Monday, February 27, 2006

சலுகைகள் ஏன் தேவை?

இந்த கட்டுரையின் முதல் பாகம் இங்கே.நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் பழனிசாமி ஒரு தாழ்த்தப்பட்டவர். அவருக்கு இப்போது வயது 40 இருக்கலாம .அவர் வங்கியில் பியூனாக சேர்வதற்கு முன் செய்த வேலைகளை எல்லாம் இங்கே எழுத முடியாது. கூலி வேலைகளுக்கு போயிருக்கிறார் .மூட்டை தூக்கியிருக்கிறார். ஓட்டலில் வேலை செய்திருக்கிறார். இதன் பிண்ணனியில் பார்த்தால் அவர் இன்று ஒரு வங்கியில் கிளார்க் (கேஷியர்) ஆகியிருப்பதின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ளமுடியும்.

அவருடைய வீடு என்பது ஒரு சிறுகுடிசைதான்.அதில் அவர், அவருடைய மனைவி, மூன்று மகன்கள் அனைவரும் வாழ்கின்றனர்.வாயில்லா பூச்சியான அவர் சில பியூன்கள் கேட்பதுபோல் வங்கியின் வாடிக்கையாளர்களிடம் இனாம் கேட்கமாட்டார்.ஆனால் தன் சொந்த செலவில் (ஆமாங்க..சொந்த செலவில்) வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார்.

அவரின் மூன்று குழந்தைகளுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தர அவரால் இன்று முடியும் . அவர் முன்னேறியதும் இல்லாமல் ஒரு தலைமுறையே முன்னேற வழிவகை அமைத்தது இடஒதுக்கீ்ட்டு கொள்கை மற்றும் அரசாங்க சலுகைகள்தான். சலுகைகளை எதிர்த்து நானும் பேசியிருக்கிறேன்.வாதம் செய்திருக்கிறேன்.( என் துக்ளக் நாட்களில்).ஆனால் அதை விட்டு கீழே இறங்கி மக்களை பார்த்தால்தான் தெரியும் நமது சமுதாய அமைப்பின் கோர முகம்.இது போல் எத்தனை பழனிசாமிகள் இருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்.ஒவ்வொரு சேரிகளிலும் இன்றும் இது போன்று பல்லாயிரம் பழனிசாமிகளை பார்க்கமுடியும்.வாய்ப்பும் வழி காட்ட ஆட்களும் கிடைத்தால் அவர்களும் ஒரு நாகரீகமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.


பத்தாம் வகுப்பிலேயே இப்படி தடுமாறியவர் எப்படி அலுவலக வேலைகளை செய்வார் என்பது அறிவுஜீவிகளின் அடுத்த கேள்வி. எல்லோருக்கும் தெரியும். நாம் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்பது.


நான் கல்லூரி காலத்தில் பார்த்திருக்கிறேன். பொள்ளாச்சி அருகில் ஏ.நாகூர் என்ற ஊரில் ஒரு பள்ளியில் படித்துவிட்டு சில மாணவர்கள் வருவார்கள். மதிப்பெண் எல்லாம் ப்ளஸ் டு வில் ஆயிரத்திற்கு மேல்தான்.ஆனால் படிக்கும் முறையை கண்கொண்டு பார்க்கமுடியாது.(இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாது).


வங்கியில் இன்றைய நிலையில் எல்லா வேலையும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே கம்ப்யூட்டரில் டைப் அடிப்பதுதான்(டேட்டா என்ட்ரி) ஒரே வேலை. தேவையான கட்டுபாடுகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. கவுண்ட்டரில் அமரும் ஒரு நபரிடம் இன்று முக்கியமாக எதிர்ப்பார்க்கப்டுவது சிரித்த முகத்துடன் மரியாதையாக, வரும் வாடிக்கையாளரிடம் பேசவேண்டிய முறை.அது பழனிசாமியிடம் நிறையவே உள்ளது.அது போதும் என்று நான் நினைக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக பழக்கம் என்று ஒன்று உள்ளது. ஒரு மூன்று மாத பழக்கத்தில் பழனிசாமியால் எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்ளமுடியும் என்றே நம்புகிறேன்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில இருந்து நிறைய பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் வங்கிதுறையில் முன்னேறி வருவது எனக்கு சந்தோஷத்தை தருகிறது.இது எதனால் வந்த விழிப்புணர்ச்சி என்று எனக்கு தெரியாது.ஆனால் இதற்கு பெரியாரும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

மிக சமீபமாக வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் சமாச்சாரம் ஒரு முக்கிய காரணம்.1990 களில் தான் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இடஒதுக்கீடு அமலாகி இருப்பது என்பது எனக்கெல்லாம் ஒரு அச்சர்யகரமான அதிர்ச்சியாகவே உள்ளது. சுதந்திரம் பெற்ற நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு தான் இது நடந்துள்ளது என்று பார்க்கும்போது நமது அரசியல்வாதிகளின் கமிட்மெண்ட் லெவல் கேள்விக்குறியதாகிறது.

வி.பி.சிங் நிஜமாகவே ஒரு வரலாற்று நாயகர் என்றால் மிகையில்லை.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.நான் அப்போது பள்ளி மாணவன்.ராஜீவ்காந்தி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தார் சிங். முதலில் நிதி அமைச்சகமா அல்லது பாதுகாப்பா என்ற ஞாபகம் இல்லை.ஆனால் முதலில் ஒரு ஊழலை கண்டுபிடித்ததால் துறை மாற்றப்பட்டு அங்கும் ஒரு ஊழலை வெளிகொணர்ந்து புனித பிம்பம் ராஜீவை தோலுரித்தார்.


சில நாட்களுக்கு முன் இங்கே வலைப்பதிவில் ஒரு நண்பர் சர்வ சாதாரணமாக வி.பி.சிங் தான் போர்பர்ஸ் விஷயத்தில் கையூட்டு பெற்ற குற்றவாளி என்ற அளவிற்கு ஒரு கருத்தை போட்டார்.அதிர்ச்சி அடைந்தேன்.சுதந்திர இந்தியாவில் மீடியாவின் பங்கு என்ன என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.தங்களுக்கு பிடிக்காத ஆட்களை பற்றிய பிம்பத்தை நன்றாக கட்டமைக்கின்றன இந்திய மீடியாக்கள்.


நான் மேற்சொன்ன பதிவில் சொல்லியிருந்தப்படி மண்டல் கமிஷனை கைகழுவிவிட்டிருந்தால் வி.பி.சிங் பதவியில் தொங்கிக் கொண்டிருந்திருக்கமுடியும்.அவர் அதை செய்ய நினைக்கவில்லை என்பதிலிருந்து வி.பி.சிங் அவர்களுக்கான வரலாற்று இடம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என் கொள்ளலாம்.


யுகம் யுகமாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற அரசாங்கமும் கைகொடுக்காவிட்டால் யார் வருவார்கள்?ஆனால் இன்னொருபுறம் அரசாங்கத்தின் இன்னொரு கூத்தை பாருங்கள்.

வரும் மார்ச் ஒன்பதாம் நாள் அனைத்திந்திய வங்கி ஊழியர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.. அரசாங்கத்தின் எத்தனையோ கொள்கைகளை வங்கி ஊழியர்கள் எதிர்த்துக்கொண்டு இருந்தாலும் இந்த முறை வேலைநிறுத்தம் செய்வதற்கான காரணம் வேறு.


வங்கிகளில் பணியில் இருக்கும்போது ஒரு ஊழியர் இறந்தால் வாரிசுக்கு வேலை தருவது (Compassionate grounds appointment) என்று ஒரு முறை உண்டு.அவ்வாறு கொடுக்கப்படும் வேலை கிளார்க்காகவோ அல்லது பியூனாகவே அவர்களின் படிப்புக்கு ஏற்றவாறு தரப்படும்.பத்தாவது படித்த யாரும் வங்கி கிளார்க் வேலையை செய்யமுடியும்.யாரும் இந்த முறையில் நேரடியாக யாரையும் ஜெனரல் மானேஜராக சேர்க்கப்படுவதில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.


தனியார் துறையில் இதுவெல்லாம் இல்லையே ஆகையால் அரசும் இதுபோன்ற சலுகைகள் எல்லாம் கொடுக்கக்கூடாது என்று நெகடிவ்வாக திங்க் செய்பவர்கள் இதுபோன்ற விஷயங்களை தனியார் துறைகளுக்கும் கொண்டுவருவது எப்படி என்று பாஸிடிவ்வாக திங்க் செய்யலாம்.


ஒருகுடும்பத்தில் சம்பாதித்துக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவன் திடீரென்று இறந்துவிட்டால் அந்த குடும்பத்தை சப்போர்ட் செய்யவேண்டி அமைக்கப்பட்ட நல்ல திட்டம் அது. ஆண்டுதோறும் வங்கிகளில் புதிதாக ஆட்கள் நியமிக்க தேவை இருந்துக்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய சதவீதத்தை இப்படி எடுத்துக்கொண்டால் ஒன்றும் குடிமுழுகிபோய்விடாது என்பது என் எண்ணம்.


ஆனால் அரசாங்கம் இந்த முறையையும் கைவிட சொல்லி வங்கிகளை வலியுறுத்தி வருகிறது.இதை எதிர்த்துத்தான் இந்த வேலைநிறுத்தம்.இதற்கு சிந்திக்கும் பொதுமக்களின் ஆதரவை வேண்டுகின்றனர் ஊழியர்கள். ஏற்கனவே ஏகப்பட்ட ஏ.டி.எம் கள் உள்ளதால் பணத்தேவைக்கு எந்த பிரச்சினையும் இராது.(இதற்காக அரசுத்துறை வங்கிகளில் இருந்து அக்கவுண்ட்டை குளோஸ் செய்து ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகளுக்கு செல்பவர்கள் பணம் வசூலிக்க உருட்டுக்கட்டை சகிதம் ஆட்கள் வருவார்கள் என்பதை மனதில் இறுத்தி கொள்வது அவசியம்.)


ஆகவே வேலைநிறுத்த நாளன்று நீங்கள் வீதியில் நடக்கும்போது வங்கி ஊழியர்கள் யாராவது ஜிந்தாபாத் போட்டுக்கொண்டிருந்தால் அவர்களை திட்டாமல் உங்கள் ஆதரவை அவர்களுக்கு தெரிவி்த்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.தொடர்புடைய பதிவாக இந்திய அரசுத்துறை வங்கிகளை பற்றிய என் பழைய பதிவையும் படிக்கலாம்.

18 comments:

Thangamani said...

முத்து, இரண்டு பாகங்களையும் படித்தேன். இடஒதுக்கீடு தலித ஒருவர் அரசுப்பணியில் நுழைவதற்கான ஒருவழியாக இருக்கிறது. அதன் மூலம் அவரது பொருளாதார நிலை மேம்படுகிறது என்ற கருத்தைச் சொல்லுகிறது. அந்த இடஒதுக்கீட்டால் பயன் பெற ஒரு கருணை உள்ளம் கொண்ட இன்னொருவரின் உதவியும், ஊக்கமும் தேவையாய் இருக்கிறது. ஆனால் அவரைவிட 10ஆவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து (ஒரே முறையில்) தேர்வான பலர் இருக்கையில் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்குவது எந்த வகையில் நியாயம்? அது திறமையின்மையை ஊக்குவிப்பதாக ஆகாதா? ஓட்டுக்காக இது போன்ற தேச நசிவு வேலைகளைச் செய்தால் பாரதம் எப்படி வல்லரசாகும்? தகுதியின்மையால் தேசம் அழிந்து போகாதா? இராணுவம் சீர்குலைந்து போகாதா?

இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றவில்லையா?

இந்தச் சலுகைகளை ஓட்டுப்பொறுக்கும் அரசாங்கங்கள் ஏன் செய்யவேண்டும்?

***
ஜனநாயகத்தில் மக்களின் பங்களிப்பே முக்கியமானது என்பதை மேற்குலகம் என்ற நாகரீக உலகம் சொல்லி வருதாலேயே நாம் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு ஓட்டுரிமையை வழங்கவேண்டிய நிர்பந்தத்துக்கு வந்தோம். இல்லாவிட்டால் அம்மக்களுக்கு ஏன் ஓட்டுரிமையை வழங்கவேண்டும்? அதுவே ஒரு சலுகை அல்லவா? மக்களின் மீது நமக்குள்ள கருணையை அது காட்டுகிறதல்லவா? சலுகை என்று புரிந்துகொண்டால் இப்படித்தான் இதை யோசிக்கமுடியும். தலித் உயிர் வாழ்வதே ஒரு சலுகைதான். பெண்களுக்கு (கடைசியில்) சாப்பிடக்கிடைப்பதே சலுகைதான்; நமது காருண்யம் தான். பேரன்புதான். இதில் இடஒதுக்கீடு நமது பெருங்கருணை; ஹோட்டல்களில், இரயில்களில், பொது இடங்களில் ஒன்றாய் பயணிப்பது, சேர்ந்து உண்பது இவையெல்லாம் தீனர்களுக்கான நமது தயாளம் அன்றி வேறென்ன? நமது கருணைக்கு ஒரு எல்லை இல்லையா? கருணை என்ன எப்போதும் சுரக்கிற வஸ்துவா? தண்ணிரே எப்போதும் சுரப்ப்பதில்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். கருணை தண்ணீரைவிட பெருமதிப்பு வாய்ந்தது; மேலோராகிய நம்மிடமிருந்து கடவுட் தன்மையின் பெயராலும் (அந்தக்காலத்தில்), ஜனநாயகத்தின் பெயராலும் (இன்றைய நசிவு நாட்களில்) சுரப்பது! இதற்கு, ஒரு அளவு, ஒரு காலவரையறை போன்றவை உண்டு என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

***

உங்கள் தலைப்போடு நான் உடன்படவில்லை முத்து!

Muthu said...

தங்கமணி,

நன்றி..நான் மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். என் பார்வையில் என் அனுபவத்தில் கண்டதை எழுதுகிறேன். உங்களுடைய பின்னூட்டத்தில் இருந்து
எனக்கு சில தகவல்கள் கிடைக்கின்றன.இதைப்பற்றி யோசிப்பேன். தேடி படிப்பேன்.

என்னுடைய அனுபவங்கள், எழுத்துக்கள் ஆகியவை இன்னொரு பரிமாணத்தில் (அதாவது பொதுஜன மனப்பார்வையில் இருந்து ஒரு விஷயத்தை அணுகும்) என்று வைத்துக்கொண்டால் உங்களை போன்றவர்களுடைய பதிவுகளும், பின்னூட்டங்களும் படிப்பவர்களின் பார்வையை விசாலப்படுத்தும் என்பதாகத்தான் தான் என் எழுத்துக்களை நான் பார்க்கிறேன்.

நீங்கள் சொல்லிய அரசாங்கம் ஏன் இந்த சலுகைகளை கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை பின்னெடுத்துக்கொண்டே போகலாம்.

பெருங்கருணை ஏன் என்று பார்ப்பது ஒரு பார்வை.அந்த பார்வையை கடந்து தான் ஒருவர் அடுத்த நிலைக்கு வரமுடியும் என்பது என் எண்ணம்.இதைப்பற்றி நீங்கள் ஒரு தனிப்பதிவு போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் வங்கியில் பணியில் சேர்ந்த புதிதில் ஐ.ஆர்.டி.பி லோன் எல்லாம் எதற்கு என்று எங்கள் மேலாளரிடம் சண்டை போட்டுள்ளேன்.அவர் அதற்கு சொன்ன பதில் அப்போது புரியவில்லை.இப்போது புரிகிறது.

Muthu said...

jaysri,

//இந்த மனப்பான்மை புரையோடி இருக்கிறது என்பதை 4 பதிவு போடும் அளவுக்கு விரிவாகச் சொல்ல நினைக்கிறேன்//

கண்டிப்பாக எழுதுங்கள்..இந்த இடத்திற்கு தேவையில்லை என்பதால் நான் எழுதவில்லை...



களப்பணி என்பதை குறிப்பிட்டு ஒரு செயலில் என்னால் அடக்கமுடியாது..இலக்கியம், பத்திரிக்கை துறை, சமூக சேவை, அரசியல் அனைத்தும் கலந்ததாக அமைக்க ஆசைப்படுகிறேன். பார்ப்போம்.

என்னுடைய பழைய வங்கி பதிவுக்கான சுட்டி....

http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113706509480595359.html

Muthu said...

sivanadiyar

//இது அனைவருடைய வழ்விலும் வரும் இருண்ட காலம், பின் நோக்கி பார்த்தால் சுமார் 1500 வருடங்கள் முன்பு நம் சமுதாயத்தில் இந்த கோர முகம் இல்லை என்பது பலருக்கும் புரிவதில்லை.ஒரு வேளை அவர்கள் இன்னும் துக்ளக் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையும் புரியவில்லையோ என்னவோ? //

well said keep it up

ரவி ஸ்ரீநிவாஸ் said...

1990 களில் தான் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இடஒதுக்கீடு அமலாகி இருப்பது என்பது எனக்கெல்லாம் ஒரு அச்சர்யகரமான அதிர்ச்சியாகவே உள்ளது.

FYKI
Mandal Commission recommended reservation for backward classes
in central government employment.
in 1990 this was implemented.
Reservation for Schedule Castes and
Schedule Tribes was included in
the constitution.Regarding reservation for Backward Classes
various states started implementing
reservations since the 1950s. There
was a reservation system during British rule also.In 1930s some states (e.g. Travancore and Mysore)
implemented reservation system in their respective territories.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I understand that due to court verdicts there is a change in the
policy regarding appointment on compassionate grounds.I was told that the courts did not accept the view that a family memeber of the deceased staff was automatically entitled for such an appointment.

Muthu said...

ravi>

the above said scheme is still intact in central govt offices and various state governments...

i feel being a policy decision of governments courts should not have a say over this....

Thangamani said...

ரவி,

மத்திய அரசு 1990களில்தான் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது என்பதே இங்கு குறிப்பிடப்படுகிற விதயம். அதற்கு முன் அதற்கான தேவை இல்லையா? அதை செய்வதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை நீஇங்கள் அறியவில்லையா? மாநில அரசுகள் இடஒதுகீட்டை வெவ்வேறு வடிவங்களில் வழங்கியதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? சொல்லப்போனால் மாநில அரசுகளை விட முன்பேயே இதை மத்திய அரசு செய்திருக்கவேண்டாமா? ஏன் செய்யவில்லை? அல்லது மத்திய அரசுப்பணி என்பதே ஒரு சாராருக்கான இட ஒதுக்கீடா? அரசியல் சட்டத்தில் இதைப்பற்றி இருந்து என்ன பயன்? அரசியல் சட்டத்தில் எல்லோரும் சமம் என்றுதான் இருக்கிறது. பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்று கூட இருக்கலாம். ஆனால் ஏன வரதட்சனை ஒழிப்புச்ச்சட்டம்/ஏன் தீண்டாமைத் தடுப்புச் சட்டம் போன்ற நடைமுறை சட்டவடிவங்கள் தேவைப்படுகின்றன? சர்வமும் விஷ்ணுமயம் என்பது தான் எல்லாக் காலங்களிலும் புத்தகங்களில் இருக்கிறதே , அப்புறம் ஏன் தீண்டாமையும், பெண் அடிமைத்தனமும்? புத்தகத்தில் இருப்பதால் என்ன பயன்?


தனியார் மயமாக்கலை இன்று மத்திய அரசு முன்னெடுக்கிறது. அதில் இடஒதுக்கிடு என்ன இடம் வகிகிறது?

இடஒதுக்கீடு ஒரு சலுகையா? சமூக நீதியா? இந்தக்கேள்வியில் இருந்துதான் இந்தப் பிரச்சனை ஆரம்பிக்கப் படவேண்டும என்று நினைக்கிறேன். சலுகை என்றால் அதற்கொரு எல்லையும், வடிவமும் சமூக நீதியென்றால் பிறிதொரு எல்லையும், வடிவமும் இருக்கிறதல்லவா? மத்திய அரசு, மாநில அரசு, ஆங்கில அரசு, தனியார் என்றெல்லாம் பார்க்கையில் சமூக நீதி என்றால் ஒரு புரிதலும், சலுகை என்றால் புரிதலும் கிடைப்பது சாத்தியமல்லவா?

இப்போது பொது மக்களிடம் ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், சிந்தனையாளர்கள் போன்றவர்கள் இடஒதுக்கீட்டை எப்படி அறிமுகம் செய்கின்றன, எப்படி எடுத்துப்போகின்றன என்பதையும் அதன் பின்னனியில் யாரது நலன் முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பதும் கேள்விக்கும் விவாதத்துக்கும் உரியதல்லவா?

நமது கருணை கேள்விக்குள்ளாக்கப்படும் போது நமக்கு கோபம் வருவது நியாயமானதாக இருக்கலாம்; ஆனால் இன்னொருவரது உரிமை பற்றி அவர் கேள்வி எழுப்புவது எந்தவிதத்திலும் நியாயக்குறைவானதில்லை அல்லவா?

நாம் தீனதயாளர்களா? பங்காளிகளா?

சந்திப்பு said...

முத்து பழனிச்சாமியை முன்னேற்றியது எப்படி அனுபவம் முன்மாதிரியானது. எதையும் பேசுவது எளிது. செயலில் நிரூபிப்பது வேறு. அந்த வகையில் ஒரு சகோதரருக்கு வாழ்க்கை உயர்வு கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! 10ஆம் வகுப்புக்கு 5 சான்றிதழ் என்பது உலவிகளுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இது ஒரு எதார்த்தம். இந்த கிணறை தாண்டுவது எப்படி என்று தெரியாமல்தான் பலர் தங்களது வாழ்வில் கடைசிப் படியில் நின்று கொண்டு இருக்கின்றனர். அதேபோல் நீங்கள் கூறியிருப்பதுபோல் எந்த துறையாக இருந்தாலும் அனுபவமும் - பயிற்சியுமே மிக முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு துறையிலும் புரிந்து கொண்டு செயலாற்றக்கூடிய ஒருவர் நீண்டகாலமாக பணியாற்றி வந்தால், பல படித்த மேதாவிகளைக்கூட மிஞ்சி விடுவார்கள். பழனிச்சாமிக்கும் வாழ்த்துக்கள்.... உங்கள் அனுபவ கட்டுரையில் நான் மிகவும் ரசித்தது கம்யூனி°ட் கோபால் குறித்த பதிவு. இந்த கோபாலின் அனுபவமும் படித்த பல மேதாவிகளை கேள்விக்குள்ளாக்கும் ஒரு பதிவே! தொடரட்டும்... உங்கள் பயணம்... நானும் விரைவில் இதுபோன்ற ஒரு பதிவை பதியலாம் என்றிருக்கிறேன்....

Amar said...

வி.பி.சிங்க சம்பந்தமாக எனது பெயரை எழுத உங்களுக்கு ஏன் இத்தனை தயக்கம் என்று தெரியவில்லை.

குற்றம் நிருபிக்கபடும் முன்னர் ஒருவரை குற்றவாளி என்று அறிவிக்க என்ன அவசரமோ!

1953ல் அமைக்கபட்ட காக்கா கலெக்கர் கமிஷனை மறந்து விட்டீர்கள்.(all-India Backward Classes (Kaka Kalelkar) Commission )

ஜூன் 1951ஆம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் நடைபெற்றது தெரியுமா தமிழினி?

தாழ்த்தபட்டவர்கள் கல்வி , பொருளாதாரா மற்றும் சமுதாய முன்னேற்றம் அடைய அரசு special provisionsகளை கொண்டு வரலாம் என்று அப்போது திருத்தம் செய்யபட்டது.

அது தான் முதல் படி.

வேலைவாய்ப்புகளில் இட-ஒத்துகீடு எல்லாம் சரி தான், அனால் தாழ்த்தபட்டவர்களின் கல்வியில் ஏன் யாருமே கவனம் செலுத்துவது இல்லை?

அப்படி அனைத்து சமுதாயத்தினரும் நல்ல கல்வி பெற்று இருந்தால் பழனிச்சாமி போன்றவர்கள் இன்று இன்னும் நல்ல நிலையில் இருப்பார்களே.

தாழ்த்தபட்டவர்களின் கல்வியை கெடுப்பது எது?

அதை எப்படி சரி செய்வது என்று ஏன் எந்த அரசியல்வாதியும்(உங்கள் மகாத்மா வி.பி.சிங் உட்பட) சிந்திப்பதில்லை?

Muthu said...

//வி.பி.சிங்க சம்பந்தமாக எனது பெயரை எழுத உங்களுக்கு ஏன் இத்தனை தயக்கம் என்று தெரியவில்லை.//

பயம்தான் காரணம் :))))

இல்லைன்னா இப்படி வைச்சுக்கலாம். ஒருவரை எதற்கு பெரிய ஆள் ஆக்கவேண்டும் என்பதாகவும் வைத்துக்கொள்ளலாம் :)))))))))))))

//குற்றம் நிருபிக்கபடும் முன்னர் ஒருவரை குற்றவாளி என்று அறிவிக்க என்ன அவசரமோ!//

இது ராஜீவ்வை பற்றியது என்றால் நோ. காமெண்ட்ஸ்

//1953ல் அமைக்கபட்ட காக்கா கலெக்கர் கமிஷனை மறந்து விட்டீர்கள்.(all-India Backward Classes (Kaka Kalelkar) Commission )//

கமிஷன் அமைக்கப்பட்டது 1950 ல். பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவது 1990 லா.என்ன நியாயங்க் இது?


//வேலைவாய்ப்புகளில் இட-ஒத்துகீடு எல்லாம் சரி தான், அனால் தாழ்த்தபட்டவர்களின் கல்வியில் ஏன் யாருமே கவனம் செலுத்துவது இல்லை?//

நியாயமான கேள்வி..நானும் இதையே கேட்பதாக எடுத்துக்கொள்ளலாமே...இதுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது..நீங்கதான் சொல்லணும்...

சந்திப்பு said...

//வேலைவாய்ப்புகளில் இட-ஒத்துகீடு எல்லாம் சரி தான், அனால் தாழ்த்தபட்டவர்களின் கல்வியில் ஏன் யாருமே கவனம் செலுத்துவது இல்லை?//


சமுத்ரா, யாருமே என்றால் பா.ஜ.க. ஆட்சியையும் சேர்த்துக கொள்ளலாமா? கேரளத்தில் 100 வீதம் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்களே இதை நான் மறந்ந்து விட்டீர்கள். இது இடதுசாரிகளின் சாதனையல்லவா?

Amar said...

//கமிஷன் அமைக்கப்பட்டது 1950 ல். பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவது 1990 லா.என்ன நியாயங்க் இது?//

மன்டல கமிஷனும் அப்படி தான் 1980ல் பரிந்துரை அமல்படுத்துவது ...?


//நியாயமான கேள்வி..நானும் இதையே கேட்பதாக எடுத்துக்கொள்ளலாமே...இதுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது..நீங்கதான் சொல்லணும்...//

எனக்கு தெரிந்தால் நான் ஏன் உங்களை கேட்கிறேன்.

//சமுத்ரா, யாருமே என்றால் பா.ஜ.க. ஆட்சியையும் சேர்த்துக கொள்ளலாமா? கேரளத்தில் 100 வீதம் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்களே இதை நான் மறந்ந்து விட்டீர்கள். இது இடதுசாரிகளின் சாதனையல்லவா?//

யாரை வேன்டுமானாலும் செர்த்துகொள்ளுங்கள்.
இடதுசாரிகளின் சாதனையா?

கேரளத்தில் இடதுசாரிகள் உலகில் முதன்முறையாக தேர்தல் மூலம் 1957அம் ஆன்டு ஆட்சிக்கு வந்தார்கள்.

1991ஆம் ஆன்டு தான் ஐ.நா கேரளத்தில் 100% மக்கள் கல்வி அறிவு பெற்றுவிட்டதாக அறிவித்தது.

இதில் மிஷினரிகளின் பங்கு தான் அதிகம்.
கடைசி கனக்கு எடுப்பின் படி அங்கு 91% மக்களே கல்வி அறிவு பெற்றுள்ளனர்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

"நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் பழனிசாமி ஒரு தாழ்த்தப்பட்டவர்"
"மிக சமீபமாக வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் சமாச்சாரம் ஒரு முக்கிய காரணம்.1990 களில் தான் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இடஒதுக்கீடு அமலாகி இருப்பது என்பது எனக்கெல்லாம் ஒரு அச்சர்யகரமான அதிர்ச்சியாகவே உள்ளது. சுதந்திரம் பெற்ற நாற்பது ஆண்டுகளுக்குப்பிறகு தான் இது நடந்துள்ளது என்று பார்க்கும்போது நமது அரசியல்வாதிகளின் கமிட்மெண்ட் லெவல் கேள்விக்குறியதாகிறது.
"

அவர் எழுதியது சரிதானா என்பதை என் பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.நான் எழுதியது தவறு என்றால் அவர் அதற்கான ஆதாரங்கள் தரட்டும்.

தலித்கள்,பழங்குடியினருக்கு மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்டம் உறுதி செய்துள்ளது.மண்டல் கமிஷன் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தர வகை செய்தது. தேசிய உடைமயாக்கபட்ட வங்கிகள், காப்பீட்டு
நிறுவனங்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் அரசியல் சட்டத்தின் விதிகளின் படி தலித்கள்,பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.உதாரணமாக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது 1969ல்.அப்போதிலிருந்தே இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. முத்து இதை
தெளிவாகக் குறிப்பிடாமல் ஏதோ 1990லிருந்துதான் இட ஒதுக்கீடு இருப்பது போல் எழுதியிருக்கிறார். அவர் எழுதாமல் விட்ட வேறு சிலவும் இருக்கின்றன. அதையும் கருத்தில் கொண்டால்தான் இட ஒதுக்கீடு என்பது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது புரியும்.அவற்றை நான் பின்னூட்டமாக பின்னர் இடுகிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Samudra
The left played an important role in making Kerala literate.I hope you know why the Namboodripad govt. was dismissed in 1959.When we say left it includes CPI , CPI M
and other left parties and groups besides writers and intellectuals with progressive views.

Muthu said...

ரவி,

நான் அந்த குறிப்பிட்ட பத்தியில் கூற வந்தது வி.பி.சிங் பற்றிய குற்றச்சாட்டும் அதனை பொறுத்து பிற்படுத்தப்பட்டவர்களுககுமே இடஓதுக்கீடு 90 களில் தான் வந்தது என்பதற்கான ஆச்சரியமும்தான்.

அது எங்குமே இடஒதுக்கீடு அதுவரை இல்லை என்ற பொருளை உங்களுக்கு தந்திருக்குமாயின் அது என் தவறே.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கே இடஒதுக்கீடு 1990 களில் தான் வந்தது எனக்கு இன்னும் ச்சரியம்தான்.நான் பலனடைந்தவன் என்றும பதிவு செய்கிறேன்.)

தயா said...

சலுகைகள் அவசியம் தான். யாருக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள ஒருவர் பொருளாதார சூழ்நிலைகளால் படிக்க வழியில்லாத போது தான்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது. சலுகையினாலயே தகுதியில்லாதவர்கள் பதவிகளில் அமர்ந்து அந்த பணியையே கேள்விக்ககுள்ளாக்கிவிடுகின்றனர்.

இன்னும் பலர் சலுகை கிடைக்கிறது என்பதற்காக தாங்கள் உயர்ந்த சாதி என பெருமை கொள்பவர்கள் கூட ரகசியமாக தங்கள உருப்படாத பிள்ளைகளுக்கு தாழ்ந்த சாதி என சான்றிதழ் வாங்கிக்கொண்டு தகுதியானவர்களின் வாய்ப்பையும் பறித்துவிடுகிறார்கள்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் எவருக்கும் தகுதியின் அடிப்படையில் சலுகைகள் செய்யலாம். ஆனால் சாதி ரீதியாக இல்லை.
இதற்கு நீங்கள் துக்ளக் நாட்களில் தூங்கியதாக நினைத்து வருத்தப்பட வேண்டாம்.

நம்மிடம் உள்ள பிரச்சினை சிக்கலை தீர்க்க சுலபமான வழியை தேர்ந்தெடுக்காமல் சிக்கலான வழிமுறையை எந்த ஒரு ஆய்வுமின்றி திணித்து தீர்வு ஏற்படாமல் சிக்கலை மேலும் சிக்கலாக்குவது தான்

Amar said...

நன்றி ரவி.

1969 ஆம் ஆண்டு முதலே பழனிச்சாமி போன்றவர்களுக்கு இட-ஒதுக்கீடு உள்ளது என்ற உன்மையை எடுத்து காட்டியதற்க்காக.

இந்திய அரசியல் சட்டத்தை 1950 களில் திருத்தியதால் தான் இந்த இட-ஒதுக்கீடுகள் இன்று வழங்கமுடிகிறது.

இப்போது எங்கள் சாதியை தாழ்த்தபட்டது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறி கொண்டு மாதம் ஒரு சாதி மக்களாவது கோவை Collectorஐ பார்க்க சென்று கொண்டு இருக்கிறார்கள்.இதற்க்கு ஒரு சங்கம் வேறு.