொடுன்னுனென்.

மதியம் சாப்பாடு பத்தல. டிபன் பாக்ஸ் சமாசாரமே ஆகாம இருந்துட்டு இப்ப டப்பா தூக்கினா அப்படித்தான் இருக்கும்டா சுனா பானா, கண்டுக்காத அப்படியெ போய்கிட்டு இரு அப்படின்னு தேத்திகிட்டு டீயை குடிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன். நாளைக்கு கொஞ்சம் அதிகமா சமைச்சி டப்பால அடைச்சி வெச்சி கொண்டாரணும்னு நெனச்சிட்டுகிட்டேன்.

சாயங்காலம் ஆறு மணிங்கறது எப்படியும் ஏழாயிடுது. தங்கற இடத்துக்கு வந்து சேர ஏழரை ஆயிடுது. அப்படியெ வழியில் ஒரு கடையில் லெக் பீசா ஒரு பாக்கெட் சிக்கன் வாங்கிட்டு வந்துட்டேன். எண்ணெயில் பொரிச்சிரலாம்னு ஐடியா. நேத்து சிககன் குழம்பு வைக்க போய் என்ன சொதப்பினென் என்ன ஆச்சுனு தெரியலை. கசப்பா இருந்தது.

நைட்டுக்கும் நாளைக்கும் சமைக்கணும். அப்புறம் நாளைக்கு எந்த ஆணியை புடுங்கணும்னு பார்க்கனும். கொஞ்ச நேரம் பி.பி.சி. (செய்தியில் அவ்வளவு ஆர்வமான்னா அதெல்லாம் இல்ல.வேற எந்த சேனலும் கிடையாது).

இப்படித்தான் டெய்லி ஓடுது. செரி வாரகடைசியில் ஏதாவது பண்ணலாம்னா துவைச்சி போட்டா துணிகூட காயறதில்லை.....


குழப்பமா இருக்கா....


(நண்பர் ஒருவர் சாரு ரசிகர். தமிழ் பிளாக் எழுத்தாளர்களை பற்றி சாரு வைத்திருக்கும் மட்டமான அபிப்பிராயத்தை என்னிடம் சொன்னார். அவர் கெடக்கறார்.பிளாக் எழுதறது ஒரு டைரி மாதிரிதாண்டா என்றேன். அவருக்கு உதவும் விதமாக வெளிநாட்டில் பொட்டி தட்டும் ஒருவரின் வாழ்வில் ஒரு நாளை படம் பிடித்துள்ளேன்.)

No comments: